நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20 375 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று திங்கட்கிழமை இரவு 9 மணி வரை 204 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 847 ஆக உயர்வடைந்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 14 497 பேர் குணமடைந்துள்ளதோடு , 5791 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மரணங்களின் எண்ணிக்கையும் 87 ஆக உயர்வடைந்துள்ளது. 462 பேர் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை 4 கொரோனா மரணங்கள் பதிவாகின. இம் மரணங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
கொழும்பு 15 ஐ சேர்ந்த 70 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் கடந்த 21 ஆம் திகதியே பதிவாகியுள்ளது. மரணத்திற்கான காரணம் கொவிட் நியுமோனியா நிலைமை ஏற்பட்டமையாகும்.
கொழும்பு 12 ஐ சேர்ந்த 53 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். இம் மரணம் கடந்த 20 ஆம் திகதி பதிவாகியதாகும். மரணத்திற்கான காரணம் நாட்பட்ட நுரையீரல் நோயுடன் கொவிட் தொற்று ஏற்பட்டமையாகும்.
பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய பெண்ணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இந்த மரணம் 21 ஆம் திகதி பதிவாகியுள்ளது. மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட நியுமோனியா நிலைமையாகும்.
கொழும்பு 10 ஐ சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஐ.டி.எச். வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொரோனாவுடன் ஏற்பட்ட நியுமோனியா நிலைமையாகும்.
எஹெலியகொடையில் தொழிற்சாலையொன்றில் தொற்று
எஹெலியகொடை பிரதேசத்தில் தனியார் தொழிற்சாலையொன்றின்’ ஊழியர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது குறித்த ஊழியர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்புடைய ஏனைய ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.