சுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்துக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு தற்போது இயங்கும் உடற்பயிற்சி நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியதுடன், பெற்றோல் குண்டுகளை வீசி தீவைத்து எரித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை ஆவா குழுவினரே முன்னெடுத்தனர் எனக்கட்ட ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். எனினும் அதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
குறித்த இடத்தில் பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையிலும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தருவதில் ஏற்பட்ட தாமதித்தமையும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுன்னாகம் பொலிஸ் நிலையம் தற்போதைய தனியார் காணியை விடுவித்து சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் ஜக் மோட்டோர்ஸ் என்ற இடத்தில் பொலிஸ் நிலையத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. அந்தக் காணியில் தற்போது உடற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது.
அந்த இடத்தில் பொலிஸ் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு தரப்பினர் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.