இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுகின்ற தனது கடப்பாட்டைத் தட்டிக் கழிக்கும் நோக்கத்துடனேயே காலத்தை இழுத்தடித்துச் செல்கின்றது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கும் சர்வதேச நாடுகளுக்கும் நல்ல பிள்ளையாகத் தன்னைக் காட்டிக்கொள்கின்ற அதேவேளை, சர்வதேச அரங்கில் விடயங்களை ஒப்புக்கொள்வதும், பின்னர் அவற்றைத் தூக்கி எறிந்து செயற்படுகின்ற போக்கையும் அது கடைப்பிடித்து வருகின்றது.
சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் முற்றிலும் முரண்பாடான நிலையில் செயற்படுவது தனக்கு சர்வதேச அளவில் பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதை அரசு உணராமலில்லை. இருப்பினும் சர்வதேசமோ அல்லது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையோ இலங்கைக்கு எதிராக அதிகாரபூர்வமாக எதனையும் செய்ய முடியாது என்ற தற்துணிவில் காரியங்களை முன்னெடுத்து வருகின்றது.
சர்வதேசத்திற்கு ஒரு முகத்தையும், உள்நாட்டில் சிங்கள மக்கள் மற்றும் போர்ப்பாதிப்புகளுக்கு உள்ளாகிய தமிழ் மக்களுக்கு இருவேறு முகங்களையும் காட்டுவதில் இதுவரையில் சிங்கள அரசுகள் வெற்றிபெற்றிருப்பதையே காண முடிகின்றது.
யுத்தம் முடிவுக்கு வந்து பத்து வருடங்களாகின்றன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்ற நிபந்தனை ரீதியிலான பொறுப்பை ஏற்று நான்கு வருடங்களாகின்றன. ஆயினும் தனது கடப்பாட்டை நிறைவேற்றுவதில் உளப்பூர்வமாகவும் நேர்மையாகவும் அரசாங்கங்கள் நடந்து கொண்டதாகத் தெரியவில்லை.
பொறுப்பு கூறும் விடயத்தில் இராணுவத்தையும், சிங்கள மக்களையும் காட்டிக்கொடுக்கவில்லை. அவர்களை உயர்ந்த நிலையொன்றில் வைத்து பேணி வருவதான ஒரு போக்கையே ஆட்சியாளர்கள் காட்டி வருகின்றனர்.
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றச் செயல்கள் என்பவற்றிற்கு முதல் நிலையில் இராணுவமே பொறுப்பேற்க வேண்டும். உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் முதல் நிலையில் அரசாங்கங்களே பதிலளிக்க வேண்டிய நிலையில் இருந்தன. இருக்கின்றன. ஆனால் இரண்டு நிலைகளிலும் எந்தவிதமான பாதிப்புக்கும் இடமளிக்கப் போவதில்லை என்பதில் ஆட்சியாளர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
இதன் அடிப்படையிலேயே அவர்கள் இறுதி யுத்தத்தின்போது மனித உரிமைகள் மீறப்படவில்லை என்றும், போர்க்குற்றங்கள் இழைக்கப்படவில்லை என்றும் அடித்துக் கூறுகின்றனர். அதேவேளை, எந்தக் காரணத்தைக் கொண்டும் இராணுவத்தைக் கைது செய்யவோ இராணுவ அதிகாரிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, விசாரணைகளுக்கு ஆளாக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டையும் அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.
இறைமையுள்ள ஓர் அரசாங்கம் என்ற ரீதியிலும், ஒரு நாடு என்ற அந்தஸ்திலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றிற்கு வாய்மொழி மூலமாகவும், பிரேரணைகளின் வழியாகவும், அறிக்கைகள் வடிவிலுமே இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளது. அதற்கும் அப்பால் அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்ற வல்லமை இல்லாத நிலைமையையே பேரவையினதும், மனித உரிமைகள் ஆணையாளரினதும் செயற்பாடுகள் இதுவரையிலான காலப்பகுதியில் இருந்து வந்திருக்கின்றன.
நவநீதம்பிள்ளை மனித உரிமைகள் ஆணையாளராகப் பணியாற்றியபோது, இலங்கைக்கு எதிராகக் கடும்போக்கினைக் கடைப்பிடித்து வந்தார். அதன் காரணமாகவே ஐ.நா.வின் ஓர் உயர்மட்ட இராஜதந்திரியாக இருந்த போதிலும், அவர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் கண்டனங்களை எழுப்பிய அரசியல் ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளைக் காண முடிந்தது.
தற்போதைய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்விலும், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்சலட் ஜெரியா அம்மையார் இலங்கைக்கு எதிரான கடும்போக்கிலான அறிக்கையொன்றையே சமர்ப்பித்துள்ளார்.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை வரிக்குவரி முழுமையாக இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கை வெளியாகியதைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசிய பிராந்தியத்திற்கான ஆய்வாளர் தியாகி ருவன் பத்திரண சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான சம்பவங்கள் குறித்த உண்மைகள் கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுவதுடன், இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், மீள் நிகழாமையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வலியுறுத்துகின்றது என தெரிவித்துள்ள ருவன் பத்திரண, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30-/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு அமைவாக மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை மனித உரிமைகள் பேரவை வரவேற்க வேண்டும். ஐ.நா. தீர்மானத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இலங்கையின் நிலைமைகளைப் பேண வேண்டும். காலக்கெடு ஒன்றின் அடிப்படையில் இலங்கை தனது கடப்பாட்டை நிறைவேற்றும் வகையில் கண்காணிப்பதுடன், 30-/1 தீர்மானத்தை மீளுறுதிப்படுத்துவதற்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த ஆய்வாளர் தியாகி ருவன் பத்திரண குறிப்பிட்டிருக்கின்றார்.
இலங்கையின் பொறுப்பு கூறுகின்ற செயற்பாடுகள் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய கதையைப் போன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/-1 தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்கின்ற இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2019 ஆம் ஆண்டின் முற்பகுதிக்கான அமர்வு பயன்தரத்தக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பது முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐ.நா.வின் 30/-1 தீர்மானம், இதுவரையில் காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு செயற்பாடாகவே இருந்து வந்துள்ளது. சிறிய அளவிலான முன்னேற்றத்தை மாத்திரம் தனது முதலீடாகக் கொண்டு மேலும் மேலும் கால அவகாசத்தைப் பெறுவதிலேயே அரசு குறியாக இருந்து இதுவரையில் வெற்றிபெற்றிருக்கின்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு ஐ.நா.வின் செயற்பாடுகளின் ஊடாக நீதி கிடைக்கும் என கொண்டிருந்த நம்பிக்கையை படிப்படியாக இழக்கின்ற நிலைமைக்கே ஆளாகியிருக்கின்றார்கள். மெது மெதுவாக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற உத்தியைக் கைக்கொண்டுள்ள அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான காரணங்களுக்காக ஆதரவு தெரிவித்து வருகின்ற தமது அரசியல் தலைமையாகிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீதும் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை இழந்து, தாங்களாகவே நீதி கோருவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் மேலும் மேலும் அரசுக்குக் கால அவகாசம் வழங்குவதை அவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்கள். ஐ.நா.வின் கண்காணிப்பு இலங்கை மீது தொடர வேண்டும் என்பதே தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் நிலைப்பாடாகும். அத்தகைய கண்காணிப்பு இல்லாமல் போனால்,இலங்கை மீதான சர்வதேசத்தின் கவனம் அற்றுப் போய்விடும். அத்தகைய ஒரு நிலையில் இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கும், அநீதிகளுக்கும் நீதி கிடைப்பதும் அரிதாகிவிடும் என்பதும் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதியையும் நியாயத்தையும் பெறுவதற்கு எத்தனை காலம் பொறுத்திருப்பது? எத்தனை காலம் காத்திருக்க முடியும் என கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்.
மனித உரிமைகள் நிலைமையில் இலங்கை முன்னேறுவதற்குப் பதிலாக பின்னடைவை நோக்கிய சரிந்து செல்கின்றது என்பதே யதார்த்தமாகும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குகின்ற பொறுப்பை தந்திரோபாய ரீதியில் தட்டிக்கழிக்கின்ற போக்கைக் கடைப்பிடித்துள்ள அரசாங்கங்கள், சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்குகின்ற நடவடிக்கைகளில் துணிகரமான தந்திரோபாய செயற்பாடுகளையே முன்னெடுத்திருக்கின்றன.
எதேச்சாதிகாரத்தைத் தகர்த்து, நல்லாட்சியை நிறுவிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசாங்கம், கடும் போக்கில் செயற்பட்ட மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தின் போக்கை மென்வலு ரீதியான முறையில் ஆரவாரமின்றி வெற்றிகரமாகக் கடைப்பிடித்துச் செல்கின்றது.
மேலோட்டப் பார்வையில் எதிர்ப்பரசியல் செய்து வந்த தமிழர் தரப்பு அரசியல் தலைமையின் ஆதரவைப் பெற்று அவர்களின் ஒத்துழைப்புடன் நல்லாட்சி அரசாங்கம் தனக்கான பல காரியங்களை வெற்றிகரமாகச் சாதித்துள்ளது.
இந்தக் காரியங்களின் மூலம் தமிழர் தரப்பு அரசியல் பலவீனமடைந்துள்ளது மட்டுமல்லாமல், அந்த அரசியலின் ஆணிவேராகிய வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், சுயநிர்ணய உரிமை, பகிரப்பட்ட இறைமையுடன் கூடிய பிராந்திய அரசியல் நிர்வாக உரிமை போன்றவை மட்டுமல்லாமல், அந்த அரசியலின் பாதுகாப்பு, அதன் எதிர்கால இருப்பு என்பனவும் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை உள்ளவர்களாகவும், அவர்களது அரசியல் நலன்களில் ஆர்வம் உள்ளவர்களாகவும் தோற்றம் தருகின்ற ஜனாதிபதியும் பிரதமரும் அவர்களின் தலைமையிலான அரசாங்கமும், தோலிருக்க சுளையை விழுங்குவதைப் போன்று தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதிலும், அத்துமீறிய வகையில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதிலும், பௌத்தர்களே இல்லாத போதிலும், பூர்வீக தமிழ்ப் பிரதேசங்களில் பௌத்த சின்னங்களையும் புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த விகாரைகளை நிறுவுவதிலும் கேட்பாரின்றியும், தடுப்பாரின்றியும் வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவதைக் கண்கூடாகக் காண முடிகின்றது.
எதிர்க்கட்சி என்ற நிலையில் இருந்த போதிலும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையும் அதன் செயல் வல்லமையுள்ள முக்கியஸ்தர்களும் இது விடயத்தில் பேசா மடந்தைகளாகவும், எதையுமே கண்டுகொள்ளாதவர்களாகவுமே காணப்படுகின்றார்கள். இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தாங்களாகவே இந்த அநியாயங்களுக்கும் அப்பட்டமான உரிமை மீறல்களுக்கும் நியாயம் கேட்பதற்கு வீதியிலும் களத்திலும் இறங்கியிருக்கின்றார்கள்.
காணி உரித்துக்காக கேப்பாப்புலவு மற்றும் மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை, அரிப்பு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அடங்கலாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நியாயம் கேட்பதற்காக அவர்களின் உறவினர்களும் வீதியில் இறங்கி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகப் போராடி வருகின்றார்கள்.
வலிந்து ஆட்களைக் காணாமல் ஆக்கியிருப்பது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பது சொல்லித் தெரிய வேண்டிய விடயமல்ல. அதேபோன்று குடியிருந்த காணிகளையும், கிராமத்தையும் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் அபகரித்து வைத்துக் கொண்டு, காணி உரிமையாளர்களிடம் உரித்துக்கான ஆவணங்களைக் கோருகின்ற ஓர் இன அழிப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகிறது என்பதும் இரகசியமான விடயமல்ல.
பூர்வீகக் குடிகள் என்ற ரீதியிலும், பிறப்புரிமை வழியாக பிரஜைகள் என்ற ரீதியிலும் இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றாகத் திகழ்கின்ற சிறுபான்மையின மக்களாகிய தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் அரச அதிகார பலத்தைப் பிரயோகித்து பேரின மக்களாகிய சிங்கள மக்களை அத்துமீறி குடியேற்றுகின்ற கைங்கரியம் துணிச்சலாகவும் சட்டரீதியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வனவள திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், பௌத்த விவகாரங்களுக்கான திணைக்களம், கமநலசேவைகள் திணைக்களம் ஆகிய முக்கியமான திணைக்களங்களை ஒன்றிணைத்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் தமிழர் பிரதேசங்களில் காணிகளைக் கையகப்படுத்துகின்ற நடவடிக்கையும், சிங்கள மக்களைக் குடியேற்றுகின்ற நடவடிக்கையும், புத்தர் சிலைகளை நிறுவுதல், பௌத்த விகாரைகளை நிர்மாணித்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மனிதன் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு வாழ்பவன். இயற்கையுடன் வாழ்வதென்பது அவனுடைய பிறப்புரிமை. அது அவனுடைய வாழ்வுரிமை. மண்ணில் வாழ்கின்ற மனிதனுக்கு மண்ணுரிமை உண்டு. அது யாராலும் கொடுக்கப்பட முடியாதது. அதேபோன்று யாராலும் பறிக்கப்படக் கூடாததும் ஆகும்.
ஆனால் இலங்கையில் இந்த உரிமை தமிழ் மக்களுக்கு – குறிப்பாக யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஒரு பகுதியினருக்கு மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்ந்த இடங்களும், வாழ்ந்த பிரதேசத்தைச் சேர்ந்த இடங்களும் அரச நிர்வாகம் என்ற அதிகார பலத்தின் மூலம் அப்பட்டமாக அபகரிக்கப்படுகின்றன.
இது, தமிழ் மக்களுடைய தாயகத்தின் இருதயப் பகுதியாகிய முல்லைத்தீவு மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை மனித உரிமை, அடிப்படை வாழ்வுரிமை என்பவற்றை மீறியுள்ள இந்தச் செயற்பாடுகள் குறித்து, தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர் வி.நவநீதன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வையொட்டி ஜெனிவாவுக்குச் சென்றுள்ள அவர், இந்த விடயம் தொடர்பாக விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார். மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்கள், தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்த மயமாக்கல், வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் ஊடாக தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு, அவர்களின் பொருளாதாரம் சூறையாடப்படுகின்ற நடவடிக்கைகள் என்பவை குறித்து இந்த அறிக்கை ஆதாரங்களுடன் பேசுகின்றது.
இந்த நடவடிக்கைகள் கடந்த நான்கு வருடங்களாக நல்லாட்சி அரசாங்கத்தினாலும், யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஆறு வருடங்களாக முன்னைய அரசாங்க காலத்திலும் இடம்பெற்று வருகின்றன. ஆனால் இந்த நடவடிக்கைகள் குறித்தும் இதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்தும் இதுவரையிலும், தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆக்கபூர்வமான முறையில் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. அதேபோன்று மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள் என்பன மீறப்படுவதுடன், இன அழிப்பு நடவடிக்கையாக தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற இந்த நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்திற்கோ அல்லது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கோ உரிய முறைப்படி கொண்டு சென்றதாகவும் தெரியவில்லை.
இத்தகைய ஒரு நிலையில்தான் தமிழர் மரபுரிமைப் பேரவை என்ற பெயரில் உதயமாகியுள்ள அமைப்பு தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளும், வாழ்விடங்களும் அபகரிக்கப்படுகின்ற அநியாயத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து, வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதுடன் நின்றுவிடாமல் ஐ.நா.வின் நேரடி கவனத்திற்கும் இந்த விடயத்தைக் கொண்டு சென்றுள்ளது.
மகாவலி ‘எல்’ வலயத்தின் கீழ் ஆறாயிரம் சிங்களக் குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு மற்றும் வவுனியா மாவட்டத்தின் வடக்கு பிரதேச செலயகப் பிரிவு என்பவற்றில் குடியேற்றப்பட்டுள்ளன. இந்தக் குடியேற்றத்திற்காக 1984 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த தமிழ் மக்களுடைய வாழ்வாதார காணிகள் 2000 ஏக்கர் நிலப்பகுதி கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
மகாவலி அபிவிருத்தி அதிகார சபை யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் இந்த சிங்களக் குடியேற்றத்திற்காக மூவாயிரம் மில்லியன் ரூபா நிதியை செலவிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு தமிழ்க் குடும்பம் கூட நன்மை அடையவில்லை.
தொட்டக்கண்டல் குளத்தில் 26 ஏக்கர், சிவந்தமுறிப்பில் 120 ஏக்கர், எரிஞ்ச காட்டில் 490 ஏக்கர், குஞ்சுக்கல்வெட்டியில் 12 ஏக்கர், நெலும்வௌ என சிங்களத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள உந்தராயன்குளத்தில் 264 ஏக்கர், அடையாகருந்தனில் 144 ஏக்கர், ஆமையன் குளத்தில் 239 ஏக்கர், கூமாவடி கண்டலில் 68 ஏக்கர், பூமடு கண்டலில் 120 ஏக்கர், மரியாமுனையில் 520 ஏக்கர் காணி என மொத்தமாக 2003 ஏக்கர் காணிகள் இந்தத் திட்டத்திற்கென தமிழ் மக்களுடைய பிரதேசங்களில் இருந்து அபகரிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற பல விடயங்களை உள்ளடக்கிய அந்த அறிக்கை இதுகால வரையிலும் இல்லாத வகையில் ஆதாரபூர்வமான தகவல்களுடன் தமிழ் மக்கள் மீது அரசு மேற்கொண்டுள்ள இன அழிப்பு நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கின்றது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் உரிய முறையில் கவனம் செலுத்தி முறையான அழுத்தங்களின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை நெறிப்படுத்துவார்களா என்பது தெரியவில்லை.