கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு அனுமதி மறுப்பு
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா பெப்ரவரி மாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்தத் திருவிழாவில் வருடாந்தம் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்கின்றமை வழமையாகும்.
கச்சத்தீவு செல்வதற்கு தமிழக பக்தர்கள் பொலிஸ் அனுமதி மற்றும் மத்திய அரசின் ஆதார் அட்டை ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இராமேஸ்வரத்தில் நடைபெற்றதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தமிழக அகதி முகாம்களில் வசித்து வருகின்ற இலங்கை அகதிகள் திருவிழாவில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்காதிருக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் தமிழகத்திலிருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், போதைப்பொருட்களை எடுத்துச்செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய பக்தர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை நாளைய தினத்துடன் நிறைவுபெறவுள்ளதாகவும் தமிழக செய்திகள் கூறுகின்றன.
கச்சத்தீவிலிருந்து மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பும் படகுகளில் இலங்கையைச் சேர்ந்த எவரையும் அழைத்து வரக்கூடாது எனவும் பக்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்குமாறு இந்திய பக்தர்களுக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அண்மையில் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.