ஹைதராபாத் ஒஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு, 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், 5 வயது மகனுடன் சிகிச்சைக்கு வந்துள்ளார்.
பெரியவர்கள் யாரும் உடன் வரவில்லை. உடல்நிலையைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.
அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் முயன்றனர். ஆனால், அரை மணி நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டார்.
மருத்துவர்கள், போலீஸுக்குத் தகவல் அளிக்கச் சென்ற சமயத்தில், தாய் உயிரிழந்தது தெரியாத சிறுவன் தாயின் அருகில் படுத்துறங்கத் தொடங்கினான்.
மீண்டும் அங்கு வந்த மருத்துவர்கள், தாயின் அருகில் மகன் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு வருத்தமும் வேதனையும் அடைந்தனர்.
மருத்துவர்கள், சிறுவனுக்கு ஆறுதல் கூறினர். ஆதார் அட்டையை வைத்து, இறந்தது ஜாகீர்பாத்தைச் சேர்ந்த சமீனா சுல்தானா என்று தெரியவந்தது.
கட்டடத் தொழிலாளியான சுல்தானாவை 3 வருடங்களுக்கு முன் கணவர் கைவிட்டுச் சென்றுவிட்டார். இதனால், 5 வயது மகனுடன் அவர் வசித்துவந்துள்ளார்.
ஹைதராபாத் உதவும் கரங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், சுல்தானாவின் பெற்றோரைத் கண்டுபிடித்து, அவரது உடலையும் சிறுவனையும் ஒப்படைத்தனர். மருத்துவமனை சார்பில் உடலைக் கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடுசெய்து தரப்பட்டது.