இலங்கையில் குட்டி நாய் ஒன்றிடம் கடிவாங்கிய சிறுவன் பிரான்சில் உயிரிழந்தான்.
கிழக்கு பிரான்ஸ் நகரான ரோனில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பத்து வயதுச் சிறுவன் தன் குடும்ப சகிதம் விடுமுறையைக் கழிக்கவென இலங்கை வந்தான்.
திக்வெல்லையில் சஞ்சரித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு குட்டி நாய் அவனது காலைப் பதம் பார்த்தது. குட்டி நாய் என்பதால் அது குறித்து அவனது குடும்பத்தினர் பெரிதும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.
நாடு திரும்பிய அவன், கடந்த நான்காம் திகதி கடும் சுகவீனமுற்றதால் லியோன் நகர வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான்.
அவனைச் சோதித்த மருத்துவர்கள், அவனுக்கு விசர்நாய்க் கடி (ரேபிஸ்) தொற்றியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்கள். ஏனெனில், 1924ஆம் ஆண்டுக்குப் பின், பிரான்ஸில் எந்தவொருவரும் விசர்நாய்க் கடியால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை.
இதையடுத்து அவனது குடும்பத்தினரை விசாரித்தபோதே இலங்கையில் நாய்க் குட்டி கடித்ததை அவர்கள் தெரிவித்தனர்.
பொதுவாக விசர்நாய்க் கடியானது, நாய் கடித்த இருபது முதல் அறுபது நாட்களுக்குள்ளாகவே வெளிப்படும். அதன்படி, நோய் தீவிரமாகப் பரவியிருந்ததால் சிறுவனின் உயிரைக் காப்பாற்ற முடியாது போனது.
தற்போது, அவனது குடும்பத்தினர் மற்றும் பாடசாலை நண்பர்கள், ஆசிரியர்களுக்கும் முன்னெச்சரிக்கையாக ரேபிஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.