இன்று தொடக்கம் நாட்டினுள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என்று மின்சார சபை எச்சரிக்கை செய்துள்ளது.
நேற்று முன்தினம் கொத்மலை தொடக்கம் அநுராதபுரம் வரையில் மின் கடத்தும் அதிசக்தி வாய்ந்த மின்வடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அதிகூடிய கொள்ளளவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் கருவிகள் செயலிழந்து போயிருந்தன.
தானியங்கி நிறுத்தல் கருவிகளின் திடீர் செயற்பாடு காரணமாக நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் நீராவி கடத்தப்படும குழாய் உள்ளிட்ட முக்கிய உற்பத்தித் தொகுதி பழுதடைந்துள்ளது.
இதனை சீரமைக்க சில நாட்கள் செல்லும் என்று கருதப்படுகின்றது. இதன் காரணமாக நாளாந்த மின்பாவனைக்கு நுரைச்சோலையில் இருந்து வழங்கப்பட்ட 300 மெகாவொட் மின்சாரத்தின் உற்பத்தியில் தடை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்வெட்டு தவிர வேறு வழியே இல்லாத நெருக்கடிக்கு மின்சார சபை தள்ளப்பட்டுள்ளது. எனவே இன்று தொடக்கம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என்று மின்சார சபை அறிவித்துள்ளது.