ரசகுல்லாவுக்காக தனது குடும்பத்தை மணமகன் அவமானப்படுத்தியதாக கோமடைந்த மணமகள், திருமணத்தையே நிறுத்திய சம்பவமொன்று உத்தரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் குர்மபூரில், ஒரு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. மணமகள் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. கொஞ்சம் தாமதமாக உணவு பரிமாறப்பட்டு வந்தது.
உணவு மெனுவில் ரசகுல்லாவும் இருந்தது. பபே முறை என்பதால், மணமகளின் உறவினர் ஒருவர் ரசகுல்லா ஸ்டாலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்.
ஒரு நபருக்கு ஒரு ரசகுல்லா என்பது மணமகளின் உறவினருக்குக் கொடுக்கப்பட்டிருந்த உத்தரவு. ஆனால், மணமகனின் உறவினர் ஒருவர் இரண்டு ரசகுல்லாவை, அவராகவே எடுத்துவிட்டாராம்.
இதனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து, அந்த இடமே கிட்டதட்ட போர்க்களமாக மாறியது.
உணவு தட்டுகள் பறந்தன. உணவு பறிபாறும் கரண்டி மற்றும் ஸ்பூனால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதையெல்லாம், மணமகள் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார்.
தன் தந்தையையும் குடும்பத்தையும் அவமானப்படுத்தியது அவருக்குப் பிடிக்கவில்லை.
இதனால், இந்தத் திருமணம் வேண்டாம் என்று அந்தப் பெண் முடிவெடுத்தார். இதையடுத்து, மணமகளின் தந்தை இதுகுறித்து பொலிஸில் முறையிட்டுள்ளார். விசாரணை நடந்துவருகிறது.