எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் கரு ஜெயசூரிய? Nov 08, 2014 | 0:18 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஐதேகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரு ஜெயசூரிய நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், அவருக்கு ஆதரவளிக்க முடியாது என்று ஜேவிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளும், அமைப்புகளும் தெரிவித்திருந்தன.
அத்துடன், மங்கள சமரவீரவும் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்க போட்டியில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
இதையடுத்து, பொதுவேட்பாளரை ஐதேகவுக்குள் இருந்தே தெரிவு செய்யும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.
கரு ஜெயசூரியவை பொதுவேட்பாளராக நிறுத்தினால், ஆதரிக்கத் தயார் என்று ஜேவிபியும் பச்சைக்கொடி காண்பித்திருப்பதாகத் தெரியவருகிறது.
ஐதேகவுக்குள்ளேயும் அவருக்கு ஆதரவு கிடைத்துள்ளது.
இதற்கிடையே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்கு, பொதுவேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வது குறித்து மாதுளுவாவே சோபித தேரருடன், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட பிரமுகர்கள் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இவர்களும் கரு ஜெயசூரியவை பொதுவேட்பாளராக நிறுத்த ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிப்பது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்க பெரும்பாலான கட்சிகளும், அமைப்புகளும் மன் வந்துள்ளன.
போட்டியிடத் தயார் – என்கிறார் சஜித்
ரணில் விக்கிரமசிங்க அதிபர் தேர்தலில் போட்டியிட மறுத்தால், ஐதேகவின் சார்பில் தாம் போட்டியிடத் தயார் என்று கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையை, சஜித் பிறேமதாச நிராகரித்து விட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனை மறுத்துள்ள அவர், தாம் எந்த நேரத்திலும் ஐதேக சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.