இந்திய வல்லரசு எந்த சந்தர்ப்பத்திலும் தங்களைக் கைவிடாது என்று நம்பியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஜெனிவா தீர்மானத்தில் இந்தியா நடந்துகொண்ட விதமானது பாரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஊட்டியிருப்பது கவலை தருகின்ற விடயமாக இருந்தாலும்…..
இந்தியாவின் இந்த நிலை மாற்றத்துக்கான காரணமென்ன என்பதை சாணக்கியத்துடன் அலசி ஆராய வேண்டிய தேவையொன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கெதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு இம்முறை (2014) 23 நாடுகள் ஆதரவாகவும்
12 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்திருந்தபோதும் இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத 12 நாடுகள் பட்டியலில் தன்னையும் சேர்த்துக்கொண்டமை இலங்கை, தமிழகம், தமிழர்சார் நலம் விரும்பும் நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் இந்தியா, இலங்கை வாழ் தமிழர்களுக்கு அல்லது வடக்கு, கிழக்கு மக்களுக்கான தீர்வைப் பெற்றுத்தர இதய சுத்தியோடு நடந்திருக்கின்றதா என்பதை பின்னோக்கிப் பார்ப்பதன் மூலமே வரலாற்று பூர்வமான உண்மைகளைக் கண்டறிய முடியும்.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் இந்தியா எவ்வகை வகிபாகத்தைக் கொண்டிருந்தது அதன் பின் அதன் செல்நெறிப்போக்கில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை சிறிது நுணுக்கமாக ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.
இலங்கை அரசாங்கப் படைகள் விடுதலைப்புலிகளுக்கெதிரான போரை 2009 ஆம் ஆண்டு தொடங்கியபோது இந்தியாவானது அப்போருக்கு தார்மீக ஆதரவை வழங்கியிருந்ததுடன் சில இராணுவ உதவிகளையும் நல்கியிருந்தது என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் கசிந்த உண்மையாகும்.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது இந்தியாவின் இராணுவ ரீதியான அல்லது இராணுவ தளபாட ரீதியான பங்களிப்பும் உதவியும் கனதியாக இருந்தமையினாலேயே வெற்றி கொள்ள முடிந்ததுஎன்ற உண்மை பரவலாகப் பேசப்பட்ட விடயமாகும்.
அவ்வாறு உதவிய இந்தியா எல்லாவற்றையும் முந்திக் கொண்டு இலங்கை தமிழ் மக்கள் விவகாரத்தில் நாம் கூடிய அக்கறை கொண்டவர்களாக இருக்கிறோம்.
இலங்கையரசாங்கமானது 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வைக்கான முயற்சி எடுக்க வேண்டுமென அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறிவந்தது.
ஆனால் 2012 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவால் இலங்கைக்கெதிராக தீர்மானம் கொண்டு வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வரை தீர்வு பற்றியோ, நல்லிணக்கம் பற்றியோ, இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைப்பற்றியோ அதிக அக்கறை செலுத்தாமலே இந்தியா கூடியவரை மௌனம் காத்து வந்தது.
ஜெனீவா தீர்மானம் (2012) நெருங்குகின்ற வேளையில் தமிழகத்திலுள்ள அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் எவ்வித பேதமுமின்றி பல்வேறு போராட்டங்களையும் கிளர்ச்சிகளையும் மேற்கொண்ட நிலையில்தான் இந்திய மத்திய அரசுக்கு தர்மசங்கடமான நிலையொன்று உருவாகியது.
மதில் மேல் பூனையாக இருந்து கொண்டு எந்தப்பக்கம் பாய்வதென நின்று கொண்டிருந்தது. 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடியாமைக்குரிய காரணங்களாக சொல்லப்பட்டவை இரண்டு விடயங்களாகும்.
1. விடுதலைப்புலிகளுக்கெதிரானபோரின் போது இடம்பெற்ற யுத்த மீறல்கள் பற்றி விசாரிக்கப்படும்போது அந்தப் போரில் இந்தியாவின் பங்கு தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்ற அச்சம் சீனாவும் பாகிஸ்தானும் கொடுத்த ஆயுதங்கள் போல் தான் செய்த உதவியின் உண்மை வெளிப்படுத்தப்பட்டு விடலாம்.
2. இலங்கையில் சீனாவின் தலையீடு பற்றிய கவலை இலங்கையரசை தனது பிடிக்குள் வைத்திருக்க பல உதவிகளை சீனா இலங்கைக்கு நல்கியிருந்தமை இலங்கையின் சாய்வு நிலையை தடுக்க வேண்டுமாயின் தான் நெருக்கமுடன் இருக்க வேண்டுமென்ற சர்வதேச சாணக்கியம் ஆகியவையே இந்தியாவின் தயக்க நிலைக்கு காரணங்களாக அமைந்தன.
இருந்த போதிலும் தமிழகத்தின் நெருக்கடி நிலைகள் அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு நல்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியதன் காரணமாகவே அமெரிக்கத் தீர்மானம் சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்தியப் பாராளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக் கெதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்கும் என (19.03.2012) பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
ஆதரவளிக்குமென்று பகிரங்கமாகக் கூறிவிட்டு இரகசியமாக அமெரிக்க தீர்மானத்தில் இரண்டு திருத்தங்களையும் கொண்டு வந்திருந்தது.
(1) தீர்மானத்தில் 3 ஆவது சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் கீழ் நடத்தப்படும் விசாரணையில் ஐ.நா. சபை மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும் விசாரணையையும் மேற்கொள்வது தொடர்பாக சட்டரீதியான தொழில்நுட்ப உதவிகளையும் இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வாசகத்தை இந்தியா திருத்தி இலங்கை அரசுடன் ஆலோசனை நடத்தி அதன் ஒப்புதலைப் பெற்று நிறைவேற்ற வேண்டுமென இந்தியா திருத்தம் செய்தது.
(2)தமிழ் மக்களுக்கு செய்யப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளை ஆராயவரும் ஐ.நா.சபையின் குழுவினர் இலங்கை அரசின் ஒப்புதல் பெற்றுத்தான் இலங்கைக்கு செல்ல வேண்டுமென்றும் இந்தியா வலியுறுத்தியிருந்தது.
இந்தியாவின் இந்த திருத்தமானது அமெரிக்காவின் தீர்மானத்தை நீர்த்துப்போக வைத்துள்ளது என பரவலாகப் பேசப்பட்டது. இருந்த போதிலும் 2012 ஆம் ஆண்டு தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டுமென்ற கோரிக்கையை இலங்கை சார்பாக கியூபா போன்ற நாடுகள் முன்வைத்த போதும் அமெரிக்க அக்கோரிக்கைகளை நிராகரித்தது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இன்னுமொரு சம்பவம் இலங்கைக்கெதிராக நடந்தேறியது சனல் 4 நிறுவனம் இலங்கையின் கொலைக்களம் என்னும் ஆவணப்படத்தையும் வெளியிட்டிருந்தது.இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இந்தியா இந்த ஆவணப்படம் தொடர்பில் விசாரணை அவசியமென வலியுறுத்திக் கூறியிருந்தது. இத்தகையதொரு நெருக்குவாரமான சூழ்நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு மாறியதை கண்ட இலங்கையரசாங்கமானது அதிர்ச்சி அடைந்ததுடன்………
அமெரிக்காவால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு தாம் வாக்களிக்கப் போவதாக இரண்டு தினங்களுக்கு முன் இந்தியா அறிவித்தமை காரணமாக ஜெனிவாவில் எமது ஆதரவில் பாரியமாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் ஒருவேளை இந்தியா இவ்வாறு அறிவித்திருக்காவிட்டால் பிரேரணைக்கான வாக்கெடுப்பில் பெறுபேறுகள் வேறுவிதமாக அமைந்திருக்குமெனவும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்திருந்தார்.
எப்படி விமர்சனங்கள் தூவப்பட்டபோதும் 2012ஆம் ஆண்டு அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கெதிரான தீர்மானத்தை ஆதரித்து 25 நாடுகளும் எதிர்த்து 13 நாடுகளும் வாக்களித்திருந்தன. நடுநிலையாக 8 நாடுகளும் காணப்பட்டன.
ஏலவே 2012ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு நல்கிய இந்தியா 2013ஆம் ஆண்டு தீர்மானத்துக்கு கடுமையான ஆதரவு நல்குமென தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரும் இலங்கை வாழ் தமிழ் மக்களும் குறிப்பாக தமிழகமும் அதீத நம்பிக்கை கொண்டிருந்த போதும் இந்தியாவின் போக்கில் ஒரு நழுவல் நிலையே காணப்பட்டது.
அமெரிக்க தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் பட்டும் படாமலும் தமிழகத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குறுதி அளித்துவிட்டு அதேவேளை, இன்னுமொரு நழுவலான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
இது இந்திய அரசாங்கத்தின் கருத்தாகக் கூறப்பட்டது. அது யாதெனில், அமெரிக்கத் தீர்மானம் தொடர்பாக அமெரிக்காவுடன் இலங்கை நேரடியாக பேச வேண்டிய இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமெனவும் இந்தியாவின் வெளி விவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இராஜ்ஜிய சபையில் உரையாற்றும்போது கூறியிருந்தார்.
அத்துடன் இலங்கையை எதிர் நாடாகக் கொண்டு இந்தியா செயற்பட முடியாது எனவும் தெரிவித்திருந்தார். இவரின் இந்தக் கருத்து இந்தியப் பாராளுமன்றத்தில் குழப்ப நிலையை கொண்டு வந்தமையும் இலங்கை தமிழ் மக்களை காப்பாற்றுமாறு தமிழக எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தமை காரணமாக (5.3.2013)பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமையும் நடந்தேறிய சம்பவங்களாகும்.
அமெரிக்காவின் தீர்மானத்தை நீர்த்துப்போக வைக்கும் முயற்சியில் இந்தியா மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்துக்கு பகிரங்கமான ஒரு கோரிக்கையையும் விட்டிருந்தது.
அமெரிக்காவின் பிரேரணையை பலவீனப்படுத்த வேண்டாமென்று கோருவதற்காக கூட்டமைப்பினர் டில்லி விரைந்தனர். ஆனால், இவர்களின் பயணம் உயர் சந்திப்புகளுக்கு பெரியளவில் உதவவில்லையென்றே கூற வேண்டும்.
இந்தியா, அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு தர வேண்டுமென்று மாணவர் போராட்ட நிலை மேலும் மேலும் உக்கிர நிலை அடைந்த போது இந்திய அரசு நீண்ட மெளனத்தையே சாதித்து வந்தது.இதற்கிடையில் அமெரிக்காவின் தீர்மானத்தின் கனதியைக் குறைத்து நீர்த்துப்போக வைப்பதில் இந்திய அரசுக்கு வெற்றியென்ற தலைப்பில் 18.3.2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் திருத்தப்பட்ட தீர்மானம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அது அதிகளவு மென்மை கொண்டதாக இருந்தது என்றும் இதில் இந்தியாவின் செல்வாக்கு பொதிந்திருக்கிறது என சர்வதேச மன்னிப்புச்சபை இந்தியாவின் மீது குற்றம் சாட்டியிருந்தது. இவ்வாறான நெருக்கடியான சூழலில் டெல்லி அரசியலில் பல நெருக்கடிகளை உருவாக்கக்கூடிய சம்பவங்கள் இடம்பெற்றன.
மற்றொன்று
இலங்கையின் எதிர்ப்பை மீறி போர்க்குற்றம் தொடர்பான ஆவணப்படமொன்று நோபயர் ஸோன் என்ற தலைப்பில் (பாலச்சந்திரனின் படுகொலை ஜெனிவாவில் வெளியிடப்பட்டது) இவையெல்லாம் ஒரு நெருக்கடிப்பட்ட நிலையை உருவாக்கியதன் காரணமாக டெல்லியின் அரசியல் போக்கின் முக்கியஸ்தரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியாருமாகிய சோனியா காந்தியவர்கள் அவசர அவசரமாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.இலங்கைக்கெதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு இந்தியா தனது ஆதரவை நல்குமென்று அறிவித்திருந்தார் சோனியா. தயங்கி தயங்கியே மேற்படி அறிவித்தலை சோனியா விட்டிருந்தார் என்பதும் ஒரு வெளிப்படையான உண்மையாகும் இதன் பல்வேறு தளம்பல் நிலைகளிலிருந்து ஒரு தீர்மானத்துக்கு வரப்பட்டு அமெரிக்காவினால் இலங்கைக்கெதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்துக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் நடுநிலை வகித்தமை 08 நாடுகளாகவும் காணப்பட்டன. இதில் இந்தியா தீர்மானத்துக்கு ஆதரவாக அதாவது இலங்கைக்கு எதிராக வாக்களித்து இருந்தது.
இலங்கை தமிழர்கள் சுய உரிமையுடன் வாழ வகை செய்வோம். 13 ஆவது திருத்தத்துக்கு மேலதிகமாக அதிகாரங்களைப் பெற்றுத் தருவோமென இந்திய அரசு அடிக்கடி கூறிவந்த போதும் இவற்றை நிறைவேற்றுவதற்கான எந்தக் கடுந்தன்மை போக்கையும் பின்பற்ற விரும்பாத நிலைமையே காணப்பட்டது.
2014ஆம் ஆண்டின் அமெரிக்கப்பிரேரணை 23 நாடுகளின் ஆதரவுடன் வெற்றி காணப்பட்ட போதும் (27.3.2014) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத 12 நாடுகளின் பட்டியலில் தன்னை இருத்திக் கொண்டதுடன் பாகிஸ்தான் கொண்டு வந்த சில திருத்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானுடன் இந்தியா சார்ந்து நின்ற போதும் அவை தோற்கடிக்கப்பட்டு சபையில் நிறைவேற் றப்பட்டது.
இலங்கையின் இறைமையிலும் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிடுவது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என தனது இன்றைய நிலைப்பாட்டுக்கு நியாயம் கற்பிக்கும் இந்தியா 1987ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டுவரை இலங்கை விவகாரத்தில் பெரியண்ணனாக நடந்து கொண்டதை ஏன் மறந்துவிட்டது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கான மாற்றத்தை ஆராய்ந்து அறிந்து புதிய வியூகங்களை வகுக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கும் புலம்பெயர் சமூகத்துக்கும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் உண்டு என்பதை அவர் உணர்ந்து ஆவன செய்ய வேண்டும்.
திருமலை நவம்-