“இன்று, தமிழ்த் தரப்புக்காகப் பேசும் அனைவரும், ஒரு காலத்தில், தமிழ்ச் செல்வனின் அடிமைகளா இருந்தவர்கள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.
அவர்களைத் தமிழ்ச் செல்வன், நாயை நடத்துவது போன்றே நடத்தினார். இதற்கான குரல் பதிவுகள் எம்மிடம் இருக்கின்றன.தேவையாயின் அவற்றை அம்பலப்படுத்துவோம்.
ஆனால் எமது சமூகத்தில், நாம் இந்தத் தமிழ்த் தலைவர்களை அவ்வாறு நடத்தியதும் இல்லை, நடத்தப்போவதும் இல்லை.
சம்பந்தர் போன்றோரை, சிரேஷ்ட கொள்கைமிகு தலைவர்களாகவே நாம், கௌரவமாக நடத்துகின்றோம். அதனால் அவர்களும், பழிவாங்கும் செயற்பாட்டுக்குள் செல்லாதிருக்க வேண்டுமென்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அதேபோன்று, சிங்களவர்களையும் முஸ்லிம்களையும், யாழ்ப்பாணத்துக்குள் அனுமதிக்கப் போவதில்லையென, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முட்டாள்தனமாக கருத்தை முன்வைத்து வருகின்றார்.
காரணம், எந்தவொரு நபரும், தன்னார்வத்துடன் வடக்கில் சென்று குடியேற விரும்புவதில்லை. குடிநீரின்றி, வரட்சியால் வாடிப்போயுள்ள பிரதேசத்தில் சென்று குடியேற வேண்டுமென்ற எண்ணம், அவர்களுக்கு இல்லை.
கொழும்பு நகரில், 33 சதவீதமானோர், தமிழர்களாகக் காணப்படுகின்றனர். யாழ்ப்பானத்தில் 11 சதவீதமான சிங்களவர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள். இவை தான் இன அழிப்பு நடவடிக்கைகள். இவ்வாறான செயற்பாடுகள் தான், போர்க் குற்றங்கள்.
பிரபாகரனால், ‘கெங்கரு கோர்ட்’ (Kangaroo Court) என்ற நடைமுறையொன்று பின்பற்றப்பட்டு வந்தது.
தமிழ் அரசியல்வாதிகளில் எவரைக் கொலை செய்வதென்று தீர்மானிப்பதற்கே, இந்த கெங்கரு கோர்ட் பயன்படுத்தப்பட்டது.
இதில், கொழும்பிலிருந்த சட்டத்தரணிகள் குழுவொன்று உள்ளடக்கப்பட்டிருந்தது. பிரபாகரன் மறைந்திருந்த புதுக்குடியிருப்பு பதுங்கு குழியைப் படையினர் கைப்பற்றிய போது, இது தொடர்பான சகல விடயங்களும், படையினரால் மீட்கப்பட்டன. இவ்வனைத்துச் சாட்சியங்களும், எம்மிடம் உள்ளன. இவற்றை நாம் வெளியிடத் தொடங்கினால், ஜனநாயகப் போர்வையைப் போர்த்திக்கொண்டுள்ளவர்கள், ஆடையின்றித் திரியவேண்டிய நிலைமை ஏற்படும்.
“எது எவ்வாறாயினும், இந்தச் சகல விடயங்களையும், நாம் அனைவரும் மறந்துவிட வேண்டும்.
காரணம், நாடு என்ற ரீதியில், நாம் முன்னோக்கி நகர வேண்டும். கடந்த காலச் சம்பவங்களை மறந்து, நாட்டை முன்னேற்றுவது தொடர்பில், அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும். அனைவருக்கும், ஜனநாயகம் கிட்டியுள்ளது.
அந்த ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி, நாட்டையும் மக்களையும் அபிவிருத்திப் பாதையில் கொண்டுசெல்ல, தமிழ் அரசியல்வாதிகள் முன்வர வேண்டும். இதை, தமிழ் மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
அதேபோன்று, அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களைக் குழப்பி, அதனூடாக வெற்றியை அடைந்துகொள்ள, ஒருபோதும் முடியாது”
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பயணித்திருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறினார்