நவம்பர் 8, 2016. அமெரிக்கா மட்டுமல்லாது, உலக நாடுகள் அனைத்துமே இந்த தினத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளன. அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் அன்றைய தினம் நடைபெறவுள்ளது.
உலகின் மிகப்பெரும் வளர்ந்த நாடாக மற்ற நாடுகளுக்கு எல்லாம் பெரிய அண்ணனாகத் திகழும் அமெரிக்காவின் இரு பெரும் முக்கியக் கட்சிகளான குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவின் கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலரி கிளிண்டனும் அதிபர் பதவிக்கான வேட்பாளர்களாகக் களமிறங்கி உள்ளனர்.
டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஹிலரி கிளின்டன் இருவரும் அதிபர் தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய நகரங்களில் டிரம்ப்பும்இ ஹிலரியும் நேரடி விவாதங்களிலும் இருமுறை ஈடுபட்டு, தங்கள் தரப்பு பிரச்சாரங்களை மக்கள் முன் எடுத்து வைத்துள்ளனர்.
இந்த விவாதங்களை, லட்சக்கணக்கானோர் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு மூலம் பார்த்து வருகின்றனர். டொனால்டு ட்ரம்ப்-ஐ பொருத்தவரை தேர்தல் பிரச்சாரங்களின் போது, சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வருகிறார். தனது நிலைப்பாட்டை எடுத்துரைப்பதிலும் குழப்பமான கருத்துகளையே தெரிவிப்பதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதிபர் ஒபாமாவும், தற்போதைய அதிபர் பதவிக்கான வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரியும் இணைந்தே ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை ஏற்படுத்தியதாக டிரம்ப் தெரிவித்த கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தவிரஇ பெண்களைப் பற்றி தரக்குறைவாக பேசி வருவதாகவும், முன்னாள் உலக அழகி குறித்து டிரம்ப் குறிப்பிட்ட விமர்சனங்களும் ஊடகங்களில் வெளியாகி அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தின. மேலும் ஒரு சர்ச்சையாக, 10 ஆண்டுகளுக்கு முன், டிரம்ப் தனது நண்பருடன் பேருந்தில் சென்றபோது பேசிய உரையாடல் பதிவுகளும் வெளியானதால், அவர் மீது அமெரிக்க மக்கள் கடும் அதிருப்தி அடைய நேரிட்டது.
வெளியுறவுத் துறை அமைச்சராக ஹிலரி பதவி வகித்தபோது நிறைவேற்றத் தவறிய திட்டங்கள், அப்போதைய அவரது செயல்பாட்டுத் திறனில் குறைபாடு போன்ற எவ்வளவோ விஷயங்கள் ஹிலரிக்கு எதிராக இருந்த போதிலும், அவற்றை எடுத்துக் கூறாமல், “ஹிலாரியின் தனிப்பட்ட விஷயங்களையும், கிளிண்டன் அதிபராக இருந்தபோது நடைபெற்ற நிகழ்வுகளையும் எடுத்துரைப்பேன்” என டிரம்ப் தெரிவித்தது, அவர் மீதான அதிருப்தியை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்த நிலையில்தான், அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே சில தினங்களுக்கு முன் உரையாற்றிய டிரம்ப், தான் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவுடனான நட்புறவுகள் மேலும் வலுப்படும் என தெரிவித்துள்ளார். ஹிலரி கிளிண்டன், டொனால்டு டிரம்ப் இருவரும் ஏற்கனவே இரண்டு முறை நேரடி விவாதங்களில் ஈடுபட்டனர். மூன்றாவது முறையாக, அக்டோபர் 19-ம் தேதி மீண்டும் நேரடி விவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
ஹிலரியைப் பொருத்தவரை, பொதுவாக நேரடி விவாதங்களுக்கு வரும் முன்னரே தேவையான ஆயத்தங்களுடன் பங்கேற்கிறார். ஆனால் டிரம்ப். எவ்வித ஆயத்தங்களும் இல்லாமல் கலந்து கொள்வதுடன், ஹிலரியின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். தனி நபர் தாக்குதல் போக்கையே டிரம்ப் கடைபிடிக்கிறார் என்பதால், அது அவருக்கு அதிபர் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பான கணிப்புகளில் அக்டோபர் மாதத்திற்கு முன்புவரை, பின்தங்கியிருந்த ஹிலரி கிளிண்டன், தற்போது டிரம்ப்-ஐ பின்னுக்குத் தள்ளி முந்தியுள்ளார். டிரம்ப் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் மிகவும் அருகி வருவதாகவே சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாகவே தன்னைப் பற்றிய தனிப்பட்ட கேள்விகள் கேட்கப்படும் நிலையில், அவற்றுக்கு நேரடியாகப் பதில் அளிக்காமல் மழுப்பி வருவது, தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. இதுவே டிரம்ப்-க்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்துக்கள் டிரம்பிற்கான கோஷம் என்ற கருத்துகளும் அமெரிக்காவில் வலுப்பெற்று வருகின்றன. எப்படியாயினும், எல்லோரும் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு, இன்னும் 2 வாரங்களுக்குள் தெரிந்து விடும். அதுவரை காத்திருப்போம்.