இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் இலங்கையில் வாக்காளராகப் பதியமுடியும். அதற்கு சட்டத்தில் இடமுண்டு. ஆனால், அவர்களால் இங்கு அரசியலிலீடுபட முடியாது எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இலங்கை பிரஜையாக இல்லாத எவரும் வாக்காளாராக பதியமுடியாது எனவும் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுணவில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷ 2005இல் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது, இரகசியமாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொண்டமை, இரண்டு இலங்கை கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக வினவிய போதே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தினகரனுக்குத் தெரிவித்தார்.
அடையாள அட்டை, கடவுச்சீட்டுக்கள் பெற்றுக் கொண்டமை தொடர்பில் தன்னால் எதுவும் கூற முடியாது என்று தெரிவித்த அவர், வாக்குரிமை தொடர்பில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளும் போது உரிய கவனம் செலுத்தப்படும் என மேலும் தெரிவித்தார்.
ஒரு கட்சி அவரை வேட்பாளராக அறிவித்திருக்கின்றது. இன்னமும் வேட்புமனுக்கள் கோரப்படவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போதுதான் அது பரிசீலிக்கப்படும்.