இலங்கையின் மூத்த மன்னனும் மூத்த தமிழ்க் குடியின் தலைவனுமான இராவணனின் மாளிகை ஒன்று கற்குகை ஒன்றினுள் மறைந்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், முதல் முறையாக பௌத்த தேரர் ஒருவர் அங்கே சென்று திரும்பி வந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பாக அந்த தேரர் தனது முகனூல் பக்கத்தில் முற்படுத்திய பதிவினை இங்கே தருகிறோம்.
இந்த சுரங்கப் பாதையானது பாரிய அடர்ந்த காட்டுக்கு மத்தியில் உள்ளதனால் அந்தப் பிரதேச மக்களின் உதவி இல்லாமல் அங்கே செல்ல முடியாது.
இருள் படர்ந்த அதைப் பார்த்தவுடன் மிகுந்த பயம் ஏற்படும்.நில்திய பொக்குன என்று சொல்லப்படும் இது, நிலத்திற்கு கீழேயே அமைந்துள்ளது.
கரதகொல்ல பாடசாலைக்கு பக்கத்தில் செல்லும் வீதியிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றர் தூரம் உள்ளே செல்லும் போது இந்த சுரங்கப் பாதைக்கு செல்ல முடியும்.
முதலில் கயிற்றின் உதவியுடனேயே இங்கு செல்ல முடியும். கயிற்றைப் பிடித்து சுமார் 40 அடி தூரம் இறங்க வேண்டும். பின்னர் சிறிய அறை ஒன்று அங்கே காணப்படும்.
பின்னர் அங்கிருந்து மேலும் 30 அடி கீழே இறங்க வேண்டும். அதன்பின்னர் 500 மீற்றர் தூரம் வரையான சாய்வுப் பகுதியில் நடந்து சென்றால் நல்ல விசாலமான மண்டபம் ஒன்றினைக் காண முடியும்.
அந்த மண்டப சுவரின் அடுத்தபக்கத்துக்குச் சென்று பின்னர் அங்கிருந்து 700 – 800 அடிவரை கீழே இறங்கும் போது பேச்சு அரங்கு போன்ற ஒன்றை காணலாம்.
அங்கே நீர் வீழ்ச்சி ஒன்றின் சத்தம் கேட்டுள்ளது. அதில் இருந்து மேலும் 1500 அடி தூரம் செல்லும் போது நீல நிறக் குளம் ஒன்று காணப்பட்டது.
சூரிய ஒளியைக் கண்டிராத இந்த இடத்தில் மிகவும் சுத்தமான நீர் எங்கிருந்து வந்தது என்பதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த குளத்திற்கு அருகில் மிகவும் அலங்காரமிக்க மாளிகை ஒன்று அமைந்துள்ளதாக என்னோடு கூட வந்தவர் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் அது ஆபத்தான பகுதி என்று நினைத்து திரும்பிவிட்டோம். என்று அந்த பௌத்த பிக்கு குறிப்பிட்டிருந்தார்.
இந்து சமயத்தின் மகா இதிகாசங்களிலே முதன்மையானது இராமாயணம். இந்தியாவின் வட நாட்டைச் சேர்ந்த இராமனுக்கும் இலங்கையின் ஆதித் தமிழ் மன்னனான மகா வீரன் இராவணனுக்கும் நிகழ்ந்த யுத்தத்தின் கிளைக் கதைகள் பலவற்றைக் கொண்டதே இந்த இதிகாசம்.
இது முதன் முதலில் வடமொழியில் தோன்றியதால் தமிழ் வீரன் இராவணனை அரக்கனாக சித்திரித்து இராவணன் தொடர்பான உண்மைகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருப்பதாக தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஆனாலும் இராவணன் ஒரு தலைசிறந்த வீரன் என்பதற்கும்; உன்னதமான சிவபக்தன் என்பதற்கும்; அவன் காலத்தில் இலங்கை சொர்க்காபுரியாக திகழ்ந்தது என்பதற்கும் ஆதாரங்களும் கல்வெட்டுச் சான்றுகளும் இலங்கையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனினும் இராவணன் தமது சிங்கள மன்னன் என்றே சிங்கள மக்கள் கூறிவருகின்றனர். ஆனால் இராவணன் ஒரு தமிழ் மன்னன் என்பதற்கு ஆதாரமாக நாயன்மார்களால் தேவாரம் பாடப்பெற்ற தலங்களான, ஈழத்தின் வடக்கே அமைந்துள்ள திருக்கேதீச்சரமும் கிழக்கே அமைந்துள்ள திருக்கோணேச்சரமும் அவன் காலத்திலிருந்தே சிறப்புபெற்று விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.