தாய்லாந்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஓரளவு புரிந்துணர்வை அரச தரப்பாருக்கும், புலிகளுக்கும் வழங்கியிருந்தது.
இதன் காரணமாக சமாதானப் பேச்சுவார்த்ததைகளை மேலும் எடுத்துச் செல்லும் பொருட்டு அரச தரப்பில் இணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இரு தரப்பிலிருந்தும் இருவர் நியமிக்கப்பட்டு பேச்சவார்த்தைகளின் பெறுபேறுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளுக்கான திட்டமிடுதலை மேற்கொள்வதாக இணக்கம் காணப்பட்டது.
இவற்றிற்கு மத்தியில் ரணில் அரசு அரசியல் அமைப்பில் 19வது திருத்த்தினைக் கொண்டு வர எண்ணியது. இத் திருத்தம் ஜனாதிபதியின் சில அதிகாரங்களை சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு வழங்குவதாக உள்ளது.
இவ் அரசியல் அமைப்பு 19வது திருத்தம் சமாதானப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து எடுத்துச் செல்வதற்கு நிலையான அரசு அவசியம் என்பதால் கொண்டு வரப்படுவதாக ரணில் அரசு தெரிவித்தது.
தற்போதைய அரசியல் அமைப்பு தேர்தல் முடிவடைந்த ஒரு வருடத்தின் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகிறது.
19வது திருத்தம் ஜனாதிபதிக்கிருந்த அந்த அதிகாரத்தைப் பறிக்கிறது. இதனால் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை அறிவிக்கும் அதிகாரத்தை இழக்கிறார்.
இது அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவிற்கு பிரச்சனையான அம்சமாக இருந்தது.
ஏனெனில் அப்போதைய தருணத்தில் அவர் தேர்தலை நடத்தினால் வெற்றி பெறலாம் என்ற நிலை காணப்பட்டதால் அவ்வாறு தனது அதிகாரம் பறிக்கப்படுவதை அவர் ஏற்கவில்லை.
இத் திருத்தத்தில் இன்னொரு அம்சம் என்னவெனில் பாராளுமன்றத்தில் மசோதா சமர்ப்பிக்கப்படும் போது உறுப்பினர் தனது மனச் சாட்சிக்கு தகுந்தபடி வாக்களிக்க முடியும்.
இது கட்சித் தாவலை ஊக்கப்படுத்துவதாக காணப்பட்டது. இதன் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறலாம் என ரணில் கருதினார்.
ஆனால் மனச்சாட்சிப்படி வாக்களிக்கும் உரிமை என்பது அரசியல் அமைப்பிற்கு விரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் இறுதியில் 19வது திருத்தம் நிறைவேறாமல் போனது.
இவ் இடைக்காலத்தில் கிழக்கில் பாதுகாப்பு நிலமை மோசமான நிலைக்குச் சென்றது.
திருகோணமலைப் பகுதியிலுள்ள காஞ்சூரன் என்ற இடத்தில் காணப்பட்ட அதிரடிப்படை முகாமிற்கு முன்னால் பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஓஸ்லோ ஒப்பந்தத்தின் பிரகாரம் அம் முகாம் அகற்றப்பட வேண்டுமென புலிகள் வற்புறுத்தினர்.
ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறி ராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகத்தினால் பத்துப்பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.
இப் படைத்தளம் அங்கு இருப்பது முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பானது என முஸ்லீம் காங்கிரஸ் வற்புறுத்தி வந்தது.
இதன் காரணமாக முஸ்லீம் மக்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் காங்கிரசிற்கள் பெரும் குழப்ப நிலையை ஏற்படத்தியது.
காங்கிரசிற்குள் ஒரு பிரிவாக இயங்கிய ஏ ரி எம் அத்தாவுல்லா தலைமையிலான குழவினர் முஸ்லிம்களுக்கான தென் கிழக்கு அலகு வழங்கப்படாத வரை இறுதித் தீர்வு சாத்தியமில்லை என முழங்கத் தொடங்கினார்.
இச் சம்பவங்களின் பின்னணியில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு இரு சாராரும் தயாராகினர்.
இதற்காக வன்னி வந்திருந்த பாலசிங்கம் நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் நோர்வே தரப்பினருடன் ஈடுபட்டார்.
முதலாவது பேச்சுவார்த்தைகளின் போது பாலசிங்கம் இடைக்கால நிர்வாகத்தினைக் கோரியிருந்தார். ஆனால் அதனை பீரிஸ் அரசியல் அமைப்பிற்கு வெளியில் தம்மால் செல்ல முடியாது எனத் தெரிவித்து அதனை நிராகரித்து இணைந்து செயற்படுவதற்கான குழு அமைக்க ஆலோசனை தெரிவித்திருந்தார்.
இப் போக்கு பிரபாகரனுக்கு அதிருப்தியாக இருந்தது.
இதனால் பேச்சுவார்த்தைகளில் மக்களுக்கான பொருளாதார வாழ்வை உறுதி செய்த பின்னரே அரசியல் பேச்சுவார்த்தைகளைத் தொடரலாம் என்ற சிந்தனையோடு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டவைகள் போதுமான அளவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என பிரபாகரன் முன்வைத்தார்.
இதற்கு அரசிற்குள் அதாவது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கிடையே காணப்படும் பிரச்சனைகளைக் காரணம் காட்டி அவை சமாதானத்திற்கு அச்சறுத்தலாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இரண்டாவது சுற்றில் சுமார் 70000 ஆயிரம் இடம் பெயர்ந்த மக்களைக் குடியமர்த்தும் பிரச்சனைகளே பேசப்படுவதாக இருந்தன.
அடுத்து அதி உயர் பாதுகாப்பு வலையங்களை நீக்குவதும் ஓர் அம்சமாக இருந்தது.
தாய்லாந்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் மேலும் இருவர் இரு தரப்பிலும் இணைக்கப்பட்டனர். அரச தரப்பில் மேஜர் ஜெனரல் சாந்தா கொட்டேகொட, உதவி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ ஆகியோரும் புலிகள் தரப்பில் கருணா, தமிழ்ச் செல்வன் என்போராகும்.
இப் பேச்சுவார்த்தைகளில் முதலாவது அம்சமாக சிக்கலாகிச் செல்லும் கிழக்கு மாகாண பாதுகாப்பு நிலமைகள் குறித்து பேசப்பட்டது.
கிழக்கு மாகாண பாதுகாப்பு நிலமைகள் குறித்து தம்மாலான முயற்சிகளைத் தாம் எடுப்பதாகக் கூறிய கருணா அங்குள்ள பாதுகாப்பற்ற நிலைக்கு பொறுப்பாளர்கள் தாம் மட்டும் அல்ல எனவும் அங்குள்ள முஸ்லீம்களும் காரணம் என்றார்.
எனவே அங்கும் போர் நிறுத்த கண்காணிப்பாளர்களை நிறுத்துவது எனவும், மேலும் சிக்கல்களைத் தவிர்க்க முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் கக்கிம் மற்றும் கருணா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் நெருக்கமாக செயற்பட வேண்டுமெனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கூட்டு இணைப்புக் குழு அமைத்தல், அதி உயர் பாதுகாப்பு வலையங்களை அகற்றி அகதிகளை மீளக் குடியமர்த்தல் என்பன பற்றிப் பேசியபோது அதனால் ஏற்படக்கூடிய சட்டச் சிக்கல்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
அரச தரப்பினரின் வாதம் அரசியல் அமைப்பிற்கு அமைந்த பொறிமுறைகளையே வற்புறுத்தினர். இதனை புலிகள் ஏற்கவில்லை. கூட்டு இணைப்புக் குழு அமைத்தல் என்பதும் பிரதமர் காரியாலயத்தால் அமைக்கப்படும் செயலகத்தின் மேற்பார்வையில் அமையவேண்டுமென கூறப்பட்டது.
இலங்கை அரசியல் அமைப்பைக் காரணம் காட்டி பிரதமர் செயலகத்தால் வழி நடத்தப்படுவதை புலிகள் ஏற்கவில்லை.
இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கள் இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைப்பதில் குறியாக இருந்தனர்.
கிழக்கு மாகாணத்தில் பொலீஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், தமக்கென தனியான நீதிச் சட்டங்கள் என தொடர்ந்தனர். இவை அரச மட்டத்தில் புதிய பிரச்சனையாக மாறியது.
புலிகள் இம் மாற்றங்களை சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்படுவதாக கூறிய போதிலும் ஓர் நிழல் அரசுக்கான நடைமுறைகளாக அரசு நோக்கியது.
இவை ஒரு புறம் தொடர அபிவிருத்திக்கான பணம் திரட்டுவதற்காக அன்பளிப்பு வழங்கும் நாடுகளின் மாநாட்டினை நோர்வே அரசு ஒஸ்லோவில் கூட்டியது.
இதில் சமார் 100 பிரதிநிதிகள் அவற்றில் 37 நாடுகளைச் சார்ந்த அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதில் தமது ஆரம்ப உரைகளை பிரதமர் ரணில், நோர்வே வெளிநாட்டமைச்சர் ஆகியோர் நிகழ்த்தினர்.
இந் நிகழ்வில் அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் ஆமிற்றேஜ் அவர்கள் ஆற்றிய உரை பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. விடுதலைப்புலிகளுக்கு எச்சரிக்கையாகவும் அமைந்தது.
US Deputy Secretary of State, Richard L. Armitag
புலிகள் வன்முறையையும், பிரிவினையையும் கைவிடுவதாக பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமெனவும் அதுவே சர்வதேச சமூகத்தை நம்பச் செய்யும் என்றார். இந்த உரை தொடர்பாக பாலசிங்கம் எதனையும் பகிரங்கமாக தெரிவிக்கவில்லை.
பின்னர் தனது எழத்துக்களில் அமெரிக்க அரசியல் வன்முறை தொடர்பாக தவறான விளக்கங்களை வைத்திருப்பதாக எழுதியிருந்தார். இருப்பினும் இவ் நன்கொடை வழங்கும் மாநாட்டில் 70மில்லியன் அமெரிக்க டொலர் பணம் புனர்வாழ்வு, புனரமைப்பு என்பவற்றிற்கென சேகரிக்கப்பட்டது.
இப் பணம் வடக்கு- கிழக்கு மீளமைப்பு நிதியம் என அழைக்கப்பட்டது.
இம் மாநாடு ஒரளவு வெற்றியளித்ததால் அரச மற்றும் புலிகள் தரப்பில் பெரும் உற்சாகம் காணப்பட்டது.
இதனால் பாலசிங்கம், ரணில் ஆகியோர் அன்றைய தினமே அடுத்த நடவடிக்கைகள் குறித்து பேசத் தொடங்கினர்.
இவை அவ் வருட மாவீரர் தின உரையில் வெளிப்பட்டன. பொதுவாகவே பலராலும் இவ் உரை எவ்வாறு அமையப் போகிறது? என எதிர்பார்க்கப்பட்டது.
ஏனெனில் அரச- புலிகள் பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் இவ் உரை முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்பட்டது. இவ் உரையில் பாலசிங்கம் தமிழீழம் குறித்து தெரிவித்த கருத்துக்களை மேலும் விளக்குவதாக அமைந்திருந்தது.
தமிழ் மக்களின் வரலாற்றுப் பாரம்பரிய தாயகத்தில் சுதந்திரத்துடனும், கௌரவத்துடனும் சுயாட்சி அமைப்பிற்குள் வாழ விரும்புகிறார்கள். இதுவே எமது மக்களின் அரசியல் அபிலாஷையாகும்.
எமது மக்களின் அரசியல் அபிலாஷை என்பதன் அர்த்தம் சுயநிர்ணய உரிமையாகும். இவ் அடிப்படையில் விடுதலைப்புலிகள் இயக்கம் நியாயமான சுயாட்சியுடன் கூடிய சுய அரசு ஒன்றை அமைப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டால் அவை இலங்கைக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் நியாயமான விதத்தில் அணுக தயாராக உள்ளோம்.
இக் கோரிக்கை நிராகரிக்கப்படுமானால் பிரிந்து தனி அரசு அமைப்பததைத் தவிர வேறு வழி இல்லை என அவ் உரையில் பிரபாகரன் கூறியிருந்தார்.
தொடரும்..
(Erik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள். தொகுப்பு : வி. சிவலிங்கம்)
முன்னைய பகுதிகளை பார்வைிட இங்கே அழுத்தவும்>> (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்: 1..2..3..4..5..6..7)