விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மகனும், சமாதானச் செயலாளரான புலித்தேவனின் மனைவியும், நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் மலரவனின் மனைவியும் வெள்ளைக்கொடி விவகாரத்தில் ஐ.நாவின் நேரடிச் சாட்சியங்களாக மாறியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி, இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும், இப்பொழுது அதன் நேரடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சில நேரடிச் சாட்சியங்கள் வெளிவந்துள்ளன.
இந்த நேரடி சாட்சியங்களின் வாக்குமூலங்களினால் இலங்கை அரசாங்கம் பல்வேறு நெருக்குதல்களுக்கு உள்ளாகவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் வடக்கில் 2009ம் ஆண்டு, நந்திக்கடலில் வைத்து விடுதலைப்புலிகள் அமைப்பு அதன் ஆயுதப்போராட்டத்தை நிறுத்தியது. அதன் பின் விடுதலைப்புலிகளின் தலைவர்கள், தளபதிகள் ராணுவத்தினரிடம் சரணடைந்தது தொடர்பாக இலங்கை அரசு பல்வேறு தகவல்களை முன்னுக்குப்பின் முரணாகத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மகனும், சமாதானச் செயலாளரான புலித்தேவனின் மனைவியும், நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் மலரவனின் மனைவியும் இவ் வெள்ளைக்கொடி விவகாரத்தில் ஐ.நாவின் நேரடிச் சாட்சியங்களாக மாறியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான அலுவலகத்தில் அமைந்துள்ள விசேட அறையில் விசேஷ கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது, ‘சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நாங்கள் சரணடையப் போகின்றோம் என்றார் தந்தை’ என கட்டுப்படுத்த முடியாத கண்ணீரோடு நடேசனின் மகன் தெரிவித்துள்ளார்.
வீடியோவை காண்க:
இலங்கையின் இறுதிக்கட்டப்போரின்போது நிகழ்ந்த வெள்ளைக்கொடி விவகாரத்தில், இலங்கை அரசாங்கம் பல்வேறு விதத்தில் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை தெரிவித்து வருகின்றது.
எனினும், தற்பொழுது நேரடிச்சாட்சியங்கள் பலர் ஐக்கிய நாடுகள் சபையோடு நேரடியான தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதனால், வரவிருக்கும் செப்டம்பர் மாத அறிக்கை, இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் கண்டமாக மாறும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
ஏற்கனவே இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதார ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள் என்பன வெளிவந்து மிகப்பெரிய அழுத்தங்களை இலங்கை ராணுவத்தினரும், அரசாங்கமும் சந்தித்திருந்தன.
மக்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடத்தப்பட்டமைக்கு பல்வேறு ஆதாரங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தற்பொழுது அதன் தாக்கம் இன்னும் வீரியம் பெறும் நிலை உருவாகியுள்ளது.
நேரடியாகவே பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளாக மாறும் பொழுது அழுத்தங்கள் பலமடங்காக அதிகரிக்கும்.
இந்நிலையில் செப்டம்பர் மாதம் வரவிருக்கும் போர்க்குற்ற அறிக்கையும், அதன் தாக்கமும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுக்கும் வல்லமைகளை கொண்டிருக்கும் என்கின்றார்கள் அரசியல் அவதானிகள்.
இதேவேளை இலங்கையின் இன அழிப்பு நடவடிக்கை குறித்த சுயாதீனமான விசாரணையை, சர்வதேச சமூகம் பொறுப்புடன் செயற்படுத்தி, இன அழிப்பில் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு பெறுமதியான தீர்வினையும், போர்க்குற்ற விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள்.
இக்கலந்துரையாடலுக்கான ஏற்பாட்டினை பிரிட்டன் தமிழர் பேரவையுடன் இணைந்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனமாகிய பசுமைத் தாயக அமைப்பும், அமெரிக்காவின் தமிழர் பாதுகாப்புச் சபையும் இணைந்து செய்திருந்தது.