நாட்டில் முப்பது வருடகாலமாக விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இடம்பெற்றுவந்த போது உதவிக்கு வராத அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று 24 மணிநேரத்திற்குள் விசாரணைகளுக்கு உதவுவதற்கென இலங்கைக்கு வந்துவிட்டார்கள்.
எனவே குண்டுத்தாக்குதல் தொடர்பில் அறிந்து முன்னரே தயார் நிலையில் இருந்தார்களா என்ற சந்தேகம் எழவே செய்கின்றது என்று இராணுவத்தினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஏற்கனவே இலங்கையில் அமெரிக்காவின் தலையீடுகள் குறித்து தொடர்ச்சியாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருக்கும் அட்மிரல் சரத் வீரசேகர இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறியதாவது :
ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு உதவி வழங்குவதற்கென அமெரிக்க புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இலங்கை வந்திருக்கின்றார்கள். அவர்கள் உண்மையிலேயே விசாரணைகளுக்கு உதவும் நோக்கில் இங்கு வந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் அவர்கள் எமது அழைப்பின் நிமித்தமா அல்லது அவர்களாகவே வருகை தந்தார்களா என்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.