பகிரி படம் வெளியானால் உங்களைக் கொல்லவும் தயங்க மாட்டார்கள். எச்சரிக்கையாக இருங்கள், என்று படத்தின் இயக்குநரிடம் தணிக்கை குழு உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பகிரி பட இயக்குநர் இசக்கி கார்வண்ணன் கூறியதாவது, “என்னை மிரட்டியது அதிகாரிகள் அல்ல… கீழ்மட்டத்தில் உள்ள உறுப்பினர்கள் ‘இந்த படம் வௌியானால் உங்களைக் கொன்று விடுவார்கள்’ என்று நேரடியாகவே எச்சரித்தார்கள்.
நான் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தேன்.
படத்தில் ஒரு காட்சியில் தமிழகத்தின் முக்கிய இரு தலைவர்கள் வேடம் அணிந்தவர்கள் டாஸ்மாக்கில் வந்து சரக்கு கேட்டு கெஞ்சுவதுபோல ஒரு காட்சி வரும்.
அதனை நீக்கச் சொன்னார்கள். நான் மறுத்தேன். மதுபானக் கடை என்ற படத்தில் கடவுள் வேடம் அணிந்தவர்களே குடிப்பது போலக் காட்டினார்கள்.
தலைவர்கள் என்ன கடவுள்களை விட பெரியவர்களா? என்று கேட்டேன். ஆனால் அதிகாரிகள் பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள்.
பதினெட்டு வெட்டு அந்த காட்சி உள்பட 18 காட்சிகளை வெட்டச் சொல்லிவிட்டார்கள். அப்படி செய்தும் கூட படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தான் கொடுத்திருக்கிறார்கள்.
மக்களுக்கு நல்லது சொல்லும் ஒரு படத்தை எடுத்தால் இதுதான் நிலைமையா? என்று வேதனையடைந்தேன். யு/ஏ சான்றிதழ் என்பதால் வரிவிலக்கு கிடைக்காது.
பரவாயில்லை. இளைஞர்கள் நல்வழி செல்ல வேண்டும் என்பதற்காக என் லாபத்தை விட்டுத் தர முடிவு செய்துவிட்டேன்” என்றார்.
கலகலப்பான நகைச்சுவையுடன், இளைஞர்களுக்கான ஒரு மெஸேஜுடன் தயாராகியிருக்கும் பகிரி படம் வரும் 16 ஆம் திகதி வெளியாகவிருக்கிறது.
பகிரி படத்தில் நாயகனாக பிரபு ரணவீரன் நடித்திருக்கிறார். இவர் விஜய் டிவியின் ‘கனாக்காணும் காலங்கள் தொடரின் நாயகனாக நடித்தவர். நாயகி ஷ்ரவியா. இவர் ஆந்திர வரவு.
ரவிமரியா, ஏ.வெங்கடேஷ், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி. கஜேந்திரன், கே.ராஜன், பாலசேகரன் என பல இயக்குநர்கள் முக்கிய வேடமேற்று நடித்துள்ளார்கள்.
திருமாவேலன், சூப்பர்குட் சுப்ரமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இளைஞர்களை கவரும் வகையில் கமர்ஷியல் எண்டெர்டெய்னராக உருவாகி இருக்கும் பகிரி படத்தை ‘மீரா ஜாக்கிரதை’, ‘பைசா’ படங்களை வெளியிட்ட வொயிட் ஸ்க்ரீன் சார்பில் எம். அந்தோணி எட்வர்ட் உலகம் முழுக்க வெளியிடுகிறார்.