அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது-20 உலக கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றி பெற்றது.
பங்களாதேஷில் ஐந்தாவது இருபது-20 உலக கிண்ணத் தொடர் நடக்கிறது. மிர்பூரில் இன்று நடந்த ‘பிரிவு-2’ லீக் போட்டியில் இந்திய அணி, அவுஸ்திரேலியாவை சந்தித்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணித் தலைவர் பெய்லி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இந்திய அணியில் தவான், ஷமி நீக்கப்பட்டு ரகானே, மோகித் சர்மா வாய்ப்பு பெற்றனர்.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா (5) சொதப்பினார். ரகானே (19), கோஹ்லி (23) அதிக நேரம் நீடிக்கவில்லை. ரெய்னா (6) ஏமாற்றினார். பின் இணைந்த டோனி, யுவராஜ் ஜோடி சிறப்பாக விளையாடியது. யுவராஜ் அரை சதம் அடித்தார். டோனி 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
ஜடேஜா 6 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார். யுவராஜ் 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இந்திய அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 159 ஓட்டங்களை எடுத்தது. அஸ்வின் (2), புவனேஷ்வர் (0) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
அவுஸ்திரேலிய அணிக்கு அஷ்வின் சுழலில் பின்ச் (6), வோர்னர் (19) சிக்கினர். கெமருன் வொயிட் எவ்வித ஓட்டமும் பெறாது ஆட்டமிழந்தார். வொட்சன் 1 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
மேக்ஸ்வெல் (23) ஆறுதல் தந்தார். பெய்லி (8) ஜடேஜாவிடம் சிக்கினார்.மிஸ்ரா பந்தில் ஹாட்ஜ் (13), ஹோடின் (6) அரங்கு திரும்பினர். பின் வந்தவர்களும் சொதப்ப, அவுஸ்திரேலிய அணி 16.2 ஓவரில், 86 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுளை வீழ்த்திய அஷ்வின் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.