திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் நேற்று வழிபாடு நடத்தச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், கார் சாரதி காணாமற்போனதால், 12 நிமிடங்களுக்கு மேலாக காரில் காத்திருக்க நேரிட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் இரவு பெங்களூர் வழியாக திருப்பதியைச் சென்றடைந்தார்.
பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இரவைக் கழித்த அவர், நேற்று அதிகாலை 3 மணியளவில் சுப்ரபாத சேவையின் போது, திருப்பதி தேவஸ்தானத்துக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபாடு நடத்தினார்.
மைத்திரிபால சிறிசேன வழிபாடு முடித்துக் கொண்டு திரும்பி வந்து காரில் அமர்ந்த போது, சாரதி அங்கு இருக்கவில்லை.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவசர அவசரமாக திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் அவரைச் சூழ்ந்து பாதுகாப்பு அளித்தனர்.
12 நிமிடங்களுக்குப் பின்னர் சாரதி வந்து சேர்ந்தார். அவர் ஏழுமலையானை வழிபடச் சென்றதே பரபரப்புக்குக் காரணமாகும்.
இதையடுத்து பத்மாவதி மாளிகைக்குத் திரும்பிய ஜனாதிபதி மீண்டும் 6.30 மணியளவில் குடும்பத்தினருடன், ஏழுமலையான் ஆலயத்துக்கு வந்தார்.
மிக முக்கிய பிரமுகர்கள் வழிபடும் நேரத்தில், அவர் குடும்பத்தினருடன் சென்று வழிபாடு நடத்தினார்.
இதையடுத்து, விருந்தினர் விடுதிக்குத் திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெங்களூருக்குப் பறப்பட்டுச் சென்றார்.
ஜனாதிபதியின் திருப்பதி பயணம் குறித்து முன்கூட்டியே தகவல் தரப்பட்டாததால் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் இதுகுறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏழுமலையானை தரிசித்த மைத்திரி!
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனது மனைவியுடன் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனது மனைவி ஜெயந்தி புஷ்பா குமாரியுடன் நேற்று இரவு ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு வந்தார்.
இரவுப் பொழுதை திருப்பதியில் கழித்த அவர்கள் இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். சிறிசேனா இலங்கை அதிபராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
சிறிசேனா மற்றும் அவரது மனைவியை ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணா ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர். சாமியை தரிசித்துவிட்டு அவர்கள் விருந்தினர் மாளிகை செல்ல காரில் ஏறினர். கார் டிரைவர் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு வர 10 நிமிடங்கள் தாமதமானது. இதனால் சிறிசேனா 10 நிமிடங்கள் காத்துக் கொண்டிருந்தார்.
இதற்கிடையே இது தொடர்பாக போலீசாருக்கும், தேவஸ்தான அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.