யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த குற்றத்துக்காக என்னை கைதுசெய்வதற்கென அரசாங்கத்தினால் தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
இன்னும் ஒருமாத காலத்தில் நான் கைது செய்யப்படுவேன் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நான் அரசியல் பயணத்தை ஆரம்பிப்பேன் என மக்கள் எதிர்பார்க்கும் காரணத்தினால் தான் இவர்கள் என்னை சிறையில் அடைக்க முயற்சித்து வருகின்றனர்.
ஆனால் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று வெ ள்ளிக்கிழமை அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்ட கோத்தாபய ராஜபக் ஷ பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
நான் பொதுவாக பெளத்த மதத்தலைவர்கள் யாருடனும் அரசியல் கருத்துக்களை பரிமாற்ற மாட்டேன்.
எனினும் பீடாதிபதி என்னிடம் சில அரசியல் காரணிகள் குறித்து தனது கவலையை தெரிவித்தார்.
இப்போது பாரளுமன்றத்தில் அமைச்சர்களின் வாகனங்கள் தொடர்பில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆயினும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மக்கள் இன்றும் கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
அவ்வாறு இருக்கையில் இவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ நடவடிக்கைகள் எடுப்பது வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்பதை தெரிவித்தார்.
அதேபோல் எனக்கு எதிராக இடம்பெற்றும் சதிகள் எனக்கு நடக்கும் அநியாயங்கள் குறித்து நான் இவர்களுடன் கலந்துரையாடினேன்.
என்னை ஒருமாத காலத்தில் கைதுசெய்யப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் மஹிந்த அமரவீர ஒருசில கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆகவே இவர்களின் தேவைக்காக சட்டம் இயற்றப்படுகின்றது. இவர்கள் வழக்கு தாக்கல் செய்வதும் இவர்களே தீர்ப்பும் வழங்குவதும் என்றால் சுயாதீன சட்டம் என்ற ஒன்று இப்போது இல்லையென்றே கருத வேண்டியுள்ளது.
ராஜபக் ஷக்கள் என்பவர்கள் இந்த நாட்டில் கொள்ளையடித்த நபர்கள் அல்ல. இந்த நாட்டை காப்பாற்றிய நபர்கள்.
நான் அரசியல் செய்த நபர் அல்ல. ஒரு அதிகாரியாக இந்த நாட்டில் சேவை செய்த நபர். என்னை சிறை பிடிக்க வேண்டும் என அவர் கூறும் அளவிற்கு அவர் இந்த நாட்டிற்காக என்ன சாதித்துள்ளார்.
இந்த நாட்டிற்காக சேவை செய்து இந்த நாட்டின் உயரிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை நான் பெற்றிருந்தேன் என்றால் இந்த நாட்டில் நான் சேவையை சரியாக செய்துள்ளேன் என்றே அர்த்தமாகும்.
ஆகவே அரசியல் தேவைக்காக எம்மை பழிவாங்கி வருகின்றனர். நான் ஒரு குற்றம் செய்துள்ளேன்.
விடுதலைப்புலிகளை கொன்று இந்த நாட்டை சுத்தம் செய்தமையே நான் செய்த மோசடியாகும். அதற்காக என்னை சிறையில் தள்ள வேண்டும் என்றால் அதை செய்யட்டும்.
இந்த யுத்தம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாத்திரம் செய்த ஒன்றல்ல. நாட்டில் சகல ஜனாதிபதியின் கீழும் இந்த யுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் யுத்தத்தை முடித்த இராணுவம் மாத்திரமா குற்றம் செய்துள்ளது. இவற்றை சிந்தித்து பார்க்க வேண்டும்.
யுத்தத்தை முடித்த நாம் மட்டுமே குற்றம் செய்துள்ளோம். அதனால் தான் எம்மை தண்டிக்க முயற்சித்து வருகின்றனர் என்ற எனது கவலையை தெரிவிக்கவே நான் இங்கு வந்தேன்.
நான் அரசியல் பயணத்தை ஆரம்பிப்பேன் என மக்கள் எதிர்பார்க்கும் காரணத்தினால் தான் இவர்கள் என்னை சிறையில் அடைக்க முயற்சித்து வருகின்றனர்.
ஆனால் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. அதேபோல் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது இவர்களுக்கு தெரியவில்லை.
புதிய அரசியல் அமைப்பு கொண்டுவருவதிலும் நாட்டை குழப்புவதிலும் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர்.
புதிய அரசியல் அமைப்பு ஒன்று கொண்டுவருவதில் எமக்கு உடன்பாடு இல்லை. நாம் முழுமையாக இதை எதிர்க்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.