கடந்த சில வருடங்களாக பல தமிழ்த் திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடியதற்கு முக்கியக் காரணம் சந்தானத்தின் நகைச்சுவை.
படத்தில் யார் இருக்கிறார்களோ இல்லையோ, சந்தானம் இருக்கிறார் என்றால் அந்த படத்திற்கு ’மினிமம் கேரண்டி’ உண்டு என வினியோகஸ்தர்களே மனம் திறந்து சொல்லியிருக்கிறார்கள்.
பல படங்களில் நாயகனுக்கு நண்பனாகவும், காதலுக்கு உதவி செய்பவராகவும் மட்டுமே நடித்து வந்த சந்தானம், சமீபத்தில் ஒரு திடீர் முடிவை எடுத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
அதாவது, இனி அவர் நாயகர்களுக்கு நண்பனாக எந்த படத்திலும் நடிப்பதில்லை என முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்திற்குப் பிறகு அவர் ஹீரோவாக மட்டுமே நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.
தன்னை விட ஜுனியர் நடிகர்கள் எல்லாம் ஹீரோவாக வெற்றி பெறும் போது, நம்மால் வெற்றி பெற முடியாதா ? என அவர் களத்தில் குதித்திருக்கிறார்.
அவருக்குப் பொருத்தமான கதைகளைத் தேர்வு செய்து அதற்கேற்றபடி நடிக்கப் போகிறாராம்.
நகைச்சுவை நடிகர்களாக நடித்து வெற்றிப் பாதையில் பயணிப்பவர்கள் , திடீரென தடம் மாறி ஹீரோவாக பயணிக்க நினைப்பது தமிழ் சினிமாவில் ஒன்றும் புதிதில்லை.
கவுண்டமணி, விவேக், வடிவேலு ஆகியோர் நகைச்சுவையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் போதே நாயகர்களாக நடிக்க ஆரம்பித்தவர்கள்தான்.
இப்போது, அவர்கள் வழியில் சந்தானமும் பயணிக்க ஆரம்பித்துள்ளார்.
அது சந்தனமாக மணக்குமா, இல்லையா என்பது போகப் போகத்தான் தெரியும்…
Prakashraj at Un Samayal Araiyil music launch .