மன்றுக்கு அறிவித்தது ரி.ஐ.டி; ஆதாரங்களை சமர்ப்பிக்க நீதிவான் உத்தரவு 11 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்; பேஸ்புக்கில் ‘சட்’ செய்த இருவருக்கு பிணை
வடக்கில் செயற்படும் ‘ஆவா’ குழுவுக்கு புலம்பெயர் வாழ் முன்னாள் புலி உறுப்பினர்கள் நிதி உதவி அளித்துவருவதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
ஆவா குழு சந்தேக நபர்கள் எனக் கருதப்படுவோர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டமை, விசாரணை செய்யப்படுகின்றமை தொடர்பில் மேலதிக நீதிவான் அருணி ஆட்டிகல, விளக்கம் கோரியபோதே மன்றில் ஆஜராகியிருந்த பயங்கரவாத புலனய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரி மேற்படி விடயத்தை மன்றுக்கு அறிவித்தார்.
ஆவா குழுவின் நோக்கம் அரசை அசெளகரியத்துக்கு உட்படுத்துவதே என்பது சாட்சியகள் ஊடாக உறுதியாகியுள்ளதாகவும் அதனை புலம் பெயர் வாழ் முன்னாள் புலி உருப்பினர்களின் ஆலோசனை மற்றும் நிதிப் பங்களிப்புடன் அவர்கள் முன்னெடுத்து வருவதகவும் சான்றுகள் இருப்பதாகவும் பயங்கரவாத புலனயவுப் பிரிவின் குறித்த அதிகாரி குறிப்பிட்டார்.
இதனையடுத்து அந்த சாட்சிகளை மன்றில் சமர்பிக்க உத்தரவிட்ட நீதிவான், சந்தேக நபர்கள் 11 பேரை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
பயங்கரவாத புலனயவுப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் எம்.ஏ. நவாஸின் ஆலோசனைக்கு அமைவாக பொலிஸார் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் இதுவரை ஆவா குழு விவகாரம் தொடர்பில் கைதான 13 சந்தேக நபர்களை ஆஜர் செய்தனர்..
இதன் போது சிறப்பு விசாரணை அறிக்கை ஒன்றினை மன்றுக்கு பயங்கரவாத புலனயவுப் பிரிவினர் சமர்பித்தனர்.
குறித்த 13 சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கபட்ட விசாரணைகளுக்கு அமைவாக வாள், கூரிய கத்தி, இரு பக்கமும் வெட்டும் விஷேடமாக தயாரிக்கப்பட்ட கத்தி உள்ளிட்ட பெரும் தொகையான கூரிய ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக மன்றில் ஆஜரான பயங்கரவாத புலனய வுப் பிரிவின் அதிகாரி நீதிவானுக்கு தெரிவித்தார்.
கே.கே.எஸ். வீதி, கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த குட்டி எனப்படும் சிவலிங்கம் கமலநாத், யாழ். பண்டத் தரிப்பு பகுதியைச் சேர்ந்த அரவிந் எனப்படும் அன்டன் தாய்சஸ் அரவிந் எலக்ஸ், தெந்தாதரன் பிருந்தவன், இராணுவ வீரரான டச் வீதி மானிப்பாய் மேற்கு, மானிப்பாய் எனும் முகவரியைச் சேர்ந்த இந்திரகுமார் கபிலோஷன்,
அவரது சகோதரரான இந்திரகுமார் நிரோஷன் மற்றும் சுன்னாகம், இனுவில், யாழ்ப்பாணம் எனும் முகவரியைச் சேர்ந்த திருச்செல்வம் பிரபூஷன், நல்லலிங்கம் ஷர்மிரன், ரவீந்திரன் நிதர்ஷன், லோகநாதன் தர்ஷிகன், மகாதேவன் கந்தகன், ரவீந்ரன் நிலூஷன், பதுமன் மற்றும் சாரங்கன் ஆகிய 13 சந்தேக நபர்களே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுச் செய்யப்பட்டவர்களாவர்.
இவர்கள் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் சிறைச்சாலை அதிகாரிகளினால் ஆஜர் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீப் கமகே மன்றில் பிரசன்னமாகினார்.
இதன்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் நவாஸின் கையெழுத்துடன் மன்றுக்கு மேலதிக விசாரணை அறிக்கை ஒன்றும் சமர்பிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையின் பிரகாரம்,
12 ஆம் மற்றும் 13 ஆம் சந்தேக நபர்கள் கடந்த 10 ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வுப் பிரினினரால் கைது செய்யப்பட்டனர்.
பதுமன் மல்லாவி பகுதியை சேர்ந்தவராவார். மற்றையவர் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்.
இவ்விருவரும் தற்போது ஆவா குழுவை வழி நடத்துபவர் என நம்பப்படும் சன்னா எனும் சந்தேக நபருடன் சமூக வலைத் தளமான பேஸ் புக் ஊடாக ”சட் செய்துள்ளனர்.
அதன் பிரகாரம் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறிப்பாக சன்னா என்பவர் குறித்து நாம் முன்னெடுத்த விசாரணைகளில் அவர் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர் என்பது தெரியவந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் இணைந்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கு உதவி ஒத்தாசை புரியும் முகமாக ஆவா எனும் பெயரில் ஆயுதக் குழு உருவாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த குழுவானது வடக்கில் கடமையில் ஈடுபட்டுள்ள உளவுத் துறையினர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களை அச்சுறுத்தும் வண்ணம் செயற்படுகின்றனர்.
கூர்மையான ஆயுதங்களால் வெட்டி காயம் ஏற்படுத்தும் இந்த குழு அச்செயற்பாடு ஊடாக மக்களை பயமுறுத்தி அவர்களது சொத்துக்களைக் கொள்ளையிடுதல் உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதாக புலனயவுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பில் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 6(1) ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக விசேட விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக
முன்னாள் உறுப்பினர்களுடன் தொடர்பினை பேணி அவர்களின் ஆலோசனை மற்றும் பங்களிப்புக்கு அமைவாக வடக்கில் ஆவா எனும் பெயரில் அமைப்பொன்றை உருவாக்கி, அந்த அமைப்பின் உறுப்பின்ர்களாக செயற்பட்டு, வாள், கத்தி உள்ளிட்ட அபாயகரமான கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தை அசெளகரியத்துக்கு உள்ளாக்கும் விதமாக செயற்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
சட்டத்தரணி வாதம் இதனையடுத்து சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீப் கமகே, பின் வருமாறு வாதிட்டார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கூறுவதைப் போன்று புனர்வாழ்வளிக்கப்பட்ட ஒருவரோ பலரோ இந்த குழுவுடன் இணைந்து செயற்பட்டிருப்பினும் கூட எப்படி இந்த குழு தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் முன்னெடுக்க முடியும்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட ஒருவர் தண்டனை சட்டக் கோவையின் கீழ் கூறப்பட்டுள்ள குற்றம் ஒன்றினை புரிந்தால் அது தண்டனை சட்டக் கோவையின் கீழேயே விசாரணை செய்யப்படல் வேண்டும்.
வாளால் வெட்டி காயப்படுத்துகின்றமை மற்றும் அச்சுறுத்துகின்றமை ஆகியன தண்டனை சட்டக் கோவையின் கீழ் உள்ள குற்றங்கள்.
அவை தொடர்பில் எப்படி பயங்கரவாத தடை சட்டம் அமுல் செய்யப்பட முடியும். பயங்கரவாத குழு வொன்றை வாள்களை வைத்துக்கொண்டு உருவாக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த வெளிச்சமான உண்மை.
அப்படி இருக்கையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அடிப்படையற்ற விதத்தில் இவ்விளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
குறிப்பாக 10 ஆவது சந்தேக நபர், தனது நண்பர் ஒருவர் வங்கிக்கணக்கில் வைப்பிலிட தந்த பணத்தை வைப்பிலிட்டமை, தமிழ் சினிமா படங்களைப் பார்த்து அதன் படி பயிற்சி எடுத்தமை ஆகியவற்றை சான்றாகக் கொண்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இந்த விடயங்களுக்காகவா கைது செய்ய முடியும்? என அவர் கேள்வி எழுப்பிய போது நீதிவான் அருணி ஆட்டிகல தலையிட்டார்.
ஆவா குழுவினர் தென்னிந்திய தமிழ் சினிமா படங்களைப் பார்த்தே தமது நடவடிக்கைகளுக்காக பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதனாலேயே பொலிசார் அதனை ஒரு சந்தேகமாக கொண்டிருக்கலாம். என கூறியவாறு பயங்கரவாத புலனயவுப் பிரிவினர் எந்த அடிப்படையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டனர் என கேள்வி எழுப்பினார்.
அத்துடன் பயங்கரவாத செயற்பாடு தொடர்பில் அவர்களது நோக்கம் எவ்வாறு இருந்தது எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பயங்கரவாத புலனயவுப் பிரிவினர்,
கனம் நீதிவான் அவர்களே!!
சந்தேக நபர்களின் நோக்கங்கள் உறுதியானவை. அவர்களின் நோக்கம் அரசை அகௌகரியத்துக்கு உட்படுத்துவதாகும்.
இதற்காக அவர்களுக்கு புலம் பெயர் முன்னாள் புலி உறுப்பினர்களால் நிதி உதவி கூட அளிக்கப்ப்ட்டுள்ளது.
அதன் படியே பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணை செய்கின்றோம். நபர்களை மையப்படுத்தி அல்ல. என பதிலளித்தனர்.
இதன்போது மீளவும் குறுக்கிட்ட நீதிவான், அதற்கான ஆதாரங்கள் உள்ளதா என கேட்ட போது, ஆம் என பதிலளித்தனர்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் இளம் வயதினை உடையவர்கள் என்பதனை அவதானித்த நீதிவான் அதனை கருத்தில் கொண்டு அவசரமாக விசாரணைகளை நிறைவு செய்ய பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் ஆஜர் செய்யப்பட்டோரில் முதல் 11 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
12, 13 ஆவது சந்தேக நபர்களை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் செல்லவும் நீதிவான் அனுமதித்தார். இது தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.
இதனிடையே சந்தேக நபர்களில் உள்ள இம்முறை க.பொ. த. சாதரண தரப்பரீட்சைக்கு தேற்றும் மாணவருக்கு கடந்த தவணை விசாரணையில் கொடுக்கப்பட்ட சலுகையினை அமுல் செய்யுமாறும் நீதிவான் ஆலோசனை வழங்கினார்,