என்னுடைய காதலனை தாக்கிய நபரை தங்காலை நீதிமன்றத்தில் வைத்தே அடையாளம் கண்டுவிட்டேன். உயிர் மீது இருந்த அச்சத்தின் காரணமாக அவரை நான் அடையாளம் காட்டவில்லை என்று பிரித்தானிய பிரஜையான குராம் ஷேகின் காதலியான விக்டோரியா எலஸ்சென்றானா சாட்சியமளித்தார்.
இந்த கொலை தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ரோஹனி வல்கம முன்னிலையில் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
அங்கு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரித்தானிய பிரஜையான குராம் ஷேக் தங்காலை ரிசோட் ஹோட்டலில் வைத்து 2011 ஆம் ஆண்டு டிசெம்பர் 25 ஆம் திகதி கொலைசெய்யப்பட்டார்.
இந்த வழக்கில், தங்கலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் சந்திரகுப்த விதாணகே பதிரண உள்ளிட்ட ஐவர் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஐவர் மீதும், விக்டோரியா எலஸ்சென்றானாவின் காதலனை கொலைசெய்தமை மற்றும் விக்டோரியா எலஸ்சென்றானாவை துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளே சுமத்தப்பட்டுள்ளன.
அரச சட்டத்தரணியான சிரேஷ்ட சட்டத்தரணி துசித முதலிகேயின் நெறிப்படுத்தலின் கீழ் விக்டோரியா எலஸ்சென்றானா தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
புலமைப்பரிசிலின் அடைப்படையில் கல்வி கற்பதற்காக நான் வடகொரியாவுக்கு சென்றிருந்த போது குராம் ஷேகினை சந்தித்தேன். குராம் ஷேக் அந்த காலத்தில் வடகொரியாவில் செஞ்சிலுவை சங்கத்தில் பணியாற்றினார்.
இரண்டரை வருடங்களாக நாங்கள் இருவரும் காதலர்களாக இருந்தோம். 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொள்வதற்கு எதிர்ப்பார்த்திருந்தோம்.
நான் இலங்கைக்கு இரண்டுதடவைகள் வந்திருக்கின்றேன். 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி இலங்கைக்கு வந்த நாங்களிருவரும் தங்காலையிலுள்ள ரிசோட் ஹோட்டலில் தங்கினோம்.
டிசெம்பர் 24 ஆம் திகதி இரவு ஹோட்டலில் களியாட்டம் ஒன்றிருந்தது. அதில் பங்கேற்றவர்கள் நடனமாடிகொண்டிருந்தனர். அன்று நள்ளிரவு குராம் ஷேகிற்கும் எனக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
அதற்கு பின்னர் ஷேக் என்னுடன் பேசவே இல்லை. நான் தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தேன்.
அழுதுகொண்டே நாங்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றுகொண்டிருந்தேன். அது நீச்சல் தடாகத்திற்கு அருகிலேயே இருந்து. அங்கிருந்தவர்கள் ஏன் ஏன் அழுகின்றார் என்று கேட்டனர்.
அப்போது நான் பயந்துவிட்டேன். அறையை நோக்கி ஓடினேன். அச்சந்தரப்பித்தில் சிலர் என்மீது தாக்குதல் நடத்தினர். என்னை நீச்சல் தடாகத்திற்குள் தள்ளிவிட்டனர்.
நீச்சல் தடாகத்தில் தண்ணீர் குறைவான பகுதியிலேயே நான் விழுந்தேன். அதிலிருந்து எழும்பி வருவதற்கு முயற்சிகையில் மீண்டும் என்னை தடாகத்திற்குள்ளே அவர்கள் தள்ளிவிட்டனர். மீண்டும் இழுத்தெடுத்தனர். ஒருகுழுவினருடன் அங்கு நின்றுகொண்டிருந்த ஒருவர் என் தலைக்கு உதைத்தார்.
மீண்டும் தடாகத்திற்குள் ஆழமான பகுதிக்குள் நான் விழுந்துவிட்டேன். அதிலிருந்து மிகவும் கஸ்டப்பட்டு மேலே வந்தேன்.
அப்போது ஷேக் சத்தம் போட்டார். அச்சந்தர்ப்பத்தில் அவர் கீழே விழுந்துகிடந்தார். நான் அவருக்கு அருகில் சென்றேன். அவர் உணர்வின்றி கிடந்தார். முகத்தில் வெட்டுக்காயங்கள் இருந்தன.
ஷேக்கை தூக்கி எனது மடியில் கிடத்தினேன். அவர் நினைவிழந்திருந்தார். அதன் பின்னர் மாத்தறை வைத்தியசாலையில் வைத்தே எனக்கு நினைவு திரும்பியது.
என்னுடைய கீழாடை இடுப்புக்கு தூக்கப்பட்டிருந்தது. மார்பகங்கள் ரீ சேட்டினால் மூடப்பட்டிருந்தன. உள்ளாடை அகற்றப்பட்டிருந்தது. அதன்பின்னர் என்னை கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றினர்.
ஷேக் மரணித்துவிட்டதாக வைத்தியர்கள் என்னிடம் தெரிவித்தனர். கராப்பிட்டிய வைத்தியசாலையிலிருந்து என்னை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றினர். இந்த காயங்களுக்கு இன்னமும் மருந்து எடுத்துகொண்டிருக்கின்றேன்.
சந்தேக நபர்களில் ஒருவரான லஹிரு கெலும் என்பவரே என்னை தாக்கினார் என்றார்.
இதனையடுத்து விசாரணை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் தங்கலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் சந்திரகுப்த விதாணகே பதிரணடுவின் விளக்கமறியலை நீடித்த நீதிபதி வழக்கு விசாரணையை இன்று வரைக்கும் ஒத்திவைத்திவைத்தார்.
இதேவேளை, குராம் ஷேய்க் கொலை வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 6 பேரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.