“நான் கடந்த சில வருடங்களாக பெண் ஒருவரைக் காதலித்து வருகின்றேன். ஆயினும், என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே என் தந்தைக்கு நான் காதலிக்கும் பெண்ணைப் பிடிக்கவில்லை.
இதனால் எனது காதலை ஏற்க மறுத்து விட்டார். ஒரு நாள் என்னுடைய காதலியின் வீட்டுக்கு நான் சென்றிருந்த போது எனது தந்தை அங்கு வந்து எனது காதலியையும், என்னையும் தகாத வார்த்தைகளினால் திட்டிவிட்டு என் கரங்களை இறுகப்பற்றி இழுத்துக் கொண்டு வெளியில் வந்தார்.
பின் தந்தையின் முச்சக்கரவண்டியில் என்னைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். அதன்பின் வீட்டின் சமையலறை மூலையிலிருந்த இரும்புக் கம்பியொன்றை எடுத்து என்னை அடித்தார்.
அந்த இரும்புக் கம்பி என் உடலைப் பதம் பார்க்கவே நான் வலியால் “அப்பா அடிக்காதீங்க, அடிக்காதீங்க” என்று பலமாகக் கத்தினேன்.
எனினும், அப்பா அதைச் சிறிதும் காது கொடுத்துக் கேட்கவில்லை. இறுதியில் அப்பாவின் கையிலிருந்த இரும்புக் கம்பியை வாங்கி அப்பாவைத் தாக்க ஆரம்பித்தேன்.
அந்த நேரத்தில் எனக்கு இருந்த கோபம் தந்தை- மகன் உறவு, பந்தபாசம் என்பவற்றை மறைத்தது. எனவே தான், ஆத்திரம் தீரும்வரை என் அப்பாவைத் தாக்கினேன்.
அப்போது அப்பாவின் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால், தலையில் இருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது. பின் அப்பா மயங்கிக் கீழே வீழ்ந்தார்.
அதனைத் தொடர்ந்து அப்பா என்று கூடப் பார்க்காமல் அப்பாவின் உடலைத் தாண்டிக் கொண்டு வெளியில் வந்து முச்சக்கர வண்டியில் ஏறி அங்கிருந்து தப்பியோடினேன்“
இது மாவனல்லை பிரதேசத்தில் தந்தை ஒருவரைக் கொலை செய்த குற்றத்தின் பேரில் மாவனல்லை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதான சந்தேக நபரின் வாக்குமூலத்தின் ஒரு பகுதியாகும்.
மாவனல்லை படவல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 42 வயதான விமலசேன என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ஆவார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் அவரின் 23 வயதான மகனாவார்.
அன்று மாவனல்லை பொலிஸ் நிலையத்துக்கு 119 அவசர அழை ப்பு சேவையின் ஊடாகவே மேற்படி தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, மாவனல்லை குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளை கொண்ட குழுவொன்று மாவனல்ல படவல பிரதேசத்தை நோக்கி விரைந்தது.
எனினும், அப்போது உயிருக்குப் போராடிய நிலையில் விமலசேன மாவனல்லை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
எனவே, விமலசேனவை அங்கு சென்று பார்வையிடுவதற்காக பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு சென்றது. எனினும், அவர்கள் அங்கு சென்றபோது விமலசேனவின் உயிர் அவர் உடலை விட்டுப் பிரிந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் ஊடாக சடலம் பிரேத பரிசோதனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் இக்கொலைச் சம்பவம் தொடர்பாக தமது மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன்படி, சம்பவம் நடைபெற்ற இடமான மாவனல்லை படவல பிரதேசத்தை நோக்கிச் குற்றத்தடுப்பு பிரிவினர் சென்றனர். அங்கு விமலசேனவின் மனைவியிடம் இது தொடர்பாக வினவிய போது,
“என்னுடைய மூத்த மகனுக்கும் உஷா பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் இடையில் சில வருடங்களாக காதல் தொடர்பொன்று இருந்து வருகின்றது.
நானும் எனது கணவரும் இது தொடர்பில் அறிந்தே இருந்தோம். எனினும், என்ன காரணமென்று தெரிய வில்லை, என்னுடைய கணவருக்கு இது பிடிக்கவில்லை.
மகனுடைய காதல் விவகாரம் அறிந்த நாள் முதல் கணவன் இந்தக் காதல் தொடர்பை துண்டித்து விடுமாறு, தினமும் மகனிடம் கூறுவார் ஆயினும், மகனோ பிடிவாதக்காரன்.
கணவன் எத்தகைய தகாத வார்த்தைகளினால் திட்டினாலும் அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு இருப்பானே தவிர, அந்த பெண்ணுடனான காதல் தொடர்பை துண்டிக்க நினைக்கவில்லை.
இதனால், என்னுடைய கணவருக்கு மகன் மீது இன்னும் கோபம் அதிகரித்தது. ஒரே வீட்டில் இருந்தபோதும் இருவரும் கீரியும் பாம்பும் போலவே நடந்துகொண்டார்கள்.
சம்பவம் இடம்பெற்ற தினமான அன்று மகன், காதலிக்கும் பெண்ணின் வீட்டுக்கு சென்றிருந்தான். இதை எப்படியோ என்னுடைய கணவருக்குத் தெரியவர மகனைத் தேடி அங்கு சென்றார்.
அப்போது அவருடைய முச்சக்கர வண்டியிலேயே அங்கு சென்று மகனை அடித்து, வீட்டுக்கு கூட்டி வந்தார். வீட்டுக்கு வந்ததும் இரும்புக் கம்பியொன்றை எடுத்து மகனை அடித்தார்.
அடிக்கும் போது இனிமேல் அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்றால் உன் காலை உடைத்து முடமாக்கி விடுவேன் என்று கூறிக் கொண்டே அடித்தார்.
அதன்பின் தான் மகன் கணவருடைய கையிலிருந்த இரும்புக் கம்பியைப் பறித்து கணவனைத் தாக்கி விட்டு முச்சக்கர வண்டியில் அங்கிருந்து தப்பியோடினான்.
நான் கணவனை மகன் அடிக்கும் போது “அப்பா வயதானவர் அடிக்காதடா” என்று கெஞ்சி மன்றாடினேன். எனினும், இந்த அப்பாவி தாயின் அழுகுரல் அவன் காதில் கேட்கவே இல்லை.
என்னுடைய ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் மயங்கி கீழே விழுந்தார்.
பின் நான் பலத்த குரலில் கத்தினேன். என் சத்தத்தை கேட்டே அயவலர்கள் ஓடி வந்து முச்சக்கர வண்டியில் எனது கணவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
ஆயினும், பலன் கிடைக்கவில்லை. வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கணவர் இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டார். தந்தையும் மகனும் போட்ட சண்டையில் நானும் எனது இளைய மகனுமே இன்று் அநாதைகளாகி நிற்கின்றோம்.” என்று கண்ணீர் மல்க நடைபெற்ற சம்பவத்தை விமலசேனவின் மனைவி விபரித்தார்.
அதன்பின் பின் சந்தேக நபரான விமலசேனவின் மகனை கைது செய்து இது தொடர்பாக விசாரித்தபோது,
“நான் காதலிக்கும் பெண்ணின் முன்பாக எனது அப்பா தகாத வார்த்தைகளினால் திட்டினார். அடித்தார். என்னால் அந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. வெட்கத்தில் தலை குனிந்தேன்.
ஆயினும், அப்பா தானே என்று எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு மௌனமாக வீட்டுக்கு வந்தேன். இருந்தாலும், அப்பா வீட்டுக்கு வந்தும் அந்த பிரச்சினையை விடுவதாய் இல்லை.
வீட்டிலிருந்த இரும்புக் கம்பியை எடுத்து என்னை அடித்தார். இதனால் தான் தந்தையின் கையிலிருந்த அதே இரும்புக் கம்பியைப்பறித்து அவரை நானும் தாக்கினேன்.
இறுதியில் தந்தை பலத்த காயத்துடன் நிலத்தில் விழ, நான் , அங்கிருந்து முச்சக்கர வண்டியில் தப்பியோடினேன். நான் தந்தையை அடித்த போது என்னுடைய தாயும், இளைய சகோதரனுமே அருகிலிருந்தார்கள்.
நான் அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் நோக்குடனேயே காதலித்தேன். அவளை நான் உண்மையாகக் காதலித்தேன். எனினும் அப்பாவின் இந்த செயற்பாடுகளினால் நான் இன்று அவளையும் இழந்து விட்டேன், என்னுடைய வாழ்க்கையையும் இழந்து விட்டேன்.
பெற்ற தந்தை என்று கூட பார்க்காமல் கொலை செய்த ஒரு கொலையாளியாகவே அவள் இனிமேல் என்னைப் பார்ப்பாள். இவையெல்லாமே நடைபெற்றது என்னுடைய கட்டுப்படுத்த முடியாத கோபத்தினால் தான் ஆகும்.”
என்று கண்ணீருடன் தான் செய்த குற்றத்தினை ஒப்புக்கொண்டு பொலிஸ் விசாரணையின் போது கூறியிருந்தான்.
இக்கொலைச் சம்பவமானது மகனின் காதல் காரணமாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு தான் இறுதியில் தந்தையின் உயிரைக் குடித்தது. என்பது பொலிஸாருக்கு உறுதியானது.
எது எவ்வாறாயினும், இன்றைய இளம் சமூகத்தினரை அணுகும் முறைகளில் மாற்றங்கள் ஏற்படத் தவறுமாயின், இத்தகைய பாரதூரமான விளைவுகளையே சந்திக்க நேரிடும் என்பது மேற்படி சம்பவம் ஒரு சிறந்த உதாரண மாகும்.