சிறுமியொருவரின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், கிளிநொச்சி பிரஜைகள் குழு முக்கியஸ்தர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர், சிறுமியின் பெற்றோர் முறைப்பாட்டை வாபஸ் பெற்றதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பிரஜைகள் குழு உள்ளிட்ட பல சமூக மட்ட அமைப்புக்களில் முக்கிய பதவிகளில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரச்சார பீரங்கியொருவரே கைதாகினார்.
கிளிநொச்சியில் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டங்களையும் தலைமைதாங்கிய அவர், சிலதினங்களின் முன்னர் பூநகரி பகுதிக்கு சென்று கள்ளு அருந்தியதாகவும், பின்னர் வீதியோரமாக சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது. இதன்போதே சர்ச்சை உருவானது.
வீதியால் சென்ற சிறுமியொருவருக்கு அவர் தனது அந்தரங்க உறுப்பை காண்பித்ததாக, சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதையடுத்து, அவர் கடந்த சனிக்கிழமை பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கள்ளு அருந்தியதாகவும், வேலியோரம் சிறுநீர் கழித்துவிட்டு திரும்பியபோதே சிறுமி கண்டதாகவும், தான் வேண்டுமென்றே செயற்படவில்லையெனவும் அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், திடீரென சிறுமியின் பெற்றோர் முறைப்பாட்டை வாபஸ் பெறுவதாக அன்றைய தினமே பொலிஸ் நிலையத்தில் தெரிவித்தனர். சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மேலதிக நடவடிக்கைக்கு செல்லாமல் தவிர்த்து விடுவதாகவே அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் பொலிசாரால் விடுவிக்கப்பட்டார்.
குறித்த நபர், கிளிநொச்சி மகாவித்தியாலய கல்லூரி செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருபவர். மதுபோதை குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களால் அவர் பாடசாலை செயற்பாட்டில் ஈடுபடுவது, பாடசாலைக்குள் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.