அரபு பாலைவனத்தில் புதைக்குழியில் ஷாருக்கான மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
ஷாருக்கான் தனது தோழி மற்றும் பாதுகாவல்கள் இருவருடன் அரபு நாட்டில் உள்ள பாலைவனம் ஒன்றில் பயணம் மேற்கொண்ட போது, ஷாருக்கானின் கார் அங்கிருந்த புதைக்குழி ஒன்றில் சிக்குகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஷாருக்கான் மற்றும் அந்த காரில் இருந்த அனைவரும் உடனடியாக காரின் மேற்புறமாக வெளியேறி தப்பிக்க முயற்சி செய்கின்றனர்.
இவ்வாறாக முயற்சி செய்யும் பாதுகாவலர்கள் இருவரும் தவறுதலாக அந்த குழியில் விழுந்து, சிறிது நேரத்தில் மூழ்கி விடுகின்றனர். காரும் மெல்ல மெல்ல குழியில் இறங்கிக் கொண்டே செல்ல ஷாருக் கானின் தோழி அலற ஆரம்பிக்கிறாள்.
அவளது அலறலைக் கேட்டு அங்கிருந்த குகை ஒன்றிலிருந்து ராட்சத உடும்பு ஒன்று புதைக்குழி நோக்கி வருகிறது. இந்நிலையில், செய்வதறியாது தவித்த ஷாருக்கான் அந்த குழியில் உள்ள மண், சகதியை தூக்கி அந்த உடும்பு மீது வீசுகிறார்.
நொடிக்கு நொடி பதற்றம் கூடிக் கொண்டே செல்ல, அந்த ராட்சத உடும்புவின் உடலில் இருந்து ஒரு மனிதன் வெளியேறுகிறான்.
பின்னர் தான் இது ஷாருக்கானை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட சேட்டை என்பது தெரிய வருகிறது. அந்த குழியும் போலியாக செய்யப்பட்டது தான்.
பின்னர் குழியில் விழுந்த அனைவரும் வெளியே தூக்கப்படுகின்றனர். ஷாருக்கான் அதிலிருந்து வெளியேறி உடன் இந்த திட்டத்திற்கு காரணமானரை சென்று அடிக்க செல்கிறார். பின்னர் கடுமையாக அவரை திட்டிவிட்டு அங்கிருந்து செல்ல முயற்சிக்கிறார்.
ஆனால் அந்த நபர் ஷாருக்கை விடுவதாக தெரியவில்லை. தொடர்ந்து அவர் பின்னாலேயே சென்று ஷாருக்கானை சமாதானம் செய்வது போல அந்த வீடியோ முடிகிறது.
வீடியோ:
டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருடன் நடிகர் ஷாருக்கான் கடும் மோதல்
அமீரகத்தில் உள்ள பிரபலமான பொழுதுபோக்கு அரபு டி.வி. சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளராக எகிப்து நாட்டு நடிகர் ரமீஸ் கலால் உள்ளார். இவர் நடத்தும் ‘ரமீஸ் பி ஏலா அப் பித் நார்’ எனும் வேடிக்கையாக அச்சுறுத்தும் நிகழ்ச்சியானது பொதுமக்களிடையே மிகவும் பிரபலம்.
பொது இடத்தில் போலியாக பயங்கரவாதிகளை உருவாக்கி தனிநபர்களை உண்மையில் கடத்திச் செல்வதுபோல காட்சிகள் அமைத்து தத்ரூபமாக ஒளிபரப்பு செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் அமீரகத்துக்கு வருகை தரும் பிரபலங்களை சீண்டி அச்சுறுத்தும்விதமாக விளையாடி, அதனையும் டி.வி.யில் ஒளிபரப்புவார்கள்.
புதைகுழியில் விழுந்த ஷாருக்கான்
2 நாட்களுக்கு முன்பு அபுதாபி பாலைவனப் பகுதிக்கு இந்தி நடிகர் ஷாருக்கான் வந்தார். இவரது வருகையை முன்கூட்டியே தெரிந்துகொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் ரமீஸ் கலால், ரகசியமாக படக்குழுவினருடன் அந்த பாலைவன பகுதிக்கு வந்தார். அங்கு யாருக்கும் தெரியாமல் செயற்கை புதைகுழியை வெட்டினார்.
அந்த இடத்தில் நடிகர் ஷாருக்கான் ஒரு பெண்ணுடன் செல்லும் வகையில் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அந்த புதைகுழியில் நடிகர் ஷாருக்கான் மற்றும் உடன்வந்த பெண்ணை விழவைத்தார்.இதைத்தொடர்ந்து ராட்சத பல்லி உருவ முகமூடி அணிந்துவந்து ஷாருக்கானை ரமீஸ் கலால் பயமுறுத்தினார். சிறிது நேரத்தில் முகமூடியை கழற்றிய அவர், ‘ஹாய் ஷாருக்கான், இது ஒரு டி.வி.ஷோ’ என கூறியதும் நடிகர் ஷாருக்கான் கடும் கோபம் அடைந்தார்.
மன்னிப்பு கேட்டார்
அப்போது ஷாருக்கான் அவரை தடுத்து சத்தம் போட்டார். அதோடு அவரை கீழே தள்ளி அவர் மீது ஏறி அமர்ந்து ‘இப்படித்தான் செய்ய வேண்டுமா? இனிமேல் இதுபோல செய்வாயா? என கேட்டார். பின்னர் அவரை தரையில் இழுத்துக்கொண்டே சென்றார். அவரை எழுப்பி மீண்டும் கோபத்துடன் காலால் இடறி கீழே தள்ளினார்.
இனி இதுபோல செய்வாயா? என ஷாருக்கான் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார். அவரது கோபத்தை உணர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ரமீஸ் கலால், நடிகர் ஷாருக்கானிடம் மன்னிப்பு கேட்டார். சிறிது நேரம் கழித்து அவரை மன்னித்துவிட்டதாக ஷாருக்கான் தெரிவித்தார்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சி அதே டி.வி.யில் ஒளிபரப்பானது. இதைத் தொடர்ந்து இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.