இலங்கை சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு மரணித்த எவருடைய உடல்களையும் தமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என்றும் அந்த சடலங்களை தமது பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்ய இடமளிக்கப் போவதில்லை எனவும் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபை அறிவித்துள்ளது.
சாய்ந்தமருது வர்த்தக சபை மற்றும் பொதுமக்களுடன் இணைந்து இந்த அறிவித்தலை விடுப்பதாகவும் ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபையினர் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது தீவிரவாதிகள் ஏப்ரல் 26 அன்று இரவு துப்பாக்கி பிரயோகம் செய்தனர். பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 6 தற்கொலை குண்டுதாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் நடந்த சோதனையில் ஏராளமான ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் நடத்திய ஊடக சந்திப்பில். இந்த சம்பவத்தில் இறந்த தீவிரவாதிகளின் சடலங்களை தங்கள் மையவாடிகளில் அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை என்ற முடிவை சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபையினர் வெளியிட்டனர்.
“பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு இப்பிரதேசத்தில் என்றுமில்லாதவாறு அமைதியின்மையை ஏற்படுத்திய நபர்கள் எவரின் உடல்களையும் எமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது. மேலும், அந்த சடலங்களை இப்பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்யவும் இடமளிக்கமாட்டோம்.” என்று அவர்கள் தெரிவித்தனர்.
“ஸியாரம் (புனிதர்களை அடக்கம் செய்த இடம்) அமைந்துள்ள பள்ளிவாசல்களை இலக்கு வைத்து விஷமிகளின் தாக்குதல் நடைபெறலாம் என போலீஸார் எம்மை எச்சரித்ததற்கு அமைய, நாம் ஸியாரம் அமைந்துள்ள எமதுபள்ளிவாசல்களை பாதுகாக்கும் பல நடவடிக்கைகளை முடுக்கியிருந்தோம்.” என்றனர்.
ஏற்கனவே சுனாமியால் பாதிக்கப்பட்டு தமது உறவுகளையும், சொத்துக்களையும் இழந்து, மீள் குடியேறியுள்ள இம் மக்களை, மீண்டும் துயரத்தில் ஆழ்த்தியிருப்பது மோசமான ஒன்று என்றும் அவர்கள் தெரிவித்தனர்.