தங்கள் ராணுவத் தளவாடங்களை தாலிபன்களால் ஒருபோதும் இயக்க முடியாது என்று அமெரிக்கா கூறியிருந்த நிலையில், அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் மனித உடல் ஒன்றைத் தொங்கவிட்டபடி தாலிபன்கள் இயக்கியதாகக் கூறப்படும் வீடியோ பதற்றத்தைக் கூட்டியிருக்கிறது.
#Taliban fighters enter a hangar in #Kabul Airport and examine #chinook helicopters after #US leaves #Afghanistan. pic.twitter.com/flJx0cLf0p
— Nabih (@nabihbulos) August 30, 2021
என்ன நடக்கிறதே அங்கே..?
அல்-கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த விவகாரத்தில் தாலிபன்களை வேரறுக்கும் நோக்கத்தில், 2001-ல் ஆப்கனில் நுழைந்த அமெரிக்கப் படைகள் சுமார் 20 ஆண்டுக்காலமாக ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுடன் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது.
இருப்பினும், தாலிபன்களை முழுமையாக ஒழிக்க முடியாமல்போனதால், தாலிபன் விவகாரத்தை தற்போது கண்காணித்துவரும் அமெரிக்காவின் 4-வது அதிபர் ஜோ பைடன் அண்மையில் தங்களது படைகளை முற்றிலுமாக திரும்பப் பெறும் முடிவில் உறுதியாக இருந்தார்.
வெளியேறிய அமெரிக்கப் படைகள்
அதன்படி, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும் 20 வருடங்களாக அமெரிக்கப் படைகளின் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களைக் கண்டு அஞ்சி அடங்கிப்போயிருந்த தாலிபன்கள் மீண்டும் ஆப்கனின் நகரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றத் தொடங்கினர்.
இதுவரை அமெரிக்கப் படைகளின் ஆதரவுடன் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்து ஆப்கன் ராணுவத்தினர் அமெரிக்கப் படைகளின் ஒத்துழைப்பு இல்லாமல் பலத்த பின்னடைவைச் சந்தித்தனர்.
ஆயுதரீதியாக பலம் பொருந்திய தாலிபன்களை எதிர்கொள்ள முடியாமல் ஆப்கன் மக்களைக் கையறுநிலையில் விட்டுவிட்டு, முழுமையாக வெளியேறினார்கள்.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று ஆப்கன் தலைநகர் காபூலைக் கைப்பற்றிய தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை `இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான்’ என்று பெயர் மாற்றம் செய்து அந்த நாட்டை முழுமையாகத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்தனர்.
இருப்பினும், அமெரிக்கா தங்கள் வீரர்கள் ஆப்கனிலிருந்து வெளியேற ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்ததால், மீட்புப் பணிகள் காரணமாகத் தலைநகர் காபூலில் விமான நிலையம் மட்டும் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் நேற்று வரை இருந்துவந்தது.
தாலிபன்கள் காபூலைக் கைப்பற்றும்போதே 90 சதவிகித அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறிவிட்ட நிலையில், மீதமிருந்தவர்களும் அவசரகதியில் வெளியேறினார்கள்.
அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் தங்கள் குடிமக்களை ஆப்கனிலிருந்து விமானங்களை அனுப்பி மீட்டன.
கூடவே, தாலிபன்களுக்கு அஞ்சி பிற நாடுகளுக்கு அகதிகளாகப் பயணப்பட்டனர் ஆப்கனின் பூர்வகுடி மக்கள்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்ததுபோலவே அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக நேற்றைய தினம் வெளியேறின .
இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ஆப்கானிஸ்தானில் எங்கள் 20 வருட ராணுவ இருப்பு முடிந்துவிட்டது.
கடந்த 17 நாள்களில் எங்கள் ராணுவ, விமானப் படைகள் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய விமானப் போக்குவரத்தை இயக்கி, சுமார் 1,20,000 அமெரிக்கக் குடிமக்கள், நட்பு நாடுகளின் குடிமக்கள், அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் நட்புறவாளர்கள் முதலியவர்களை வெளியேற்றின” என்றார்.
தொடர்ந்து, “ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற விரும்புபவர்களுக்கு தாலிபன்கள் அனுமதி தர வேண்டும்’’ என்று பைடன் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்கப் படையினரின் கடைசி ராணுவ விமானம் வெளியேறிய பின்னர், அங்கு நுழைந்த தாலிபன்கள் விமான நிலையத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஆப்கனில் 20 வருடங்களாக முகாமிட்டிருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, தாலிபன்கள் உற்சாக மிகுதியில் வானத்தை நோக்கித் துப்பாக்கிகளால் சுட்டும், வாண வேடிக்கைகளை நடத்தியும் குதூகலித்தனர்.
அதேபோல், அவசரகதியில் ஆப்கனிலிருந்து வெளியேறிய அமெரிக்கப் படைகள் சினூக் ஹெலிகாப்டர்கள், ஹம்வீ வாகனங்கள், ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை அங்கேயே விட்டுச் சென்றனர்.
அமெரிக்கப் படைகள் விட்டுச் சென்ற ஆயுதங்களைக் கையில் ஏந்தியபடி காபூல் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சினூக் ஹெலிகாப்டர்களைப் பார்வையிட்டபடி தாலிபன்கள் சுதந்திரமாக உலா வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.
நவீன ஆயுதங்கள், விமானங்கள் உள்ளிட்டவற்றை தாலிபன்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக அங்கேயே விட்டுச் சென்றது குறித்து அமெரிக்கா மீது பல்வேறு உலக நாடுகளும் விமர்சனங்களை முன்வைத்தன.
அதையடுத்து, ஆப்கனில் ராணுவத் தளவாடங்களை விட்டுச் சென்றது குறித்து விளக்கமளித்த தாலிபன் எதிர்ப்பு படையின் தளபதி கென்னத் மெக்கன்சி, “குறிப்பிட்ட கால நேரத்துக்குள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் எங்கள் படைகளுக்கு இருந்தது. போதிய நேரமில்லாமல் போனதால் எங்கள் ராணுவத் தளவாடங்களை அங்கேயே விட்டு வர வேண்டியதாக இருந்தது.
இருப்பினும், தாலிபன்கள் எங்களின் ஆயுதங்கள் மற்றும் விமானங்களை அந்நாட்டு மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடும் என்பதால், ஆப்கனிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக, காபூல் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எங்களின் 73 ராணுவ விமானங்களைச் செயலிழக்கச் செய்துவிட்டோம்.
இனி அவற்றை நிரந்தரமாகப் பயன்படுத்த முடியாது. அவை ஒருபோதும் பறக்காது. அவற்றை யாராலும் பறக்கவைக்கவும் முடியாது.
அதேபோல, ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தையும், 27 ஹம்வீ வாகனங்களையும், 74 MRAP கவச வாகனங்களையும் நிரந்தரமாகப் பயன்படுத்த முடியாத வகையில் செயலிழக்கச் செய்திருக்கிறோம்” என்றார்.
அதைத் தொடர்ந்து பென்டகன் தரப்பிலிருந்து வெளியான அறிக்கை ஒன்றில், பென்டகன் ஆப்கனில் சுமார் 70 MRAP கவச வாகனங்களை விட்டுச் சென்றிருப்பதாகவும், அவை ஒவ்வொன்றும் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ளவை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல், அமெரிக்காவின் GAO அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா 2001 செப்டம்பர் மாதம் முதல் 2021 ஆகஸ்ட் மாதம் வரை ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 83 பில்லியன் அமெரிக்க டாலரைச் செலவழித்திருப்பதாகவும், இந்த ஆண்டு மட்டும் ஆப்கன் படைகளுக்கான பயிற்சி மற்றும் உபகரணங்களுக்காக 3 பில்லியன் டாலர் செலவழித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.
காபூல் விமான நிலையத்தில் அமெரிக்கப் படைகள் விட்டுச் சென்ற ஆயுதங்களுடன் தாலிபன்கள் உலா வந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் பதறச் செய்த நிலையில், அமெரிக்கா தரப்பில் ராணுவத் தளவாடங்களைச் செயலிழக்கச் செய்துவிட்டதாக வெளிவந்த அறிவிப்பு சற்றே ஆப்கன் விவகாரத்தில் அனைவரையும் ஆசுவாசப்படுத்தியது.
இருப்பினும், தங்கள் ஆயுதங்கள் மற்றும் விமானங்களை தாலிபன்களால் ஒருபோதும் இயக்க முடியாது என்று அமெரிக்கா திட்டவட்டமாகக் கூறியிருந்த நிலையில், நேற்றைய தினம் தாலிபன்கள் அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான உயர்ரக ஹெலிகாப்டர் ஒன்றில் மனித உடல் ஒன்றைத் தொங்கவிட்ட படி இயக்கியதாக வீடியோ ஒன்று வெளியாகி மீண்டும் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
If this is what it looks like… the Taliban hanging somebody from an American Blackhawk… I could vomit. Joe Biden is responsible.
— Liz Wheeler (@Liz_Wheeler) August 30, 2021
தாலிபன் தலைமையிலான இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தானின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு என்று கூறப்படும் ‘Talib-Times’ என்ற ட்விட்டர் பக்கத்தில், “இதோ எங்கள் விமானப்படை. இந்த நேரத்தில், இஸ்லாமிக் எமிரேட்ஸின் விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஆப்கனின் கந்தஹார் நகரத்தின் மீது பறந்து தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகிறது” என்று குறிப்பிடப்பட்டு அந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது.
இந்தநிலையில், ஹெலிகாப்டரில் தொங்கவிடப்பட்டிருப்பது மனித உடல் இல்லை என்றும், அது உயிருடன் இருக்கும் தாலின்பன் ஒருவர்தான் என்றும் கூறப்படுகிறது.
வீடியோவின் குறிப்பிட்ட ஓரிடத்தில், அந்த நபர் தரையில் இருக்கும் மக்களை நோக்கி கையசைப்பதும் பதிவாகியுள்ளது என ஃபேக்ட் செக் தளங்கள், மேலும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பிட்ட வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே சர்வதேசப் பத்திரிகையாளர்கள் பலரும் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து வைரலாக்கினார்கள். ‘Talib-Times’ என்ற கணக்கிலிருந்து முதலில் வெளியான இந்த வீடியோ சிறிது நேரத்திலேயே ட்விட்டர் நிறுவனத்தால் நீக்கப்பட்டு, அந்தக் கணக்கும் முடக்கப்பட்டது. அமெரிக்கா, ராணுவத் தளவாடங்களை தங்கள் படையினர் முற்றிலுமாக செயலிழக்கச் செய்துவிட்டதாகக் கூறிவரும் வேளையில், அமெரிக்காவுக்குச் சொந்தமான அதிநவீன பிளாக்ஹாக் ஹெலிகாப்டரை தாலிபன்கள் இயக்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.