இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினையை முன்வைத்து இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தத்தை கொடுத்து வடக்கிலுள்ள வளங்கள், வர்த்தக ஒப்பந்தங்கள், வளமான காணிகள் ஆகியவற்றை இந்தியா பெற்றுக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றது. ஓமந்தையிலிருந்து காங்கேசன்துறை வரை ரயில் பாதைகளை அமைக்கும் பொறுப்பை இந்திய கம்பனியொன்று பெற்றுள்ளது.
மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரை ரயில் பாதைகளை நிர்மாணிக்க ஒப்பந்தத்தை பொறுப்பேற்றதும் இந்தியாவாகும். இலங்கை ரயில்வே திணைக்களம் திட்டமிட்டதை விட இந்தத் திட்டங்களுக்காக நான்கு மடங்கு செலவாகின்றது. துரையப்பா விளையாட்டரங்கு புனர்நிர்மாணம், காங்கேசன் துறை துறைமுக புனர்நிர்மாணம் பலாலி விமான நிலைய புனர்நிர்மாணம் ஆகிய பணிகளை இந்தியாவே மேற்கொண்டது.
புல்மோட்டையிலுள்ள பெறுமதிமிக்க இல்மனைட் நிதியம் மீதும் இந்தியா ஒரு கண் வைத்துள்ளது. நிலாவெளியிலுள்ள மனதை கவரும் பல ஏக்கர் கணக்கான கடற்கரை பிரதேசங்களை இந்தியா பெற்றுக் கொண்டுள்ளது.
சம்பூரில் பாரம்பரியமாக வாழ்ந்து கொண்டிருந்த ஆயிரக் கணக்கான தமிழ் மக்களை விரட்டியடித்து திருகோணமலையிலுள்ள ஆறு முகாம்களில்தள்ளிவிட்டு அந்தக் காணிகளும் இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் உரிமைகளுக்காக முன்னிற்பதாக கூறிக்கொள்ளும் இந்தியா வடக்கிலுள்ள சகல வளங்களையும் திட்டங்களையும் கைப்பற்றியுள்ளது. அதேபோல் தான் கடற்பரப்பிலும் இந்தியாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
எமது கடற்பரப்பு எமக்கு சொந்தமானது. இந்தப் பிரதேசங்களில் தமிழ் மக்களே மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எமது தமிழ் மக்களுக்கு மீன் பிடிக்க இடமளிக்காமல் அதிலும் இந்தியா தலையிடப் பார்க்கின்றது என்று ஜே.வி.பி.தலைவர் அநுர குமார திஸாநாயக்க வழங்கிய விசேட செவ்வியின் போது குற்றஞ்சாட்டினார்.
அவருடனான செவ்வியின் முழு விபரம் பின்வருமாறு,
கேள்வி:- நியாயமான சமூகத்துக்கான அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித்த தேரர் இந்நாட்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் குறித்து பல தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இருந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பொது வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்ற செய்திகளும் இப்போது பரவி வருகிறது. மங்கள சமரவீர அளித்துள்ள பேட்டியொன்றிலும் பொது வேட்பாளராக களமிறக்க ரணில் விக்கிரமசிங்கவே தகுதியானவர் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால் ஜே.வி.பி. ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.இத்தீர்மானத்தை எடுத்துள்ளதா?
பதில்:- முதலாவதாக ராஜபக்ஷ ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும். எமது நாட்டின் பொருளாதாரம் என்றுமில்லாதவாறு சீரழிக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையிலான ஒற்றுமை சீர்குலைக்கப்பட்டுள்ளது. மென்மேலும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின் றன.
ஊழல் மோசடி நாட்டில் தலைவிரித்தாடுகின்றது. ஜனநாயகமும் மனித உரிமைகளும் இல்லாமலாக்கப்பட்டுள்ளன. ஒரு குடும்பமும் அதை சுற்றியுள்ள கும்பலும் நாட்டின் சொத்துக்களை சூறையாடிக் கொண்டிருக்கின்றன.
தொடர்ந்தும் இதற்கு இடமளிக்க முடியாது. எந்தவொரு தலைவரும் நாட்டை 17 வருடங்கள் ஆட்சி புரிய தேவையில்லை. ஜனாதிபதி ராஜபக் ஷ 12 வருடங்கள் நாட்டை ஆட்சி புரிகிறார். 12 வருடங்களுக்கு பின்னர் அவர் பதவியிலிருந்து செல்ல சந்தர்ப்பம் இருக்கிறது. எனவே இவரைத் தோற்கடிக்க வேண்டும்.
இதேபோன்றதொரு நிர்வாகத்தையும் ஆட்சியையும் மீண்டும் உருவாக்க தேவையில்லை. எனவே, சமூக மாற்றத்தை ஏற்படுத்த கூடிய பரந்த முன்னணியொன்றை உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
தற்போது சோபித்த தேரர் உட்பட்ட குழுவினர் இது தொடர்பாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இருந்தும், அது முழுமையாக இந்த நாட்டுக்குத் தேவையான சமூக பொருளாதார ரீதியான மாற்றங்களுக்கு அவரது ஆலோசனைகள் போதுமானதாக இருக்குமென நாம் கருதவில்லை.
வழமை போல் ஐக்கிய தேசியக் கட்சி இந்த அரசாங்கத்துக்கும் ராஜபக் ஷ ஆட்சிக்கும் எதிராக கிளம்பியுள்ள மக்களின் எதிர்ப்பை கொள்ளையிட்டு ஆட்சியை பிடிக்க முயற்சிக்கின்றது.
ஜே.வி.பி. பொது திட்டமொன்றின் மூலம் ராஜபக் ஷ நிர்வாகத்தை தோற்கடிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம். இன்றளவில் மஹிந்த ராஜபக் ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்த இரு அணிக்கும் மேலதிகமாக மாற்று அணியொன்றின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க முடியுமா? முடியாதா? என்று நாங்கள் இப்போது ஆழமாக ஆராய்ந்து வருகின்றோம்.
கேள்வி:- தொலைக்காட்சி பேட்டியில் லால் காந்த இந்த ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது அணியாக ஜே.வி.பி.களமிறங்கினால் தற்போதுள்ள ஜனாதிபதி 50 க்கும் சிறிது அதிகமான சதவீத வாக்குகளை பெற்று பலமிழந்த ஜனாதிபதியாக நியமிக்கப்படக் கூடிய வாய்ப்பு ஏற்படும். எனவே, அடுத்த பொதுத் தேர்தலில் இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க இது நல்ல வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளார். இது ஜே.வி.பி.யின் நிலைப்பாடா?
பதில்: நாங்கள் வெற்றி பெறும் எதிர்பார்ப்புடனேயே களத்தில் இறங்குகின்றோம். இந்த இரண்டு கட்சிகளும் 66 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி புரிந்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளையும் சார்ந்த பண்டாரநாயக குடும்பம், சேனாநாயக குடும்பம், ஜெயவர்தன விக்கிரமசிங்க குடும்பம், ராஜபக் ஷ குடும்பம் 66 ஆண்டுகளில் 63 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளன.
இந்த ஆட்சிகளின் கீழ் எமது நாட்டில் யுத்தம் ஏற்படும் நிலை உருவானது. சுற்றாடல் சீரழிக்கப்பட்டது. இந்த குடும்பங்களின் மூலம் ஏகாதிபத்திய ஆட்சி உருவானது.
எனவே, இந்த ஆட்சி முறையை மாற்றியமைக்க வேண்டும். இந்த 66 வருட சாபத்தை இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்க வேண்டுமென்பதே எமது நோக்கமாகும். மக்கள் எம் மீது நம்பிக்கை வைத்து இந்த நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பார்கள் என்று நம்புகின்றோம்.
கேள்வி:- ஜே.வி.பி. தனித்து போட்டியிடுமானால் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்படுபவர் யார்?
பதில்-: அதைக் கட்சியும் பொது வேட்பாளருக்காக ஆதரவளிக்கும் குழுக்கள், நபர்கள், அரசியல் ஆர்வலர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்தே வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்.
கேள்வி: காணாமற் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கவென மூன்று வெளிநாட்டு நிபுணர்கள் முதலில் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
பின்னர் மேலும் இரு வெளிநாட்டு நிபுணர்களும் நியமிக்கப்பட்டார்கள். இது குறித்து அரசியலில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்ன?
பதில்: இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி ஆணைக்குழு எனத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டை அல்லோலகல்லோலப்படுத்தும் பிரச்சினையொன்று ஏற்பட்டால் அந்தப் பிரச்சினையை மூடி மறைப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்ப டும்.
2013ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி 17 ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமித்துள்ளார். இந்த ஆணைக்குழுக்களுக்கு 27 கோடி ரூபா அளவில் செலவிடப்பட்டுள்ளது. இருந்தும் இந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குறைந்தபட்சம் பாராளுமன்றத்துக்குக் கூட சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்த நாட்டின் ஒரு பிரச்சினைக்கு காரணமாக அமைந்த ஒரு சம்பவத்தின் அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படாதது ஏன்? ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் கேலிக்குரியவையாகவே காணப்படுகின்றன. ரத்துபஸ்வெல சம்பவம் தொடர்பான ஆணைக்குழு, சிலாபம் மீனவர்கள் கொலை தொடர்பான ஆணைக்குழு, கட்டுநாயக்க கொலை தொடர்பான ஆணைக்குழு ஆகிய வற்றின் அறிக்கைகள் வெளியிடப்படவில்லை.
பிரச்சினையொன்று ஏற்பட்டால் அதை மூடி மறைக்கும் வகையில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமிக்கும் நோயொன்று ஜனாதிபதியை பீடித்துள்ளது. காணாமற் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவும் இது போன்றது தான்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யுத்த குற்ற விசாரணைக்கான குழு, இலங்கை வர தயாரான நிலையில் அதை திசை திருப்புவதற்காகவே காணாமற் போனோரை கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் ஜனநாயகம், மனித உரிமை மீறல் காணாமற் போனோர் தொடர்பான உண்மையான பிரச்சினை, இறந்தோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு ராஜபக் ஷ ஆட்சியின் கீழ் நிவாரணம் கிடைக்கப் போவதில்லை.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது, பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது, அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
அதன் பின்னர் ஜனாதிபதி உப அமைச்சரவை குழுவொன்றையும் இது தொடர்பாக நியமித்தார். இதேபோல் ஆணைக்குழுக்கள், உப குழுக்கள், அமைச்சரவை குழுக்கள் என்பன கணக்கின்றி நியமிக்கப்பட்டுள்ளன. உண்மையான பிரச்சினையை திசை திருப்பி வேறு விடயங்களில் கவனத்தை திருப்பவே இது போன்ற குழுக்களை ராஜபக் ஷ அரசு நியமித்து வருகிறது.
கேள்வி: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர் ப்பிக்கப்பட வேண்டுமென அரசியலமைப் பில் கூறப்பட்டுள்ளதா?
பதில்:- பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென குறிப்பிடப்படவுமில்லை. வேண்டாமென குறிப்பிடப்படவுமில்லை. அரசியலமைப்பில் சமர்ப்பிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தால் நான் பாராளுமன்றத்தில் அப்படியொரு கேள்வியை எழுப்பியிருக்க தேவையில்லையே.
பாராளுமன்றத்துக்கு இந்த நாட்டில் நடைபெறும் அனைத்து விடயங்களையும் தெரிந்து கொள்ளும் உரிமை இருக்கிறது. ஜனாதிபதிக்கு இணைப்புச் செயலாளர்கள் எத்தனை பேர் இருக்க வேண்டுமென்று அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை. இருந்தும் அதைக் கேட்பதற்கு பாராளுமன்றத்துக்கு உரிமை இருக்கிறது.
ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணச் செலவுகள் எவ்வளவு? நிறுவனங்களின் தலைவர்களது விபரங்கள் என்ன? ஜனாதிபதியின் ஆலோசகர்கள் எத்தனை பேர்? போன்றவை குறித்தும் பதிலளிக்க வேண்டுமென்று அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.
இவை அரசிய லமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தால் அவை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை நாம் எழுப்புவோம். பாராளுமன்றம் சிறப்புரிமை பெற்றது. கௌரவமிக்கது என்று ராஜபக் ஷ ஆட்சியினர் கூறிக்கொண்டிருந்தாலும் இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. தங்களது ஊழல் மோச டிகள் ஆகியவற்றை மறைத்துக் கொள்வதற்காகவே தகவல்களை பாராளுமன்றத்துக்கு தெரிவிக்க மறுப்பு தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு, அவர் எவ்வளவு பணத்தை எடுத்து சென்றார்? எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது? என்ற எனது கேள்விக்கும் பதிலளிக்கப்படவில்லை. இதற்கு பதிலளித்தால் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென கூறப்படுகின்றது. ஜனாதிபதி வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கைக்கு வந்தது தொலைக்காட்சிகளிலும் காண்பிக்கப்பட்டது. அப்படியிருக்கும் போது பாதுகாப்புக்கு எப்படி அச்சுறுத்தல் ஏற்படும்?
கேள்வி:- அமைச்சர்கள் எம்.பி.க்களின் புதல்வர்கள் மற்றும் புதல்விகள் வெளிநாட்டு சேவையில் பெருந்தொகையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்களது பெயர் விபரங்களை குறிப்பிட்டு நீங்கள் ஒரு கேள்வியை பாராளுமன்றத்தில் எழுப்பியிருந்தீர்கள். இக் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டதா?
பதில்: இதற்கு பதிலளிக்கப்படவில்லை. அரசின் இந்த நடவடிக்கையால் வெளிநாடுகளிலுள்ள எமது தூதரகங்கள் செயலிழந்து காணப்படுகின்றன. இது குறித்து நான் பாராளுமன்றத்தில் விளக்கிய போது அமைச்சர்கள், எம்.பிக்கள் இது குறித்து எதுவித விளக்கமும் இல்லாமல் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நான் இதை பாராளுமன்றத்தில் தெரிவித்த பின்னர் அது தொடர்பான மேலும் பல தகவல்கள் எனக்கு வந்து குவிந்தன. இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் எதிர்க்கட்சியை சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினரது புதல்வியும் வெளிநாட்டு தூதரகமொன்றுக்கு பதவி பெற்று சென்றுள்ளார்.
வெளிநாட்டு சேவை என்பது எமது நாட்டின் சுயாதிபத்தியத்தை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். வெளிநாட்டு சேவைக்கு ஆட்களை நியமிக்கும் போது அதற்கான தகுதி, பயிற்சி என்பன குறித்து முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அமைச்சர்களின் பிள்ளைகள், எம்.பி.க்களின் பிள்ளைகள் வெளிநாட்டு தூதரகங்களுக்கு பதவி வழங்கி அனுப்பப்பட்டுள்ளார்கள். இத னால் வெளிநாட்டு சேவை சீரழிந்துள்ளதுடன் வெளிநாடுகளில் எமது நாட்டின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாராளுமன்றத்தில் எவ்வளவு தான் எடுத்துக் கூறினாலும் கொஞ்சமும் கவனத்திலெடுப்பதாக தெரியவில்லை.
நாங்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லா விட்டா லும் இது எங்கள் நாட்டில் பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் நிறைவேற்று அதிகாரம் குறித்து ராஜபக் ஷ ஆட்சி கொஞ்சமும் கவலைப்படுவதி ல்லை. இவை அனைத்தும் ஒருவரின் கைகளிலேயே சிக்கியுள்ளது. இது தான் எமது நாட்டின் சாபக்கேடு.
இந்த அரசாங்கம் எமது நாட்டுக்கும் மக்களுக்கும் அழிவைத் தேடி தந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் இந்த நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறிக்கொண்டிருக்கிறோம். எனவே, இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர மக்கள் எம்முடன் இணைந்து குரலெழுப்ப ஆயத்தமாக வேண்டும்.
கேள்வி: பலஸ்தீனத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் இவ்வாறு வெளிநாடொன்றுக்கு நிதியுதவி அளிக்க முடியுமா?
பதில்:- இந்த அரசாங்கம் பொது மக்களின் பணத்தை வீணடிக்கிறது. இதற்கு முன்னர் மாலைதீவில் வீதியொன்றை நிர்மாணித்து தருவதாக அறிவித்தது. இந்த வீதிக்காக கருங்கற்கள் இலங்கையிலிருந்து கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
இந்த நாட்டு மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாதிருக்கும் போது உகண்டாவுக்கு குடிநீர் திட்டமொன்றை வழங்கியது. இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு போதுமான தொழிற் பயிற்சி நிலையங்கள் இல்லாத நிலையில் பலஸ்தீனத்திற்கு தொழிற் பயிற்சி நிலையமொன்று. இந்த நிலையிலேயே பலஸ்தீனத்துக்கு ஒரு மில்லியன் டொலர்கள் வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக் ஷ ஆட்சியின் உண்மையான நண்பன் யார்? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஜனாதிபதி பலஸ்தீனத்தில் இறங்கி மறுநாள் இஸ்ரேலுக்குச் செல்கின்றார். இது என்ன வெளிநாட்டு கொள்கை? ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் இலங்கை பிரதிநிதி தயான் ஜயதிலக இஸ்ரேலுக்கு எதிராக கருத்து தெரிவித்த போது இலங்கையிலுள்ள முக்கியஸ்தரொருவர் இஸ்ரேலுக்கு எதிராக கருத்து தெரிவிக்க நீர் யார்? என கேள்வி எழுப்பினார்.
அப்போது அதற்கு பதிலளித்த அவர் நீங்களும் நானும் உங்கள் சகோதரரால் தூதுவராக நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறினாராம். இஸ்ரேலுக்கு பின்னால் அமெரிக்கா இருக்கின்றது.
அப்படி என்றால் இந்த அரசாங்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ இஸ்ரேலுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறது. பல அமைப்புக்கள் எம் மத்தியில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் ஒரு மில்லியன் டொலர்களை கப்பமாக வழங்கி பழியிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியுமா?
பலஸ்தீனத்தில் நிதிப் பற்றாக்குறையை விட பலஸ்தீனம் குறித்த எமது அரசியல் நிலைப்பாடு என்ன? நாம் பிரதிநிதித்துவப்படுத்துவது அமெரிக்காவின் யுத்த முன்னணியாக திகழும் இஸ்ரேலையா? அப்படியில்லாவிட்டால் சுதந்திரத்துக்காக போராடும் பலஸ்தீனத்தையா? என்பது குறித்து நாம் தீர்மானிக்க வேண்டும்.
இந்நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களை திருப்திப்படுத்துவதற்காக பலஸ்தீனத்துக்கு கப்பம் வழங்கியுள்ளதென்றே நினைக்கத் தோன்றுகிறது.
கேள்வி:- இலங்கை வந்துள்ள இந்திய பா.ஜ.க.வின் முக்கிய தலைவரான சுப்பிரமணிய சுவாமி இந்திய மீனவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு மாத்திரம் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொள்ள அனுமதியளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்த ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்ன?
பதில்:- இந்தியா, இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு இருக்கிறது. சமஷ்டி வழங்கும்படியும் அதிகாரங்களை பரவலாக்கும்படியும் கூறுகிறது.
தமிழர்களின் உரிமைகளுக்காக முன்னிற்பதாக கூறிக்கொள்ளும் இந்தியா வடக்கிலுள்ள சகல வளங்களையும் திட்டங்களையும் கைப்பற்றியுள்ளது. அதேபோல் தான் கடற்பரப்பிலும் இந்தியாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. எமது கடற்பரப்பு எமக்கு சொந்தமானது.
இந்தப் பிரதேசங்களில் தமிழ் மக்களே மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எமது தமிழ் மக்களுக்கு மீன் பிடிக்க இடமளிக்காமல் அதிலும் இந்தியா தலையிடப் பார்க்கின்றது. தமிழ் நாட்டில் ஜெயலலிதா இலங்கை தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாக காட்டிக் கொள்கின்றார். வடக்கு தமிழ் மக்களுக்கு உரித்தான மீன் வளத்தையும் இந்தியா கொள்ளையிட முயற்சிக்கின்றது.
இந்த நிலையில் இந்தியாவா இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கப் போகிறது? தமிழ் மக்களின் பிரச்சினையை முன்வைத்து இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தத்தை கொடுத்து அச்சுறுத்தி மீன்வளம், இல்மணைட் நிதி யம், நிர்மாண ஒப்பந்தங்கள் ஆகியவை குறித்தே இந்தியா கவனம் செலுத்தி வரு கிறது. எனவே, இந்தியா என்ற குள்ள நரியை நம்ப வேண்டாமென இலங்கை தமிழ் மக்களை நாம் கேட்டுக் கொள்கின் றோம்.
(நேர்காணல் எஸ்.கே.
எப்.பஸ்னா
படப்பிடிப்பு எம்.எஸ்.சலீம்)