இலங்கை இராணுவத்துக்கு சொந்தமான ரீ 56 ரக துப்பாக்கியே ரவிராஜ் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டதாக குறித்த விவகாரம் தொடர்பில் பிரதான விசாரணை அதிகாரியாக செயற்பட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் அதிகாரியான பிரேமதிலக அமரவங்ச நேற்று நீதிமன்றில் சாட்சியமளித்தார்.
மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலகவின் மேற்பார்வையில் சிறப்பு ஜூரிகள் சபை முன்னிலையில் அவர் சிரேஷ்ட பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ரொஹந்த அபேசூரியவின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு அவர் வழங்கிய சாட்சியம் சுருக்கமாக வருமாறு:
‘ நான் கடந்த 16 வருடங்களாக குற்றப் புலனாயவுப் பிரிவில் கடமையாற்றுகின்றேன். கடந்த 2006 ஆம் ஆண்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவிலேயே கடமையாற்றினேன்.
ரவிராஜ் படுகொலை விசாரணைகளை நானே முன்னெடுத்தேன். 2006.11.10 ஆம் திகதி நான் சம்பவத்தையடுத்து ஸ்தலத்துக்கு சென்றேன்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் இவ்விசாரணைகளை முன்னெடுத்தேன்.
2006.11.10 ஆம் திகதி முதல் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் 2015 ஆம் ஆண்டு வரை சுமார் 30 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.
இதன் போது இருவர் கைது செய்யப்பட்டனர்.
எனினும் அவர்கள் இருவரும் நீதிவான் நீதிமன்றிரினால் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் கொலையாளிகள் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளின் இலக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கைதானோராவர்.
அமோட்டார் சைக்கிள் இலக்கம் போலியானது என மேலதிக விசாரணைகளில் தெரியவந்தது. ரீ.வி.எஸ். மோட்டார் சைக்கிள் இலக்கம் பல்சர் மோட்டார் சைக்கிளுக்கு பொருத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
உண்மை இலக்கத்தைக் கொண்ட மோட்டார் சைக்கிள் பொலன்னறுவை வெலிகந்த பகுதியில் கருனா குழுவினரின் மோதலில் அழிவடைந்துள்ளமையைக் கண்டறிய முடிந்தது.
இந் நிலையில்தான் 2015.02.26 அன்று இக்கொலை விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டது.
நாரஹேன்பிட்டி பகுதிக்கு நான் நேரடியாக சென்று எனது தனிப்பட்ட உளவு உத்தியோகத்தர் ஊடாக பல்வேறு தகவல்களை சேகரித்தேன்.
இதன் போதே சம்பத் பிரீத்தி விராஜ் எமக்கு வாக்கு மூலம் அளித்தார். இது தொடர்பில் தொடர்ச்சியாக முன்னெடுத்த விசாரணையில் 60 பேரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்ப்ட்டது.
இதன் போதே கடற்படை உறுப்பினர்களான ஹெட்டி ஆரச்சி, பிரதீப் சாமிந்த மற்றும் காமினி செனவிரத்ன ஆகியோரை கைது செய்தோம்.
அத்துடன் பழனிச் சாமி சுரேஷ், சரன் மற்றும் டூசேன் ஆகீயோர் தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்பட்டது. சரன் டூசேன் தொடர்பில் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொலைக்கு பயப்ன்படுத்தப்பட்ட ஆயுதம் தொடர்பில் அரச இரசாயண பகுப்பாய்வு ஊடாக விசாரணைகள் இடம்பெற்றன.
இதன் போது குறித்த துப்பாககி இலங்கை இராணுவத்துக்கு சொந்தமானது என தெரியவந்தது. என சாட்சியமளித்ததுடன் பிரதிவாதிகளை அடையாளம் கண்டார்.
இதனையடுத்து பிரதிவாதிகள் தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணியான அனோஜ பிரேமரத்ன சாட்சியாளரிடம் குறுக்கு கேள்வி தொடுத்தார்.
இதன் போது விஷேடமாக ரவிராஜ் கொலை தொடர்பில் ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் முன்னெடுத்த விசாரணை தொடர்பிலும், துப்பாக்கி மறைத்து கறுப்பு பையில் இருந்த இரத்தக் கறையை மையப்படுத்தி அப்பொலிஸார் முன்னெடுத்த டி.என்.ஏ. பரிசோதனை தொடர்பிலும் கேள்வி எழுப்பினர்.
ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிசாரின் விசாரணைகள் இடை நடுவே தடைப்பட்டதாக சாட்சியாளர் பதிலளித்தார்.
இந் நிலையில் இவ்வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.