இட்லி படத்தில் ஹீரோ ஹீரோயின் என்று யாரும் கிடையாது. சரண்யா, கோவை சரளா, கல்பனா ஆகியோரை சுற்றி நடக்கிற கதை. வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, தேவதர்ஷினி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் வித்யாதரன் கூறியதாவது: இன்பா, ட்விங்கிள், லில்லி ஆகிய மூன்று பாட்டிகளின் பெயரில் உள்ள முதல் எழுத்தை இணைத்து இட்லி என்ற படத்துக்கு தலைப்பு வைத்திருக்கிறேன்.
சரண்யா, கோவை சரளா, கல்பனா ஆகியோர் தான் இந்த பாட்டிகள். இவர்கள் ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது தான் கதை. எதற்காக கொள்ளை அடிக்கிறார்கள், கொள்ளை அடித்தார்களா? மாட்டிக் கொண்டார்களா என்பது சஸ்பென்ஸ்.
இது 100 சதவிகித காமெடி படம். பாடல்களோ, சண்டை காட்சிகளோ கிடையாது. சீனுக்கு சீன் விழுந்து விழுந்து சிரிக்கிற மாதிரியான படம். 27 நாளில் படத்தை எடுத்து முடித்தோம். இதன் படப்பிடிப்பின் போது தான் கல்பனா இறந்தார்.
அதனால் அவரைப்போன்ற தோற்றம் கொண்ட ஒரு பெண்ணை கண்டுபிடித்து நடிக்க வைத்தோம். படத்தில் வித்தியாசம் கண்டுபிடிக்கவே முடியாது. விரைவில் வெளிவருகிறது என்றார் இயக்குனர்.