பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அ.தி.மு.க எம்பி வேணுகோபால் பேசுகையில் `தாய் போல் செயல்படவேண்டிய மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை நடத்துகிறது.
மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்துக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கிறது.
2019ம் ஆண்டு தேர்தல் குறித்து மக்களே முடிவு செய்வார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி’ என்றார்.
ராகுல் காந்தி பேசி முடித்ததும் பிரதமர் மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டியணைத்தார். ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்த போது பிரதமர் மோடி இடைஇடையே சிரித்துக் கொண்டே ராகுலின் உரையை கவனித்துக் கொண்டிருந்தார். ராகுல் காந்தி பேச்சும் மோடியின் ரியாக்ஷனும் அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தி பேச்சு..
*பிரதமரின் சிரிப்பில் ஒரு பதற்றம் தெரிகிறது.
*பிரதமர் நாட்டுக்காக உழைக்கவில்லை; சில தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார்.
*அமித்ஷா மகன் ஜெய் ஷா விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்?
*என் கண்ணைப் பார்த்து பிரதமர் பேச வேண்டும். ஆனால் அதனை அவர் தவிர்க்கிறார்.
*மத்திய அரசின் பொய் வாக்குறுதிகளால் விவசாயிகளும், இளைஞர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
*மக்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி பிரதமர் ஏமாற்றியுள்ளார்.
*நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி பிரதமர் நாட்டுக்காக உழைக்காமல், தொழிலதிபர்களுக்காக வேலை செய்கிறார் என குற்றம் சாட்டினார்.
*நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ம.க புறக்கணித்தது. பா.ம.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் இன்று நாடாளுமன்றம் செல்லவில்லை.
*சிவசேனா நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணித்துள்ளது பா.ஜ.க-வுக்கு சாதகமாக அமையும். சிவசேனாவுக்கு அவையில் 18 உறுப்பினர்கள் உள்ளனர்.
*நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சிவசேனா பங்கேற்காது என அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா திடீரென மக்களவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க போவதில்லை என முடிவு செய்துள்ளது.
*நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய தெலுங்கு தேசம் எம்.பி ஜெயதேவ் கல்லா `இது மோடி அரசுக்கும் ஆந்திராவுக்கும் நடக்கும் தர்மயுத்தம்’ என்றார்.
*விவாதம் தொடங்கியதுமே பிஜு ஜனதாதளம் கட்சி விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றுக் கூறி வெளிநடப்பு செய்தது. இது பா.ஜ.க-வுக்கு ஆதரவான நிலைபாடு ஆகும்.
* நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும் என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார்.
* நாடாளுமன்றத்தில், பா.ஜ.க அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியுள்ளது.
மத்திய பட்ஜெட் வெளியான பிறகு, ஆளும் பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது தெலுங்கு தேசம். ஆந்திர மாநிலத்தின் நீண்டநாள் கோரிக்கையான தலைநகர் அமராவதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் மற்றும் போலவரம் அணைக்கட்டு, விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகாததைக் காரணம் காட்டி, கூட்டணியிலிருந்து பிரிந்தார் சந்திரபாபு நாயுடு.
அதன்பின், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் முன்னதாக நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது தொடர்ந்து வலியுறுத்திவந்தன.
ஆனால் தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி, அ.தி.மு.க போன்ற கட்சிகள் வேறு பல கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டுவந்ததால், எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்கவில்லை.
இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட 6 பேர் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளித்தனர்.
இதை ஏற்ற சுமித்ரா மகாஜன், வரும் 20-ம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம்குறித்து விவாதிக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, இன்று மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம்குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
*தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் அனைவரும் இன்று நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும் என அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்தார். ஆனால், எம்.பி. திவாஹர் ரெட்டி மட்டும் நாடாளுமன்றத்துக்கு வரப் போவதில்லை என அறிவித்துள்ளார். `பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தால், எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை’ என்று அவர் கூறியுள்ளார்.
*`பா.ஜ.க. அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும், தார்மீக அடிப்படையில் தி.மு.க-வின் முழுமனதான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
*’ஆந்திரா பிரச்னைகளுக்காக, நாடாளுமன்றத்தில் அம்மாநில அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறது. தமிழக அரசு காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 நாள்கள் வெளியில் இருந்து போராடினார்கள்.
எந்த மாநிலமும் முன்வந்து நமக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில், நாம் எதற்காக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்?’ என்பது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிலைபாடு!