மரண தண்டனை விதிக்கப்பட்ட குருநகர் மீனவர்களின் உறவினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஐவரும், யாழ்ப்பாணம் – குருநகர் மீனவர்கள் மூவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் இவர்கள் எட்டுப்பேருக்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களின் பின்னர் இந்திய மீனவர்கள் ஐவரையும் விடுவிப்பதாக நேற்று (19) தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் யாழப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்களையும் விடுவிக்குமாறு, அவர்களது மனைவி உள்ளிட்ட உறவினர்கள், யாழ். மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். சிறைச்சாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகம் வரை சென்றது.
இதன்போது, “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், இந்திய மீனவர்கள் விடுதலை இலங்கை மீனவர்களின் கதி என்ன, இலங்கை மீனவர்களின் குடும்பத்தினரின் அழுகுரல் இலங்கை அரசின் காதில் எட்டவில்லையா” போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை தாங்கியவாறு கதறி அழுது, போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மேலும் மீனவர்களின் குடும்பத்தினர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தின் முன்பாக வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், மீனவர்களின் பிள்ளைகள் எமது அப்பாவை விடுதலை செய்யுங்கள், எங்களின் அப்பா எங்களுக்கு வேண்டும் என கூறி அழுதார்கள்.
இதன்போது, வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் சின்னத்துரை தவராசா ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுடன் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தினார்.
மீனவர்களின் மனைவியர்களுடன் தொலைபேசியில் உரையாடிய அமைச்சர் “நேற்று புதன்கிழமை ஜனாதிபதியுடன் யாழ்ப்பாண மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாகவும், மீண்டும் இதனை எடுத்துக் கூறி அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாகவும்” வாக்குறுதி அளித்தார்.
இதேவேளை, நாளை மறுதினம் சனிக்கிழமை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் தன்னை சந்திப்பதற்கு வருமாறும், மீனவ குடும்பத்தினருக்கு அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.