அன்பார்ந்த வாசகர்களே!
கடந்த பத்திகளில் ஆனையிறவு முகாம் தாக்குதல் பற்றிய விபரங்களைப் படித்தீர்கள். ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’ என்ற நூலை வழங்கியுள்ள முன்னாள் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் அதில் ராணுவ உயர் மட்டத்திலுள்ள அதிகாரிகளின் செயற்பாடுகள் முடிவுகள் குறித்து மிகவும் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து தெரிவித்துள்ளார்.
ராணுவத்திற்குள் காணப்படும் முரண்பாடுகளை அறிந்து கொள்வது அரசியலைக் கவனிப்பவர்களுக்கு முக்கியமானது. அதுவும் ராணுவ அதிகாரி ஒருவரே அவை பற்றி விமர்சனங்களை முன்வைப்பது மிகவும் கவனத்திற்குரியது. எனவே அவற்றில் சிலவற்றைத் தொடர்ந்து பார்க்கலாம்.
ராணுவத்திற்குத் தேவைப்படும் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கென தனியான பிரிவு உள்ளது. நான் அப் பகுதியில் புதிய ஆரம்ப அதிகாரியாக நியமிக்கப்பட்ட வேளையில் அங்கு இடம்பெற்ற அதிர்ச்சி தரும் செயற்பாடுகள் எனக்கு மிகவும் கவலை அளித்தன.
நான் ராணுவத்தில் மிக உயர்ந்த இலட்சியங்களின் நோக்குடன் இணைந்தேன். உண்மையான அர்ப்பணிப்பு, கடமை உணர்வு போன்றன நாட்டிற்கு அவசியம் என்ற சிந்தனையே ராணுவத்தில் இணைய வைத்தது.
எனவே அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் என் கற்பனையில் உதிக்காதனவாகவும், அவை உண்மையிலேயே எமது தாய் நாட்டிற்காக போராடும், மரணிக்கும் ராணுவத்தினரின் எதிர்காலம் பற்றிய கவலைகளையே அதிகரித்தது.
நான் அப்போது மிகவும் இளைய அதிகாரி என்பதால் இவற்றைக் கண்டும் காணாமல் செயற்படும் நிலையிலிருந்தேன். இருப்பினும் இவற்றை எனது சக அதிகாரிகளுடன் அவ்வப்போது விவாதித்து வந்தேன்.
அவ்வாறான ஒரு சம்பவம் இன்னமும் எனது மனதில் நிழலாடுகிறது. காடுகளுக்குள் மறைந்திருக்கும்படி ராணுவத்தினர் அனுப்பப்படுகையில் அவர்களின் உணவுத் தேவைக்கான பொருட்கள் சிறு சிறு பொதிகளாக வழங்கப்படும்.
நானும் அவ்வாறான பயிற்சிகளைப் பெறுபவன் என்ற வகையில் அரசி, உருளைக் கிழங்கு, பருப்பு, சீனி, தேயிலை போன்றவைகளை அவ்வாறு தருவார்கள். எமது பயிற்சியின் போது இவற்றைப் பயன்படுத்திச் சமைத்து எமது தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
காலப் போக்கில் இப் பொருட்கள் தகரத்தில் அடைக்கப்பட்டதாக உதாரணமாக ஏற்கெனவே சமைத்து தகரத்தில் அடைக்கப்பட்டவைகளாக அவை தரப்பட்டன. இவற்றில் சோறு, கறி, பிஸ்கற், சீஸ் போன்றன இருந்தன.
தகரத்தில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் அதிக பாரமுடையவை. இவற்றைச் சுமந்து செல்கையில் வலியும் அதிகமாக இருக்கும். ஆரம்ப காலங்களில் எம்முடன் பயிற்சி பெற்ற விசேட அதிரடிப் பிரிவினர் தனியாக கவனிக்கப்பட்டனர்.
தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகளை நாம் உண்ணும்போது அதிரடிப் பிரிவினர் அவற்றுடன் சொக்லட் உணவுகளை மேலதிகமாக உண்பதை அவதானித்தோம். ஆனால் எமக்குச் சில பேரீச்சம் பழங்களே தரப்பட்டிருந்தன.
நாம் அனைவரும் ஒரே விதமான பயிற்சி, செயற்பாடுகள், ஒரே அங்கி, ஒரே காட்டில் வாழ்ந்த போதிலும் இரண்டாம் பட்ச நிலையில் நாம் நடத்தப்பட்டடோம். இவை இந்தியர்கள் ஹரிஜனர்களை நடத்துவது
போல நாம் ஹரிஜனர்களாகவும், அவர்கள் பிராமணர்களாகவும் எமக்குத் தென்பட்டது. ராணுவத்திலுள்ள உயர் மட்டத்தினரின்; இவ் விசனத்திற்குரிய செயல்கள் கவலையளித்தன.
பொருட்களைக் கொள்வனவு செய்யும் பிரிவின் முக்கிய அதிகாரியாக என்னை நியமித்த பின்னர்தான் உண்மைகள் எனக்குப் புலப்பட்டன. அதாவது கமான்டோ பிரிவின் உயர்மட்ட அதிகாரிகள் சிலர் தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரிவினருக்கு சிறந்தவை கிடைப்பதை உறுதி செய்திருந்தனர்.
தகரத்தில் அடைக்கப்பட்ட உணவு வகைகளுடன். வெடி மருந்துகள், குடிநீர் என்பவற்றையும் காடுகளுக்குள் சுமந்து செல்வது என்பதும், அவற்றையும் சுமந்தபடி பயங்கரவாதிகளுடன் போரிடுவது என்பதும் எமது இலக்குகளாக அமைந்தன.
நாம் ஒரு நாள் காட்டுப் பகுதிக்குள் தங்குவதானால் 2 ரின் சமைத்த சோறு, 2 மீன் ரின், 1 சீஸ் ரின், 1 ரின் பழ ரசம், சிறிய பிஸ்கற் பைக்கற், தேயிலை, பால், சீனி, சில இனிப்பு வகைகள் தரப்படும்.
இரண்டு நாட்கள் தங்குவதானால் இரட்டிப்பாகக் கிடைக்கும். ஆனாலும் காட்டுப் பகுதி நடவடிக்கைகள் குறைந்தது மூன்று நாட்களாவது தொடரும். அவ்வாறெனில் நாம் குறைந்தது ஒவ்வொரு வகையிலும் 6 பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
இப் பாரமான சுமையுடன், எமது துப்பாக்கி, வெடி மருந்துகள், கைக் குண்டுகள், மேலதிக சீருடை, குடிநீர் போன்றவற்றுடன் சில சமயங்களில் நீண்ட தூரங்களுக்குத் தவழ்ந்தே செல்ல வேண்டும்.
இத்தனைக்கும் மத்தியில் எமது உடம்பில் தெம்பும், சக்தியும், போரிடும் உறுதியும் தளராமல் இருப்பதும் அவசியம். இத்தனை சுமைகள், இடையூறுகளுடன் ஒருவரால் எதிரியுடன் போரிட முடியுமா? என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.
போரிற்குச் செல்லும் ராணுவ வீரர்கள் எதிர் நோக்கும் இத்தகைய பிரச்சனைகளை நாம் பல தடவைகள் எமது உயர் மட்டத்திற்குத் தெரிவித்த காரணத்தால் ஈற்றில் தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக சிறு பைக்கற்றுகளாக சமைத்த உணவுகள் வெளிநாடுகளிலிருந்து ‘MRE’ (Meals Ready to Eat) என்ற பெயரில் இறக்குமதி செய்து வழங்கப்பட்டது.
இவை பாரத்தில் இலேசானவையாக இருக்கும். இதனால் ராணுவத்தினர் மத்தியில் இவை பிரசித்தமடைந்தது. இவ் வகை உணவுப் பொருட்களை ராணுவத்தினர் ‘Meals Rejected by Ethiopia’’ என நகைச்சுவையாக அழைப்பர். இந்த உணவு வகை இறக்குமதியிலும் ஊழல் நிகழ்ந்தது. அதாவது உணவிலும் ஊழல்.
1993ம் ஆண்டு ராணுவத் தலைமையகம் இவ் வகை MRE உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கேள்விப் பத்திரங்களை ராணுவம் கோரியிருந்தது.
பல உணவு நிறுவனங்கள் தத்தமது மாதிரி உணவுப் பொதிகளுடன் ராணுவ தொழில் நுட்பப் பிரிவிற்கு மனுச் செய்திருந்தனர். இக் குழுவில் என்னுடன் சில மூத்த அதிகாரிகளும் இருந்தனர்.
நானே அத் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராகும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களை இக் குழு ஆராய்ந்து தகுதியான அதாவது தரமான பொருளும், நியாயமான விலையும் உடைய விண்ணப்பங்களுக்கு உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்டது.
ஆனால் நாம் சிபார்சு செய்த மனுதாரர்களுக்கு அவ் உத்தரவுப் பத்திரம் வழங்கப்படவில்லை. பதிலாக மேலிடத்தின் சிபார்சின் அடிப்படையில் வேறு சிலருக்கு வழங்கப்பட்டது.
இதனால் எமது சிபார்சுகள் கிடப்பில் போடப்பட்டன. அக் குழுவின் செயலாளராக, அம் முறைகேடுகளின் சாட்சியமாக நானே இருந்தது மிகவும் வெட்கக்கேடானது. அதைவிட அதனை எழுதுவது அதைவிட மோசமாக உள்ளது.
இத்தகைய MRE ( Meals Ready to EAT) உணவு வகைகள் பல கோடி பெறுமதியானவை. தகுதியற்ற இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த உணவுகளே வடக்கு, கிழக்கில் போரில் ஈடுபட்ட ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டது. இவை பல காலம் நீடிக்கவில்லை. ராணுவத்தினரால் பழுதடைந்த உணவு வகைகள் குறித்து முறைப்பாடுகள் அதிகரித்தது.
அப் பழுதடைந்த உணவுப் பொட்டலங்கள் பசி வேளையில் திறக்கப்பட்ட போது நச்சு மணம் வெளிவந்திருந்தது. உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் பிரிவின் அதிகாரிகள் அச்சமடைந்த போதிலும் உயர் அதிகாரிகளுக்குப் பயந்து மௌனமாகினர்.
இச் சம்பவங்கள் தொடர்பாக எனது சக அதிகாரிகள் என்னையும் அதற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டினர். எனது உயர் அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெயவி பெர்னான்டோ காட்டில் செயற்பட்ட என்னை அழைத்து ‘பளுதடைந்த உணவை உண்ணும்படி அக் குற்றவாளிகள் அவற்றை அனுப்பியபோது நீ அங்கு என்ன செய்துகொண்டிருந்தாய்? என கோபத்தோடு வினவினார்.
தாம் மிகவும் பசித்த நிலையில் அப் பழுதடைந்த உணவுப் பொட்டலத்தைப் பிரித்த பின் ஏற்படக்கூடிய உணர்வை நான் புரிந்து கொள்கிறேன். மிகவும் தடைகள், துன்பங்கள் நிறைந்த காட்டிற்குள் தனது தோழில் பெரும் பாரத்தைச் சுமந்து, எதிரியின் ஆபத்தை நோக்கியபடி செல்லும் ராணுவச் சிப்பாயின் மனதில் ஏற்படக்கூடிய வேதனை, விரக்தி, கோபம் என்பன புரிந்து கொள்ளக் கூடியவை.
பின்னர் ஒரு சமயம் பூனேரி ராணுவ முகாம் தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும், பழுதடைந்த உணவுப் பொருட்கள் வழங்கிய சம்பவம் தொடர்பாகவும் பொலீஸ் குற்றப் பிரிவினர் முன்னாள் லெப்ரினட் ஜெனரல் சிசில் வைத்தியரத்ன மீது விசாரணைகளை மேற்கொண்டு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தொடுத்தனர்.
அப்போது சேவையிலிருந்த மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டனர். என்னையும் அழைத்தனர். ஜெனரல் சிசில் வைத்தியரத்ன சார்பில் ஓய்வு பெற்ற சட்டமா அதிபர் ஒருவர் ஆஜராகி மிகவும் ஆக்ரோஷமாக என்னைக் குறுக்கு விசாரணை செய்தார்.
நான் மிகவும் அமைதியாகப் பதிலளித்தேன். எனது சாட்சியம் முன்னாள் ராணுவ அதிகாரிக்குச் சார்பானதாக அல்லது எதிரானதாக இருக்கவில்லை.
ராணுவத் தலைமையகத்தில் ஒரு வருடம் பணிபுரிந்தேன். அந்த ஒரு வருடத்தில் முற்றிலும் புதிதான ஒரு உலகத்தை என்னால் காண முடிந்தது. வடக்கு, கிழக்கில் என்ன நடைபெறுகிறது? என்பது அங்குள்ளவர்களுக்குத் தெரியாது.
தெரிந்தவர்களும் தெரியாதவர்கள் போலவே செயற்பட்டனர். அவை பற்றித் தெரியாதவர்களும் அவை பற்றி அறியவேண்டுமென்பதில் நாட்டம் கொள்ளவில்லை.
காயமுற்ற அல்லது ஊனமுற்ற ராணுவத்தினர் கைத் தடியின் உதவியுடன் தாண்டித் தாண்டிச் செல்வதை அல்லது பிரதான கடவையிலிருந்து வைத்தியசாலைக்குள் வெகு சிரமப்பட்டுச் செல்வதைக் கண்டும் காணாமல் இருந்தனர்.
கைத்தடியின் உதவியுடன் வரிசையில் கால்கடுக்க அவர்கள் நிற்கும் அவலம் குறித்து யாரும் அவதானிப்பதில்லை. போரில் காயமுற்ற இந்த ராணுவத்தினருக்குப் பெருமையும், கௌரவமும் உண்டு என்பதை எவரும் அங்கீகரிப்பதாக இல்லை.
ராணுவத்தில் ஆரம்ப உறுப்பினராக இணையும் ஒருவர் போர்க்களத்திற்கே முதலில் அனுப்பப்படுகிறார். இதனால் அவருக்கு நிர்வாக அனுபவங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
போர்க்களத்தில் எவ்வாறு செயற்படுவது? என்பதனையே உயர்மட்ட தலைமை போதிக்கிறது. போர்க்களத்தில் எமது செயற்பாடுகளைக் கௌரவப்படுத்துவதாகவும் இல்லை. பதிலாக நிர்வாகப் பணிகள் குறித்து எதுவும் தெரியாமல் இருப்பதாக உரத்த குரலில் சத்தமிடுவதே வழமையாகியது.
பெண் ராணுவத்தினர் பலருக்கு ஒரு சிலரின் கணவர் அல்லது உறவினர் வடக்கு, கிழக்கு ராணுவத்திலிருப்பதால் அங்கு நடைபெறுவதை அறிவார்களே தவிர பலருக்கு அங்கு நடப்பது எதுவும் தெரியாது.
ராணுவத்தினருக்கான விடுதிகள் ஒதுக்கப்படும் போது திருமணம் செய்து கொழும்பில் சேவை புரிபவர்கள் அல்லது உயர் மட்ட அதிகாரிகளை அறிந்தவர்களுக்கே வழங்கப்படுகின்றன.
போர்க்களத்தில் பணிபரியும் எம்மவர்களுக்கு அவ்வாறான சலுகைகள் உண்டு என்பதைக்கூட அறிய வாய்ப்பில்லை. தலைமையகத்தில் பணி புரிபவர்களும் அவற்றைப் பகிர்ந்து கொள்வதில்லை.
ராணுவப் பொலீஸ் பிரிவினர் தனி ராஜ்யமாக செயற்பட்டனர். அவர்கள் மிகவும் திமிர்த்தனத்துடனும், சட்டத்திற்குப் புறம்பானவர்கள் போலவும் செயற்பட்டனர்.
யாராவது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டால் துன்புறுத்தல், சித்திரவதை என்பன தண்டனைகளாகின்றன. ஒரே மாதிரியான சீருடைகளை நாம் அணிந்த போதிலும் அதிகாரி, சிப்பாய் என்ற பேதம் அற்ற வகையில் மரியாதை கிடைப்பதில்லை.
ராணுவ பொலீஸ் பிரிவினர் ராணுவ அதிகாரிகளின் வாகனங்களை மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் வகையில் நிறுத்தி பரிசோதனைகளை மேற்கொண்டு தமது அதிகார மமதையை வெளிப்படுத்துவார்கள்.
(மேலும் தொடரும் )