கணவரை கொன்ற தொழிலாளியை கல்லால் அடித்துக்கொன்று பழிதீர்த்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் காளிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 51). இவருடைய மனைவி சுகந்தாமணி (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ரங்கசாமியும், அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமாரும் (51) நண்பர்கள். இருவரும் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரங்கசாமியும், ரவிக்குமாரும் மது அருந்திக்கொண்டு இருந்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார், ரங்கசாமியை அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் அடித்ததாக தெரிகிறது.
இதில் ரங்கசாமி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை என்பதால் சில நாட்களுக்கு முன்பு ரவிக்குமாரை கோர்ட்டு விடுதலை செய்தது.
சிறையில் இருந்து வெளியே வந்த ரவிக்குமார் காளிபாளையத்துக்கு சென்றார். ரங்கசாமி வீட்டுக்கு சென்ற அவர் எனக்கு எதிராக சாட்சி கூறிய உன்னையும், உன்னுடைய குழந்தைகளையும் கொல்லாமல் விடமாட்டேன் என்று சுகந்தாமணியை மிரட்டினார். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் ரவிக்குமாரை எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில் சுகந்தாமணி நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக காளிபாளையம் பஸ்நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு ரவிக்குமார் குடிபோதையில் வந்தார்.
உடனே ரவிக்குமாரின் தலையில் கீழே கிடந்த சிறிய கல்லை எடுத்து சுகந்தாமணி அடித்தார். இதில் நிலைகுலைந்த ரவிக்குமார் கீழே விழுந்ததும், அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து அவர் தலையில் தாக்கினார். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ரவிக்குமார் இறந்தார்.
அப்போது அங்கு நின்றிருந்த பொதுமக்கள் இதை கண்டு அலறியடித்து ஓடினார்கள். அங்கிருந்து சுகந்தாமணி நேராக சென்று கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்தார். பின்னர் அவரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
போலீசில் சுகந்தாமணி அளித்துள்ள வாக்குமூலத்தில், என்னுடைய கணவர் கொலை வழக்கில் சாட்சி சொன்னதால் என்னையும், எனது குழந்தைகளையும் கொன்றுவிடுவேன் என கத்தியை காட்டி ரவிக்குமார் மிரட்டினார். இதனால் அவரை நேரில் பார்த்ததும் ஆத்திரத்தில் கல்லால் அடித்துக்கொலை செய்தேன் என்றார்.