ரஷ்யாவில், ஒரு வருடம் என்னை கணவராக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தன்னை ஒரு நபர் அடகு வைத்த சம்பவமொன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இது சம்வம் குறித்து மேலும் தெரியவருவதாவது,ரஷ்யாவில் இணையத்தள வர்த்தகத்தில் ஈடுபட்ட வந்த அலெக்சாண்டர் க்ரமரென்கோ (வயது 21), என்பவர் அண்மையில் பல இலட்சம் மதிப்புள்ள பொருட்களை வாடிக்கையாளருக்கு உரிய நேரத்தில் கொடுக்க முடியாமல் போனதால், தாமதமாக அனுப்பப்பட்ட பொருட்கள் சேதமடைந்து திரும்பி வந்துவிட்டன.
இதனால் அவருக்கு சுமார் 30 இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து, உடனடியாகப் பொருட்களை வாங்கிய நிறுவனங்களிடம் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில், வேறுவழியின்றி அலெக்சாண்டர் தன்னை அடகு வைக்க முடிவெடுத்து, இணையத்தளத்தில் தன்னைப் பற்றிய குறிப்புகளை வெளியிட்டு, தன்னை பெண்கள் யாராவது 35 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தால், அவர்களுக்கு ஓராண்டுக் காலம் கணவனாக இருக்கிறேன் என விளம்பரப்படுத்தினார்.
இந்த விளம்பரத்தைக் கண்டவர்கள், யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் இந்தத் தகவல் உண்மை என்று தெரியவந்தபோது, அதிர்ந்து போனார்கள்.
மேற்படி விளம்பரத்தில்,‘எதிர்பாராத விதத்தில் எனக்கு மிகப் பெரிய தொகை நஷ்டமாகிவிட்டது. என்னிடம் பணம் இல்லை.
அதனால்தான் இந்த முடிவை எடுத்தேன். 35 வயதுக்குள் இருக்கும் பெண்கள், அதிக விலைக்கு ஏலம் எடுத்து, என் வாழ்க்கையைக் காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நான் நல்ல கணவனாகவும் சிறந்த மனிதனாகவும் ஓராண்டு வரை இருப்பேன். என்னை ஏலம் எடுத்து, மணந்துகொள்ளும் பெண்ணைப் பற்றிய விவரம் இரகசியமாக வைக்கப்படும்.
ஓராண்டுக்குப் பிறகு அவரவர் வழியில் திரும்பிவிடலாம்’ என குறிப்பிட்டுள்ளார்.