சுமார் 23 மணித்தியாலப் பயணத் திட்டமிடலுடன், இலங்கை வந்திருந்த சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், திட்டமிட்டதை விட ஒரு சில மணிநேரங்கள் அதிகமாகவே இலங்கையில் தங்கியிருந்த போதிலும், எதிர்பார்த்ததையும் விட அதிகமாகவே, இலங்கையுடன் உறவுகளைப் பலப்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார்.
மாலைதீவில் இருந்து தமது நாட்டின் அமைச்சர்கள், அதிகாரிகள் என 170 பேருடன் தனி விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய சீன ஜனாதிபதி, இலங்கையில் தங்கியிருந்த நேரம் முழுவதையுமே, சீனாவுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
ஓடியோடி நிகழ்வுகளில் பங்கேற்றார், பேச்சுக்களை நடத்தினார், உடன்பாடுகளைச் செய்து கொண்டார், அதே வேகத்தில் அகமதாபாத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
அவரது இந்தப் பயணத்தின் போது 29 வரையான உடன்படிக்கைகள் இருநாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ளன. இவற்றில், வெளிப்படையானவையும், இரகசியமானவையும் அடங்கும்.
குறிப்பாக, பாதுகாப்பு சம்பந்தமாக இரகசியமான உடன்பாடு கையெழுத்திடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவை பற்றிய முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
பகிரங்கமாக கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கைகளில் இருந்தே, இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கம் எந்தளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
சீன ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட வர்த்தக உடன்படிக்கைகளின் மொத்தப் பெறுமதி 5 பில்லியன் டொலர் என்று அரசாங்கத் தகவல் ஒன்று கூறுகிறது.
கொழும்பில் காலி முகத்திடலுக்கு அருகே, கடலுக்குள் செயற்கைத் தீவை அமைத்து, துறைமுக நகரத்தை அமைக்கும் திட்டத்துக்கே சீனா முன்னுரிமை கொடுத்துள்ளது.
துறைமுக நகரத் திட்டத்தின் முதற்கட்டத்துக்காக சீனா 1.4 பில்லியன் டொலரைச் செலவிடவுள்ளது. இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுத் திட்டங்களிலேயே மிகப் பெரியது இது தான். அம்பாந்தோட்டைத் துறைமுகம், மத்தள விமான நிலையம் உள்ளிட்ட எல்லாத் திட்டங்களையும் இது தூக்கிச் சாப்பிட்டு விட்டது.
சீனாவின் எக்சிம் வங்கி இலங்கையில் மேற்கொள்ளும் 21 திட்டங்களுக்காக முதலிட்ட தொகையே 1.6 பில்லியன் டொலர் தான். ஆனால், துறைமுக நகரின் முதற்கட்டத்துக்கே சீனா 1.4 பில்லியன் டொலரை முதலிடவுள்ளது.
233 ஹெக்ரெயர் (576 ஏக்கர்) பரப்பளவில், கடலை நிரப்பி இந்த செயற்கைத் தீவு நகரம் உருவாக்கப்படவுள்ளது.
இது மொனாகோவை விட பரப்பளவில் பெரியது. இந்த செயற்கைத் தீவு நகரத்தின் கட்டுமானத்துக்கு ஆகப் போகின்ற செலவு முழுவதையும், சீனாவே பொறுப்பேற்கிறது. சீனாவின் அரசு நிறுவனமான சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனமே இதில் முதலீடு செய்யவுள்ளது.
1.4 பில்லியன் டொலர் நிதியை முதலிடுவதால் சீனாவுக்கு என்ன இலாபம்? இது தான் முக்கியமான விடயம். இந்த செயற்கைத் தீவு உருவாக்கப்பட்டதும் அதில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே இலங்கையிடம் கொடுக்கப்படும், எஞ்சிய பகுதி சீனாவுக்கே சொந்தமாகும் என்று முன்னர் கூறியிருந்தார் சீனத் தூதுவர்.
ஆனால், ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த செயற்கைத் தீவில்,125 ஹெக்ரெயர் மட்டுமே இலங்கைக்குச் சொந்தமாகும். 20 ஹெக்ரெயர் நிலப்பரப்பை சீனாவின் அரசு நிறுவனமே நிரந்தரமாக வைத்துக் கொள்ளும். எஞ்சிய 88 ஹெக்ரெயர் நிலப்பரப்பும் கூட, சீன நிறுவனத்துக்கே 99 வருட குத்தகைக்கு வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்துக்காக சீனா 13 பில்லியன் டொலரை முதலீடு செய்யப் போகிறது. துறைமுக நகரில் தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை அபிவிருத்தி செய்வதற்கே இந்த 13 பில்லியன் டொலர்களும் செலவிடப்படும். இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை இலங்கை அரசே அபிவிருத்தி செய்ய வேண்டும்.
கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில், இலங்கைக்கான சீனாவின் உதவி கடந்த 2012ஆம் ஆண்டிலேயே 50 மடங்காக அதிகரித்திருந்தது. 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு சீனா 490 மில்லியன் டொலரை கடனாகவோ உதவியாகவோ வழங்கியுள்ளது.
ஆனால், சீன ஜனாதிபதியின் வருகையின் போது துவக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர திட்டத்துக்காக மட்டும், இதனை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமான நிதியை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.
இவை தவிர, பல்வேறு நெடுஞ்சாலைகள், நீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளன. இலங்கையில் சீனா அளவுக்கதிகமாக கொட்டி வருகின்ற இந்த நிதி, இலங்கைத் தீவின் நன்மை, வளர்ச்சிக்கானது மட்டுமல்ல.
சீனாவின் பாதுகாப்பு நலன்களை முன்னிறுத்தியே இந்த திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. சீனாவின் கடல் வழிப் பட்டுப்பாதை திட்டத்தில் கொழும்புத் துறைமுகமும் ஒரு அங்கமாகும்.
எனவே கொழும்புத் துறைமுகத்தில், தனக்கு நிலையான தளம் ஒன்றை உருவாக்கும் சீனாவின் கனவு இப்போது நிறைவேறியுள்ளது. ஏற்கனவே கொழும்புத் துறைமுகத்தின் கொள்கலன் இறங்குதுறையை சீனா, 500 மில்லியன் டொலர் செலவில் விரிவாக்கிக் கொடுத்துள்ளது.
இதற்குப் பிரதி உபகாரமாக, அந்த இறங்குதுறையின் ஒரு பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கலன் இறங்குதுறை அமைக்கப்பட்ட போதே, அது இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு ஆபத்தானது என்று கூறப்பட்டது.
காரணம், கொச்சித் துறைமுகத்துக்கு அருகாக சீனா நிலை கொள்வதற்கு இது வாய்ப்பளித்தது.
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்கக் கூடிய வகையில், எந்தவொரு துறைமுகம் அல்லது விமான நிலையத்தையும், வெளிநாடுகளுக்கு வழங்குவதில்லை என்று, இந்திய -இலங்கை உடன்பாட்டின் ஒரு இணைப்பாக உள்ள, ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கும், ராஜீவ்காந்திக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனையும் மீறித் தான், கொழும்புத் துறைமுகத்துக்கு அருகாக இப்போது சீனா தனது சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பப் போகிறது.
செயற்கைத் தீவு நகரத்தை அமைக்கும் திட்டம் என்ற பெயரில், உருவாக்கப்படவுள்ள நிலத்தின் பாதி சீனாவின் அதிகாரத்துக்குள் இருக்கப் போகிறது.
இந்த நிலத்தை, சீனா தனியே வர்த்தக, பொருளாதார திட்டங்களுக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.
சில வேளைகளில் பொருளாதாரத் திட்டம் என்று வெளிப்படையாக காட்டிக் கொண்டு, இரகசியமாகத் தனது பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். எவ்வாறாயினும், கொழும்புக்கு அருகாகவே சீனா மிகப்பெரிய பரப்பளவு நிலம் ஒன்றைத் தனக்காக உருவாக்கப் போகிறது.
அதுமட்டுமன்றி, இலங்கைக்கு வருவதற்கு முன்னதாக, சீன ஜனாதிபதி மாலைதீவுக்குச் சென்றிருந்தார். அதன்போது, இந்திய நிறுவனத்திடம் இருந்து பறிக்கப்பட்ட, மாலே விமான நிலைய விரிவாக்கப் பணிக்கான உடன்பாடு, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதுமட்டுமன்றி, தமது கடல்வழிப் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு அந்த நாட்டையும் இணங்க வைத்து, விட்டே சீன ஜனாதிபதி கொழும்பு வந்திருந்தார்.
இப்போது, அம்பாந்தோட்டை, கொழும்பு, மாலைதீவு என்று இந்தியாவின் தென்பகுதியை, சீனா தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் நிலை உருவாகியுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், இவையனைத்தையும் சீனா பொருளாதார மற்றும் வர்த்தக திட்டங்கள் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தி வருவதால், இந்தியாவினால் வெளிப்படையாக எதிர்க்க முடியாத சிக்கல் ஒன்றும் இருக்கிறது. அதற்காக, சீனாவின் மிகையான தலையீட்டை இந்தியா பொறுமையுடன் பார்த்திருக்கும் என்று கருதுவதற்கில்லை.
பொருளாதார மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த உடன்பாடுகள் ஒருபுறமிருக்க, இன்னொரு புறத்தே, பாதுகாப்பு நலன்களை முன்னிறுத்திய உடன்பாடுகளும், சீன ஜனாதிபதியின் வருகையின் போது கையெழுத்திடப்பட்டுள்ளன.
அவை பற்றிய விபரங்கள் ஏதும், கூட்டறிக்கையிலோ, வேறு எந்த அறிக்கைகளிலோ வரவில்லை. பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இருதரப்பும் இணங்கியுள்ளதாகவும், எல்லா மட்டங்களிலும், பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் படையினர் இருதரப்பிலும் பயணங்களை மேற்கொள்வது என்றும், இராணுவப் பயிற்சி ஒத்துழைப்பை அதிகரிப்பது என்றும், பயிற்சி மற்றும் பாதுகாப்புத் தொடர்பாக விஞ்ஞான தொழில்நுட்ப பரப்பில் ஒத்துழைப்பது என்றும்,
இராணுவ கல்வியாளர்களைப் பரிமாறிக் கொள்வதென்றும், விநியோக உதவி களை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது என்று மட்டுமே கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணக்கம் காணப்பட்ட, உடன்பாடு செய்து கொள்ளப்பட்ட, பாதுகாப்பு விவ காரங்கள் பற்றிய வேறெந்த தெளிவான விபரங்களும் இருதரப்பினாலும் வெளிப் படுத்தப்படவில்லை.
ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவுக்கும், சீன ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களில் பாதுகாப்பு விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன.
குறிப்பாக, சீன கடற்படைக் கப்பல்களுக்கு உதவுதல், கடற்பாதுகாப்புத் தொடர்பாக கூட்டு கடற்போர்ப் பயிற்சிகளை நடத்துதல், கரையோர ரோந்துப் படகு ஒன்றை இலங்கைக்கு வழங்குதல், ஜே.எவ் -17 ஜெட் போர் விமானங்களுக்கு ஒத்துழைப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது.
இவற்றில், கரையோர ரோந்துக் கப்பல் ஒன்றை வழங்குவது தவிர, மற்றைய விவகாரங்கள் அனைத்தும் சீனாவின் நலனைப் பேணுவதற்கானவை. சீனக்குடாவில் விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான உடன்பாடும் செய்து கொள்ளப்பட்டதா? என்ற விபரம் இன்னமும் வெளியாகவில்லை.
விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்குவதற்கு ஏற்கனவே அமைச்சரவையில் அரசாங்கம் அனுமதியைப் பெற்று விட்டது. இந்தியாவின் எதிர்ப்பினால் தான், சீனக்குடாவில் அதனை அமைப்பது குறித்து அரசாங்கத்துக்கு சற்று குழப்பம் இருந்து வந்தது.
ஆனா லும், இதுபற்றிய உடன்பாடு கூட கையெழுத்திடப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளில், மிகப் பெரியளவு முதலீடு, கடன், நிதி யுதவி என்று இலங்கைக்குள் சீனா ஆழ மாகவும் அகலமாகவும் காலை வைத்து விட்டது.
ஆரம்பத்திலேயே இதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்திருந்தால், சீனாவின் கைக்குள் இலங்கை சென்றிருக்காது. ஆனால், சீனா விடயத்தில் இந்தியாவும், பகிரங்கமாக எந்த எதிர்ப்பையும் செய்யா மல் சீனாவினால் அச்சுறுத்தல் இல்லை என்று வெளிப்படையாக கூறிக்கொண்டு உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தது. அதன் விளைவு இன்று இந்தியாவின் கையை மீறி எல்லாமே சென்று விட்டன.
சீனாவின் மிகையான இந்த தலையீடுகள் இலங்கைக்குப் பொருளாதார ரீதியில் குறிப்பிடத்தக்க நன்மையைக் கொண்டு வரலாம்.
அதேவேளை, வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டிக்குள் இலங்கையை இன்னும் ஆழமாக இழுத்துச் செல்லபோகிறது என்பதில் சந்தேகமில்லை. அது இலங்கை மக்களுக்கு நிம்மதியற்ற நிலையைத் தான் கொண்டு வந்து சேர்ப்பிக்கக் கூடும்.
-ஹரிகரன் –