முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் (அசோக்), ஈபிடிபி கட்சியில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தாம் ஈபிடிபியில் இருந்து விலகிக் கொள்வதாகவும், தனித்துவமான முறையில் தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போவதில்லை என்றும், அதற்கான தேவைகள் தற்போது கிடையாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
1994ஆம் ஆண்டு முதல் முறையாக சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட சந்திரகுமார், அடுத்து நடந்த தேர்தல்களில் வெற்றி பெறவில்லை.
எனினும், 2010ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அவர், நாடாளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தலைவராகவும் பணியாற்றினார்.
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி சார்பில் போட்டியிட்ட சந்திரகுமார் தோல்வியடைந்தார்.
ஈபிஆர்எல்எவ் அமைப்பில் இருந்து, டக்ளஸ் தேவானந்தா ஈபிடிபியை உருவாக்கிய போது, அதன் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராக இருந்த சந்திர குமாருக்கும், டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் அண்மைக்காலமாக கருத்து முரண்பாடுகள் நிலவி வந்தன.
இதன் தொடர்ச்சியாகவே அவர் ஈபிடிபியில் இருந்து விலகி, தனித்துவமாகச் செயற்படப் போவதாக அறிவித்துள்ளார்.