குண்டூர்: ஆந்திராவில் தன்னை திருமணம் செய்ய மறுத்த பேராசிரியர் மீது கல்லூரி மாணவி ஆசிட் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் நல்லபாடு என்ற இடத்தில் அரசு பாலிடெக்னிக் உள்ளது.
இங்கு பேராசிரியராக பணியாற்றி வருபவர் வெங்கட்ரமணா. நரசராவ் பேட்டையில் உள்ள கல்லூரியில் முன்பு வேலை பார்த்த போது அங்கு படித்து வந்த மாணவியோடு வெங்கட்ரமணாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. மாணவியை திருமணம் செய்து கொள்வதாக வெங்கட்ரமணா வாக்குறுதியும் அளித்துள்ளார். பின்னர் அந்த மாணவி விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலை கழகத்தில் முதுகலை கணிதவியல் படிக்க சென்று விட்டார்.
வெங்கட்ரமணாவுக்கு வேறொரு பெண்ணுடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. இதனால் மாணவியை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து நேற்று கல்லூரி வாசலில் வந்து கொண்டிருந்த வெங்கட்ரமணா மீது பர்தா அணிந்த பெண் ஒருவர் ஆசிட்டை வீச முயன்றார். இதனை வெங்கட்ரமணா தடுத்துள்ளார்.
இதில் இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போலீசார் நடத்தி விசாரணையில் ஆசிட் வீசியவர் மாணவி சவுஜன்யா என்பது தெரிந்தது.
இதுகுறித்து குண்டூர் டிஎஸ்பி நரசிம்மா கூறுகையில், மாணவி சவுஜன்யா தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக பர்தா அணிந்து வந்துள்ளார்.
பாலிடெக்னிக் வாசலில் காத்திருந்து வெங்கட்நாராயணா மீது ஆசிட்டை வீசியுள்ளார் என்று தெரிவித்தார். தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.