பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள எஸ்.யூ.வி வகை காரை பயன்படுத்துவது சர்ச்சைக்குள்ளாகிய நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் எடியூரப்பா.
நில மோசடி புகார்களையடுத்து 2011ல் கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பா ஷிமோகா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக உள்ளார்.
சமீபத்தில் இவர் கர்நாடக மாநில பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டார். இதன்பிறகு ரூ.1 கோடி மதிப்புள்ள டயோட்டா நிறுவனத்தின் அதி நவீன எஸ்.யூ.வி வகை காரில் எடியூரப்பா பயணம் செய்ய தொடங்கியுள்ளார்.
இந்த கார் குறித்து எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் சர்ச்சையை கிளப்பின.
இதுகுறித்து இன்று விளக்கம் அளித்துள்ள எடியூரப்பா, முன்னாள் அமைச்சரும், தொழிலதிபருமான முருகேஷ் நிரானி, தனக்கு இந்த காரை பரிசாக கொடுத்துள்ளதாகவும், 2 வருடங்களில் தனது மாநில தலைவர் பதவி நிறைவடைந்ததும் அவர் காரை திரும்ப பெற்றுக்கொள்வார் எனவும் கூறியுள்ளார்.
வறட்சியால் கர்நாடகா பாதிக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும், அதற்கு இந்த சொகுசு கார் வசதியாக இருப்பதாகவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.