ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையைப் பதவியில் மாற்றத்தைக் கொண்டுவருவது தொடர்பில் கட்சியின் உயர் பீடத்தில் ஆராயப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், தலைமைப் பதவிக்காக கட்சியின் பல சிரேஷ்டமானவர்கள் தொடர்பில் நேற்று (07) நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது கட்சியின் தலைமைப் பதவிக்காக பலரும் பலரின் பெயர்களையும் சிபார்சு செய்துள்ள நிலையில், முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ருவன் விஜயவர்தனவையே கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டுமென அதிகமானவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பில் விரைவில் கூடி ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சித் தலைமையில் தொடர்ந்து நான் இருக்க வேண்டுமென்ற தேவையில்லை. கட்சி யாப்பின்படி மேலும் 3 வருடங்களுக்கு தலைமைப் பதவியை வகிக்க என்னால் முடியும். இருப்பினும் பொருத்தமான ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் தலைமைப் பொறுப்பை கையளிக்கத் தான் தயாராகவுள்ளதாக தெரிவித்ததாக குறித்த சிங்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.