2009 இற்குப் பின்னிருந்து பெரும்பாலான நினைவு நாட்களை யாழ். பல்கலைக்கழகம் துணிச்சலாக அனுஷ்டித்து வந்தது. ஆனால், இம்முறை மாவீரர் நாளில் யாழ். பல்கலைக்கழகம் அமைதியாகக் காணப்பட்டது. யாழ். பல்கலைக்கழகத்துக்கு என்ன நடந்தது? இது தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கேட்டபோது பின்வரும் காரணங்களை கூறினார்கள்,
முதலாவது காரணம், பல்கலைக்கழக நிர்வாகம் நினைவு கூரலுக்கு எதிராகக் காணப்படுகிறது என்று மாணவர்கள் நம்புகிறார்கள். நிர்வாகமே இதுவிடயத்தில் தங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ஓர் அச்சம் மாணவர்கள் மத்தியில் காணப்பட்டது. முன்னாள் மாணவ அமைப்புகளைச் சேர்ந்த சிலர் முகநூலில் இது தொடர்பாக கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இரண்டாவது காரணம், எல்லா தடைகளையும் மீறி துணிச்சலாக சாகச உணர்வுடன் சுடர்களை ஏற்றும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இம்முறை பல்கலைக்கழக நிர்வாகத்தின் ராக்கிங் தொடர்பான தண்டனைகளால் பல்கலைக்கழகத்துக்கு வெளியே தள்ளப்பட்டதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
அண்மையில் பகடி வதை தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் மிகவும் கண்டிப்பாக நடந்துகொண்டமை மாணவர்களுக்கு மிகவும் கூர்மையான செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறது. எனவே, நினைவு கூரப்போய் மேலும் நிர்வாகத்தை பகைத்துக்கொள்ள மாணவர்கள் தயாரில்லை.
மூன்றாவது காரணம், கொரோனா தொற்றுச் சூழலில் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிகள் மூடப்பட்டு விட்டன. இதனால், வெளி மாவட்ட மாணவர்கள் தற்பொழுது அங்கே இல்லை. உள்ளூர் மாணவர்கள், அதிலும் குறிப்பாக துணிந்து சாகச நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடியவர்கள் என்று கருதத்தக்க மாணவர்களில் ஒரு பகுதியினர் பகிடிவதை தொடர்பான தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். எனவே, இது விடயத்தில் துணிந்து முடிவெடுக்கக் கூடிய ஒரு நிலைமை மாணவர்கள் மத்தியில் இல்லை.
நாலாவது காரணம், பொது வெளியில் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கு பரவலாக நீதிமன்றங்கள் தடை விதித்திருந்த ஒரு பின்னணியில் அதை மீறி நினைவுகூர மாணவர்கள் அச்சப்பட்டிருக்கலாம். அரசியல்வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் பொது வெளியில் நினைவுகூரப் பயந்து தத்தமது வீடுகளுக்குள்ளும் அலுவலகங்களிலும்தான் விளக்கேற்றினார்கள். அதாவது, பரவலாக ஓர் அச்ச சூழல் காணப்பட்டது.
மாவீரர் நாளையொட்டி வீதிகள் தோறும் படையினரும் பொலிஸாரும் செறிவாகக் காணப்பட்டார்கள். பிரதான சாலைகளிலும் வீதிகளிலும் புதிதாக தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாறான ஒரு சூழலில் மாணவர்கள் பொது வெளியில் நினைவுச் சுடரை ஏற்றத் தயங்கியிருக்கலாம்.
மேலும், முன்னைய மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த இருவர் இப்பொழுதும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்கு ஒன்றை எதிர்நோக்கி வருகிறார்கள். அந்த வழக்கு இன்னமும் முடியவில்லை. அவர்களைப்போல் தாங்களும் சிக்கிவிடக்கூடாது என்று இப்போதுள்ள மாணவர் தலைவர்கள் சிந்திக்கக் கூடும்.
ஐந்தாவது காரணம், பல்கலைக்கழக மாணவ அமைப்புகள் முன்னரைப் போல இல்லை. அங்கே ஒரே நம்பிக்கை கொண்ட ஒரு தலைமையின் கீழ் செயற்படக்கூடிய நிலைமை இப்பொழுது இல்லை. பல்வேறு அரசியல் நம்பிக்கைகளைக் கொண்டவர்கள் மாணவ அமைப்புகளுக்குள் நுழைந்து விட்டார்கள். நினைவுகூர்தல் உட்பட பொதுவான எதிர்ப்பு நடவடிக்கைகளில் துணிந்து ஒன்றுபட்டு முடிவெடுக்க மாணவர்களால் முடியவில்லை.
மேற்கண்ட அனைத்து காரணங்களையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு கேள்வி எழுகிறது. கடந்த பத்தாண்டுகளாக துணிச்சலாக ஒருவித சாகச உணர்வுடன் செயற்பட்ட யாழ். பல்கலைக்கழகம் இப்பொழுது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட காயடிக்கப்பட்ட ஓர் அமைப்பாக மாறி வருகிறதா?
அதேசமயம், அரசியலில் தீவிரமாக செயற்படும் மாணவர்கள் ராக்கிங் தொடர்பாக சரியான விளக்கங்களோடு இல்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். தேசியம் எனப்படுவது ஒருவர் மற்றவருக்கு சமம் என்ற அடிப்படையில் மக்களைத் திரளாக்குவதாகும். சீனியர்-ஜூனியர் என்ற வேறுபாடுகளின் அடிப்படையில் ஒருவர் மற்றவரைத் துன்புறுத்தும் பகிடிவதையை ஒரு தேசியவாதியான மாணவர் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக விளக்கமற்ற ஒரு சூழல் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் தொடர்ச்சியாகக் காணப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் ராக்கிங் தொடர்பாக நிர்வாகம் முன்னெடுத்த கண்டிப்பான நடைமுறைகள் மாணவர்களின் முழு அளவிலான அரசியல் செயற்பாட்டையும் முடக்கி விட்டதாக கூறப்படுவது சரியா?
இது தனியாக ஒரு கட்டுரையில் ஆராயப்பட வேண்டும். ஆனால், இங்கே யாழ்.பல்கலைக்கழகம் எனப்படுவது ஒரு குறியீடாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சமூகம் நினைவுகூர்தல் பொறுத்து எங்கே வந்து நிற்கிறது என்பதற்கு அது ஒரு வகைமாதிரி. இதை இன்னும் கூராகச் சொன்னால் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் அரசியலை இப்படி ஓரிடத்துக்குக் கொண்டுவந்து நிறுத்தி விட்டார்கள் எனலாமா?
நினைவுகூர்தலை ஒரு பொதுவெளி நிகழ்வாக ஓர் அரசியல் நிகழ்வாக அல்லது குறைந்தபட்சம் ஒரு பண்பாட்டு நிகழ்வாக முன்னெடுப்பதைத் தடுப்பதில் இம்முறை அரசாங்கம் வெற்றி பெற்றுவிட்டது. நினைவுகூர்தலை பொது வெளியில் இருந்து தனி வெளிக்கு அதாவது, வீட்டுக்குள் முடக்கியதில் அரசாங்கம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுவிட்டது.
கடந்த ஆண்டு கோட்டாபய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் வந்த மாவீரர் நாளில் நீதிமன்றங்கள் சில வரையறைகளை ஏற்படுத்தியிருந்த போதிலும் பொதுவில் மாவீரர் நாளை அனுஷ்டிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், இம்முறை ராஜபக்ஷக்கள் தீர்மானகரமாக பொது நினைவுகூர்தலைத் தடுத்திருக்கிறார்கள். ஏனெனில், தனிச் சிங்கள் வாக்கு வங்கியைப் பேணுவதற்கு சிறிய தேசிய இனங்களுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இது முதலாவது காரணம்.
இரண்டாவது காரணம், நிலைமாறுகால நீதிக்கெதிராக ஒரு கூர்மையான செய்தியை அவர்கள் வெளிப்படுத்த விரும்புகிறார்கள். நினைவுகூர்தலுக்கான வெளி எனப்படுவது நிலைமாறுகால நீதியின் கீழ்தான் உறுதிப்படுத்தப்படுகிறது. ராஜபக்ஷக்கள் நிலைமாறுகால நீதிக்கான ஐ.நா. தீர்மானத்திலிருந்து பின்வாங்கப் போவதாகக் கூறிவிட்டார்கள். எனவே, நிலைமாறுகால நீதிக்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளி உலகத்துக்கு குறிப்பாக, ஐ.நா.வுக்கு கூர்மையான விதங்களில் வெளிப்படுத்தும் விதத்தில் அவர்கள் நினைவுகூர்தலைத் தடை செய்திருக்கலாம்.
மூன்றாவது காரணம், சவேந்திர சில்வாவுக்கு எதிரான பயணத்தடையும் பிரியந்த பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கும் அவர்களைப் பொறுத்தவரை ஒரு கௌரவப் பிரச்சினை. அதற்கு எதிராகக் காட்டப்படும் ஒரு சமிக்ஞையாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
நாலாவது காரணம், விடுதலைப் புலிகள் இயக்கம் நாட்டில் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், ஐரோப்பாவில் அதன் மீதான தடைகளை நீக்குவதற்கு ஆங்காங்கே வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. பிரித்தானியாவில் அப்படி ஒரு வழக்கில் தமிழ் தரப்பு குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருப்பதாகத் தெரிகிறது. எனவே, குறிப்பிட்ட அந்த இயக்கம் தன்னுடைய நாட்டில் இப்பொழுதும் தடை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தியை கூர்மையான விதங்களில் வெளி உலகத்துக்கு கூற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு.
அடுத்த காரணம், முன்னைய காரணங்களை விட நீண்ட கால நோக்கிலானது. நினைவுகூர்தலை ஒரு பொதுவெளி நிகழ்வாக அனுமதிப்பதால் வரக்கூடிய அரசியல் விளைவுகள் குறித்து அவர்கள் அதிகம் யோசிக்கிறார்கள். அது வெறுமனே நினைவுகூரலாக இல்லாமல் கூட்டுத் துக்கத்தை கூட்டு ஆக்க சக்தியாக மாற்றக் கூடியது என்ற அடிப்படையில் அதைத் தடுக்கவேண்டும் என்றும் அவர்கள் சிந்திக்கிறார்கள்.
10 ஆண்டுகளுக்கு முன்பு தோற்கடிக்கப்பட்ட ஓர் அமைப்பின் நினைவுகள் தொடர்ந்தும் பேணப்படும் பொழுது அந்த அமைப்பு முன்னெடுத்த அரசியலும் தொடர்ந்தும் உயிர்ப்புடன் பேணப்படும் என்றும் அவர்கள் சிந்திக்கிறார்கள். எனவே, அப்படி ஒரு பொது நிகழ்வைத் தடைசெய்வதன் மூலம் அந்த அமைப்பு முன்னெடுத்த அதே அரசியல் செயல் வழியை வேறு யாரும் பின்தொடராமல் தடுக்கலாம் என்றும் அவர்கள் சிந்திக்கிறார்கள்.
மேற்சொன்ன காரணங்களை முன்வைத்து அவர்கள் மாவீரர் நாளை பொது வெளியில் அனுஷ்டிப்பதற்கு தடை விதித்திருக்கிறார்கள். இதுவிடயத்தில் நினைவுகூர்தலுக்கான கூட்டுரிமைக்காகப் போராட வேண்டியது தமிழ் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும்தான். ஆனால், அவ்வாறு போராடத்தக்க யாரும் அரங்கில் பலமாக இல்லை என்பதைத்தான் கடந்த வாரம் காட்டியிருக்கிறது. தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தினோம், எமது வீடுகள் அலுவலகங்களில் விளக்கேற்றினோம் என்று காட்டிவிட்டு அமைதியடைந்து விட்டார்கள்.
தமிழ் மக்கள் பேரவை போன்ற குடிமக்கள் அமைப்புகள் இதுதொடர்பாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. ராஜபக்ஷக்கள் அசுர வெற்றி பெற்றபின் அதிலும் குறிப்பாக, 20ஆவது திருத்தத்திற்குப் பின்னர் குடிமக்கள் அமைப்புக்கள் ஒடுங்கிப் போன ஒரு நிலைமையைக் காணலாம். இப்படிப்பட்ட ஒரு சூழலைத்தான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல யாழ்.பல்கலைக்கழகமும் பிரதிபலித்தது எனலாம்.
மக்கள் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும் பின்வாங்கும் ஒரு பலவீனமான சூழலில் தமிழ் மக்கள் பேரவை போன்ற குடிமக்கள் அமைப்புகளும் இப்போதுள்ள நிலைமைகளைக் கையாளச் சக்தியற்றவைகளாகக் காணப்படுகின்றன என்பதே நவம்பர்-2020 தமிழ் மக்களுக்கு உணர்த்தும் செய்தியாகும்.
அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்