தீர்க்கமான கட்டத்தில் சி.ஐ.டி. விசாரணைகள்; களவாடப்பட்ட அடையாள அட்டையில் பெறப்பட்ட சிம் அட்டைகளை இராணுவ புலனாய்வுப் பிரிவு பயன்படுத்தியதன் பின்னணி தொடர்பில் தீவிர விசாரணை
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, எக்னெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை, கீத் நொயார், உபாலி தென்னகோன் ஆகிய ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என்ற விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ளது.
லசந்த விக்ரமதுங்க கொலை தவிர்ந்த ஏனைய சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் எனக் கூறப்படும் இராணுவ புலனாய்வாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களே லசந்த கொலையுடனும் தொடர்புபட்டுள்ளதாக சி.ஐ.டி. சில சான்றுகளை வெளிப்படுத்திக்கொண்டுள்ளது.
இந் நிலையில் அந்தப் புலனாய்வாளர்களுக்கு குறித்த ஊடகவியலாளர்களுடன் எவ்வித தனிப்பட்ட பகைமையும் இல்லை என்பதை உறுதிசெய்துள்ள சி.ஐ.டி., யாரின் தேவைக்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து தீர்க்கமான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றங்களுக்கு அறிவித்துள்ளனர்.
இந் நிலையில் அண்மையில் உபாலி தென்னக்கோன் மற்றும் கீத் நொயார் ஊட கவியலாளர்கள் மீதான தாக்குதல் தொட ர்பில் கைவிரல் ரேகை மற்றும் கண்கண்ட சாட்சியாளர்களின் சாட்சியின் பிரகாரம் கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வு கோப்ரல் ராஜபக் ஷ, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலையுடனும் தொடர்புபட்டிருப்பதாக சி.ஐ.டி. சந்தேகிக்கின்றது.
இதற்கான பிரதான சான்றாக அவரது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தின் தொடர்பாடல் கோபுரத் தகவல்களை சி.ஐ.டி. நம்புகின்றது.
குறிப்பாக ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, எக்னெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை, கீத் நொயார், உபாலி தென்னக்கோன் ஆகிய ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு மருதானை திரிப்போலி இராணுவ புலனாய்வு முகாம் தொடர்புபட்டுள்ளமையை ஏற்கனவே சி.ஐ.டி. வெளிப்படுத்திக்கொண்டுள்ளது.
குறிப்பாக கடந்த 2009 ஜனவரி 8 ஆம் திகதி கல்கிசை பகுதியில் வைத்து லசந்த விக்ரமதுங்க கூரிய ஆயுதங்களால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்தோர் அவரைக் கொலை செய்திருந்தனர். இது குறித்த விசாரணைகளில் 5 தொலைபேசி இலக்கங்களை சி.ஐ.டி. கண்டறிந்தது.
இந்த தொலைபேசி இலக்கங்கள், பிச்சை ஜேசுதாசன் என்பவரின் களவாடப்பட்ட அடையாள அட்டையினூடாக பெறப்பட்டிருந்ததுடன் அவற்றை மேஜர் புளத்வத்தவின் கீழ் செயற்பட்ட திரிபொலி முகாம் புலனாய்வாளர்கள் பயன்படுத்தி இருந்தமை கண்டறியப்பட்டது.
அத்துடன் அந்த இலக்கங்கள் ஜனவரி 5,6,7 ஆம் திகதிகளில் உபாலி தென்னக்கோனின் வீட்டை சுற்றி சஞ்சரிப்பதும், பின்னர் லசந்த கொலை இடம்பெற்ற தினத்துக்கு முன்னைய தினம் மாலை கல்கிசை டெம்பல்ஸ் வீதியில் சஞ்சரிப்பதும் கண்டறியப்பட்டுள் ளது.
இதன்போது அண்மையில் கைது செய்யப்பட்ட இராணுவ கோப்ரலின் தனிப்பட்ட தொலைபேசி இலக்கமும் கல்கிசை பகுதியில் இருக்கும் தொலைபேசி கோபுர தகவல்கள் ஊடாக உறுதியாகியுள்ளதாகவும், அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
இந் நிலையில் இந்த ஊடகவியலாளர் கள் மீதான தாக்குதல்களுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிய சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோரின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.எஸ். திசேராவின் ஆலோசனையில் சமூக கொள்ளை விசாரணை அறை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா தலைமை யிலான குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.