மும்பை: சினிமாவில் நடிக்க வாய்ப்பு தரவேண்டுமானால் தனது ஆசைக்கு இணங்க வலியுறுத்திய திரைப்பட இயக்குனரை பொது நிகழ்ச்சியில் ராக்கி சாவந்தின் தோழி கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் இளம் இயக்குனர் சச்சேந்திர சர்மா இயக்கத்தில் ‘மும்பை கேன் டான்ஸ் சாலா‘ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஆஷீஷ் சர்மா, பிரசாந்த் நாராயண், ஆதித்ய பஞ்சோலி, சக்தி கபூர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராக்கி சாவந்துடன் அவரது நெருங்கிய தோழி மனீஷாவும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி நடைபெற்ற மேடையில் அனைத்து நட்சத்திரங்களுடன் இயக்குனர் சச்சேந்திர சர்மா நின்றவாறு செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென மேடையில் ஏறிய மனீஷா, இயக்குனர் சச்சேந்திர சர்மா கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த காட்சியை பார்த்து அரங்கில் இருந்தவர்கள் திகைத்து போனார்கள். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
தான் இயக்கப் போகும் புதுப்படத்தில் நடிக்க வாய்ப்புத்தர வேண்டுமானால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று சச்சேந்திர சர்மா வலியுறுத்தியதாலேயே அவருக்கு பாடம் புகட்டும் வகையில் அவரது கன்னத்தில் அறைந்ததாக மனீஷா கூறினார்.
ஆனால், இந்த சம்பவம் குறித்து யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை. ஆனால், இயக்குனர் சச்சேந்திர சர்மா கன்னத்தில் தனது தோழி அறைந்தது சரிதான் என்று நடிகை ராக்கி சாவந்த் கூறினார்.
அவர் கூறுகையில், ‘‘மனீஷா செய்தது சரிதான். படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க ஆசைக்கு இணங்க சொல்வது எந்த விதத்தில் நியாயம்” என்றார்.
அதேசமயம் மனீஷாவின் நடவடிக்கை ஒரு ‘பப்ளிசிட்டி ஸ்டண்ட்’ என்று இயக்குனர் சச்சேந்திர சர்மா கூறினார். அறை வாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘அந்த பெண்(மனீஷா) யார் என்றே எனக்குத் தெரியாது.
சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடும் புதுமுக நடிகைகள் எல்லாம் இது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டு தங்களை பிரபலப்படுத்தி கொள்ள விரும்புவது வேதனைக்குரியது” என்றார் அப்பாவியா? யார் சொல்வது உண்மை?