ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தஹாரை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.
இது தாலிபன்களுக்கு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது. அதேசமயம் ஆப்கானிஸ்தான் அரசுக்கு பெரும் வீழ்ச்சியாக கருதப்படுகிறது.
ஏற்கனவே ஹேரட், காசினி போன்ற நகரங்களை தாலிபன் கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது கந்தஹார் நகரையும் கைப்பற்றியுள்ளது. இது அனைத்துமே ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள்.
தாலிபன்கள் இதே வேகத்தில் நாட்டின் தலைநகர் காபூலையும் கைப்பற்றக் கூடும் என்ற அச்சமும் இதனால் எழுந்துள்ளது.
பொதுமக்கள் பலரும் வன்முறைக்கு பயந்து காபூல் நகரில் தஞ்சமடைந்துள்ளதால் அங்கு தாக்குதல் நடந்தால் அது பொது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கிட்டதட்ட ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதி முழுவதும் தற்போது தாலிபனின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
அமெரிக்காவும் பிற நாடுகளின் படையினரும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய பிறகு இடங்களை கைப்பற்றும் செயலில் வேகமாக ஈடுபட்டு வருகிறது தாலிபன்.
இந்த நகரம் முன்பொரு காலத்தில் தாலிபன்களின் வலுவான கோட்டையாக திகழ்ந்தது. மேலும் முக்கிய வணிக சந்திப்பாக இருப்பதால் தந்திரோபாய ரீதியாக முக்கியத்துவம் பெற்றதாகவும் இந்நகரம் உள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசு – தாலிபன் போர் 20 ஆண்டுகளாக நீடிப்பது ஏன்? – விரிவான பின்னணி
பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ஆஃப்கன் தூதர் மகள்: ‘கடும் சித்திரவதை’ – என்ன ஆனது?
வியாழனன்று பல நகரங்களை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அமெரிக்க தூதரகத்திலிருந்த பணியாளர்களை பாதுகாப்பாக வெளியேற்ற 3000 படையினரை ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆப்கானிஸ்தானில் பொது மக்கள் சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா தெரிவிக்கிறது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் வன்முறைகளுக்கு பயந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். கிட்டதட்ட இந்த வாரம் மட்டும் 72 ஆயிரம் குழந்தைகள் அடைக்கலம் தேடி தலைநகர் காபூலுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதில் பலர் வீதிகளில் உறங்குவதாக ‘சேவ் தி சில்ரன்’ என்ற அமைப்பு தெரிவிக்கிறது.
“தாலிபன்கள் இந்த வேகத்தில் முன்னேறி செல்வது ராணுவ ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது” என்று தெரிவிக்கிறார் பிபிசியின் தெற்காசியப் பிரிவின் ஆசிரியர் அன்பரசன் எத்திராஜன்.
ஆப்கானிஸ்தானில் இப்போது சண்டை ஏன்?
இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு தாலிபன்களின் அரசு புகலிடம் தருவதாகக் கூறி, 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது.
அதற்கு முன்பு இஸ்லாமியவாத அடிப்படைவாத அமைப்பான தாலிபன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அதன் பின்னரே ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட்டன.
வெளிநாட்டுப் படைகளின் இருப்பால் தாலிபன்கள் கை ஓங்காமல் இருந்தது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்பு இந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகி வருகின்றன.
அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தியப் படைகள் பெருமளவு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், நாட்டின் பல பகுதிகளை தாலிபன்கள் கைப்பற்றி வருகிறார்கள்.
ஹேரட் நகரில் தாலிபன்கள்.
இரான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உடனான எல்லைச் சாவடிகளையும் அவர்கள் கைப்பற்றியுள்ளர்.
எல்லைச் சாவடிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு உள்ளேயும் வெளியேயும் வரும் வாகனங்கள் கொடுக்கும் கலால் வரி மூலம் தாலிபன்கள் பெருமளவு பொருள் ஈட்ட முடியும் இந்த அமைப்பு எல்லைச் சாவடிகளை மட்டுமல்லாமல் நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகளையும் கைப்பற்றியுள்ளது.
இதனால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கந்தஹார் தாலிபனுக்கு ஏன் முக்கியம்?
கந்தஹார் நகரம்தான் தாலிபன்களின் பிறப்பிடம். அதுமட்டுமல்லாமல் ஒருகாலத்தில் அந்த நகரம் தாலிபன்களின் வலுவான கோட்டையாக அது இருந்தது. எனவே தற்போது மீண்டும் இந்த நகரை கைப்பற்றியுள்ளது தாலிபன்களுக்கு ஒரு முக்கிய பரிசு கிடைத்ததுபோலதான்.
பல வாரங்களாக நகரின் புறநகர் பகுதியை ஆக்கிரமித்து கொண்டிருந்த தாலிபன்கள், வியாழனன்று நகரின் மையப்பகுதியை தாக்கினர்.
புதன்கிழமையன்று கந்தஹார் சிறைக்குள் சென்றனர் தாலிபன்கள். கந்தஹாரில் சர்வதேச விமான நிலையம் இருப்பதாலும், விவசாயம், தொழில்துறை ஆகியவற்றின் நகரமாக இருப்பதாலும் முக்கிய வணிகத் தலமாகவும் உள்ளது இது.
தாலிபனால் கைப்பற்றப்பட்ட காசினி என்ற நகருமும் தாலிபன்களுக்கு முக்கியமான ஒன்று. ஏனென்றால் இந்த நகரம் காபூல் – கந்தஹார் சாலையில் உள்ளது. ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் தாலிபன்கள் வலுவாக உள்ள இடங்களை காபூலுடன் இந்த சாலை இணைக்கிறது.