நீண்டகாலத்தின் பின்னர் நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டத்தை அடைவதற்கு கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பம் கைநழுவிப்போய்விடுமோ என்ற கேள்வி பரவலாகவே எழ ஆரம்பித்திருக்கின்றது.
குறிப்பாக தென்னிலங்கையிலிருந்து சரியான தீர்வு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு முன்வைக்கப்படுமா என்று வரலாறு முழுவதும் இருந்துவரும் சந்தேகப் பார்வை மீண்டும் ஒருமுறை வலுப்பெற்றிருக்கின்றது என்று கூறலாம்.
அந்தளவுக்கு நிலைமைகள் பாரதூரமடைய ஆரம்பித்துள்ளன. அதாவது புதிய அரசியலமைப்பை கொண்டுவந்து அதனூடாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பிலிருந்த மக்களின் நம்பிக்கை பலவீனமடைய ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக நீண்டகாலத்துக்குப் பின்னர் கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பத்தில் நாடு பயனடையாதா என்ற ஏக்கத்தில் மக்கள் உள்ளனர்.
ஆனால் தென்னிலங்கையை பொறுத்தவரை வரலாற்றை மீண்டும் திரும்பிப்பார்க்கும் வகையிலான நகர்வுகளிலேயே ஈடுபட்டுவருவதை காண முடிகின்றது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த நாட்டு மக்கள் அரசியலமைப்பு ரீதியான மாற்றம் ஒன்றை எதிர்பார்த்தே ஆணையை வழங்கினர்.
அதாவது புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி அதனூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வுகாணவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களுக்கு இருக்கின்றது.
அந்த நோக்கத்துக்காகவே மக்கள் புதிய அரசாங்கத்துக்கு வாக்களித்தனர் என்பதனை ஒரு தர்க்கமாக முன்வைக்கலாம்.
2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காமையின் காரணமாக அரசியலமைப்பு ரீதியான மாற்றம் ஒன்றை மக்கள் எதிர்பார்க்கவில்லை என்று நாங்கள் கருத முடியாது.
மக்கள் அதனை எதிர்பார்த்தனர். காரணம் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு பிரதான கட்சிகளும் அரசியல் ரீதியான மறுசீரமைப்பு என்ற விடயத்தை மிகவும் பலமான வகையில் வலியுறுத்தியதை யாரும் மறுக்க முடியாது.
அந்தவகையிலேயே ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தபோது தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அனைவரும் எதிர்பார்த்தனர்.
அதற்கேற்ற வகையில் தேசிய அரசாங்கமும் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றி புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்துவருகின்றது.
ஆனால் இங்குதான் பிரச்சினையே ஆரம்பிக்கின்றது.
அதாவது அரசியலமைப்பு நிர்ணய சபையானது பிரதான வழி நடத்தல் குழுவை நியமித்து முக்கிய மூன்று விடயங்கள் குறித்து ஆராய்ந்தது.
அதாவது தேர்தல் முறை மாற்றம் அதிகாரப் பகிர்வு மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் மாற்றம் ஆகிய மூன்று விடயங்களை இந்த பிரதான வழிநடத்தல் குழு ஆராய்ந்தது.
மேலும் பிரதான வழி நடத்தல் குழு ஆறு உப குழுக்களை நியமித்து பல விடயங்களை ஆராய்ந்தது.
அந்த குழுக்களின் அறிக்கைகளும் முன்வைக்கப்பட்டுவிட்டன. தொடர்ந்து பிரதான வழிநடத்தல் குழுவுக்கு அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கை வெ ளியிடப்பட்டு அது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதமும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த இடைக்கால அறிக்கையில் உள்ள கட்சிகளின் நிலைப்பாடுகளை பார்த்த தரப்புக்களே கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன.
குறிப்பாக இந்த இடைக்கால அறிக்கையில் உள்ள ஒருசில விடயங்களை முன்வைத்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
விசேடமாக பௌத்த தேரர்களும் புதிய அரசியலமைப்புக்கு எதிராக களமிறங்கிவருவதை அவதானிக்க முடிகின்றது.
அதாவது ஒருமித்த நாடு என்று தமிழிலில் குறிப்பிடப்பட்டுள்ளமையே தற்போதைய பிரதான பிரச்சினைக்கு காரணமாக அமைந்திருக்கின்றது.
குறிப்பாக இந்த ஒருமித்த நாடு என்ற விடயம் கடும் எதிர்ப்பை ஒரு சிலர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை இந்த எதிர்ப்புக்களை சமாளிக்க அரசாங்கம் சில வியூகங்களை வகுத்துக்கொண்டிருப்பதை காண முடிகின்றது.
குறிப்பாக இந்த எதிர்ப்புக்களை சமாளிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அதாவது மூன்றுவிதமான சர்வகட்சி மாநாடுகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
அதாவது சர்வகட்சி, சர்வமத, மற்றும் புத்திஜீவிகள் மாநாடுகள் நடத்தப்பட்டு அரசியலமைப்பு செயற்பாடு தொடர்பில் தெளிவுபடுத்தல்கள் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி இந்த அரசியலமைப்பு மற்றும் நல்லிணக்க விடயத்தை முன்னெடுப்பதில் பாரிய கடினங்களை எதிர்கொண்டுவருகின்றார் என்பது அனைவருக்கும் தெரியும்.
எனவே ஜனாதிபதி எதிர்வருகின்ற பந்துகளுக்கு பாதுகாப்பு ரீதியான துடுப்பாட்டத்தையே முன்னெடுத்துவருகின்றார்.
அந்தவகையிலேயே தென்னிலங்கையில் வெகுவாக எழுந்துள்ள எதிர்ப்பலையை சமாளிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த சர்வகட்சி, சர்வமத மற்றும் புத்திஜீவிகள் மாநாட்டை நடத்துவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு காலத்தை இழுத்தடிக்கும் ஒரு செயற்பாடாக அமைந்துவிடுமா என்ற சந்தேகம் எழுவதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார். இவ்வாறு அதிரடி அறிவிப்புகள் தினம் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றுக்கு இந்த ஒருமித்த நாடு என்ற விடயத்தில் பாரிய தலையிடியை தென்னிலங்கை அரசியல் தரப்புக்கள் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன .
இந்நிலையில் இந்த ஒருமித்த நாடு என்ற விடயத்தை அகற்றிவிடுவதற்கு முயற்சிக்கப்படுமா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.
இது தொடர்பில் எம்மிடம் கருத்து வெளியிட்ட புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கும் கட்சி ஒன்றின் உறுப்பினர் ஒருமித்த நாடு என்ற விடயத்தை வைத்து அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முடியாது.
எனவே விரைவில் ஒருமித்த நாடு என்ற விடயத்தை நீக்கிவிட்டே வரைபை முன்வைக்கவேண்டிவரும் என்று சுட்டிக்காட்டினார்.
அந்தவகையில் பார்க்கும்போது விரைவில் ஒருமித்த நாடு என்ற விடயம் யோசனைகளிலிருந்து நீக்கப்பட்டுவிடுமோ என்ற கேள்வி எழுகின்றது.
பாராளுமன்ற விவாதத்தில் கடந்த புதன்கிழமை உரையாற்றிய பிரதமரின் கூற்றை பார்க்கும்போது இதுபோன்ற சந்தேகம் எழுகின்றது.
அதாவது கூட்டு எதிர்க்கட்சி முன்வைத்துள்ள நிலைப்பாட்டிலேயே நாமும் உள்ளோம். எம்மால் இணக்கப்பாட்டுக்கு வர முடியும். நானும் சிங்களவன் தான். நாம் சிங்களவர்களை அழிக்க முனையவில்லை.
ஒற்றையாட்சி மற்றும் பெளத்த மதத்துக்கான முன்னுரிமையை நீக்கும் நோக்கம் எமக்கு இல்லை. எனவே புதிய அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து முன்செல்வதா அல்லது இடைநிறுத்தி விட்டு அழித்து விடுவதா என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
அரசியலமைப்பினை தயாரிப்பதாயின் பொதுமக்களின் ஆதரவும் ஆலோசனைகளும் அவசியமாகும். அதன்பிரகாரமே அரசியலமைப்பு வரைபு வரும்.
இதில் எந்தவொரு மறைமுக தன்மையும் கிடையாது. எனவே இது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அதன்பின்னரே இறுதி அறிக்கையை நாம் முன்வைப்போம்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியாத பட்சத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு மீண்டும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் புதிய அரசியலமைப்புக்கான வரைபு வரும்போது ஒருமித்த நாடு என்ற பதம் இல்லாமல் ஒற்றையாட்சி என்ற விடயம் மட்டுமே வருமா என்ற சந்தேகம் முன்வைக்கப்படுகின்றது.
இந்நிலையில் இது தொடர்பில் இலங்கையின் மூத்த சர்வதேச ஊடகவியலாளர் அமல் ஜயசிங்க குறிப்பிடுகையில்,
ஒருமித்த, ஒற்றையாட்சி, ஐக்கிய போன்ற வார்த்தை பிரயோகங்களை வைத்துக்கொண்டிருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.
குறிப்பாக இலங்கையை பொறுத்தவரை அரசியல் தலைவர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கவேண்டியது அவசியமாகும். அவ்வாறு அரசியல் எதிர்பார்ப்பு இருந்தால் மட்டுமே தமிழ் பேசும் மக்களின் நீண்டகால பிரச்சினையை தீர்க்க முடியும்.
அந்த அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு இல்லாவிடின் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது.
இவ்வாறு தைரியமான அரசியல் முடிவை எடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் தயங்கும்போது இந்த ஒருமித்த நாடு என்ற விடயத்தை பேசிக்கொண்டிருப்பது காலத்தை வீணடிக்கும் செயற்பாடு என்றே நான் கருதுகின்றேன்.
மாறாக தற்போது உடனடியாக அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்தை எடுக்கவேண்டும். குறிப்பாக இதில் காணப்படுகின்ற ஒத்திசைவு பட்டியலை நீக்கி காணப்படுகின்ற அதிகாரங்களை அமுல்படுத்தவேண்டும். இதனை செய்வதே தற்போது மக்களின் எதிர்ப்பின்றி செய்ய முடியுமான ஒரு வழியாக அமைந்திருக்கின்றது.
அதனைவிடுத்து ஒருமித்த நாடு, ஐக்கிய நாடு என்று பேசிக்கொண்டிருந்தால் ஒன்றும் நடக்காமல் போய்விடும்.
காரணம் எமது நாட்டில் இந்த தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கான அரசியல் எதிர்பார்ப்பு தலைவர்களிடம் இல்லை. அதாவது இவ்வாறு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் தமது கட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று அரசியல் தலைவர்கள் அச்சமடைகின்றனர் என்று அவர் குறிப்பிடுகின்றார்.
மூத்த ஊடகவியலாளர் அமல் ஜயசிங்க கூறுவதைப்போன்று அரசியல் தலைவர்களின் அரசியல் எதிர்பார்ப்பு என்பது இங்கு மிக முக்கியமாகின்றது.
குறிப்பாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கடும் விட்டுக்கொடுப்புடன் தீர்வு விடயத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.
அந்த விட்டுக்கொடுப்பு தென்னிலங்கை தலைவர்களிடம் உள்ளதா? சம்பந்தனின் விட்டுக்கொடுப்பு இறுதியில் வீணடிக்கப்பட்டுவிடுமா என்பதே இங்கு பிரதான விடயமாகவுள்ளது.
என்று மில்லாதவாறு தமிழர் தரப்பு தலைமை இவ்வாறு அரசியல் ரீதியான விட்டுக் கொடுப்புடன் செயற் படும்போது அது குறித்து அரசாங்கம் சிந்திக்கவேண்டியது அவசியமாகும்.
“”அரசாங்கம் சர்வதேசத்திற்கும் மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும் இந்த நாட்டில் நிலையான சமாதானத்தினை ஏற்படுத்தும் நோக்கிலும் நிலையானதும் நியாயமானதுமான அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளவேண்டும்.
நாட்டில் உயர் ஜனநாயகம் பேணப்படவேண்டும் என்பதற்காகவே அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புச் செய்கின்றோம். பிரச்சினைகள் உள்நாட்டில் தீர்த்துக்கொள்ளப்படுவதற்கு விரும்புகின்றோம்.
அவ்வாறு தீர்த்துக்கொள்ளப்படும் பட்சத்திலேயே சர்வதேச அழுத்தங் களிலிருந்து விடுபடமுடியும்”” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான இரு பிரதான கட்சிகளும் இந்த விடயம் குறித்து சிந்தித்து தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வின் அவசியத்தை புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும்.
அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதைப் போன்று சம்பந்தனை வெறுங்கையுடன் அரசாங்கம் அனுப்பிவிடக்கூடாது. இது குறித்து தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் சிந்திக்கவேண்டியது அவசியமாகும்.
ரொபட் அன்டனி