துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில், இடிந்து விழுந்த எட்டு மாடிக் கட்டடத்தின் அடியில் சிக்கியிருந்த ஐந்து வயது சிறுமி சுமார் 18 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மலை போல் குவிந்திருந்த இடிபாடுகளின் அடியில் சிக்கியிருத்த அந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீட்பு நடவடிக்கைகளின்போது இடிபாடுகளுக்கு அடியில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பதை அறிய அங்கிருந்தவர்களை அமைதி காக்குமாறு மீட்புப் பணியாளர்கள் அறிவுறுத்தினர்.
அப்போது அந்தச் சிறுமி கீழே சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது.
ஹவ்வா என்று பெயருடைய அந்த சிறுமி மீட்கப்படும் முன்னரே அவருடன் மீட்புப் பணியாளர்கள் பேசியிருந்ததாக இஸ்தான்புல் ஆளுநர் அலி ஏர்லிகாயா தெரிவித்தார்.
புதன்கிழமையன்று, அந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. இந்த விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.
அந்த அடுக்குமாடிக் கட்டடத்தில் இருந்த 14 வீடுகளில், 43 பேர் வசித்து வந்ததாக ஏர்லிகாயா கூறியுள்ளார்.
அதன் மேல்பகுதியில் இருந்த மூன்று தளங்களும் அனுமதியின்றி முறைகேடாக கட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கட்டடட விபத்தில் சிக்கிய 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் மூவர் கவலைக்கிடமாக உள்ளனர்.