குழந்தை பிறந்து 11 மாதங்கள் ஆகியும் கணவர் அழைத்துச் செல்லாததால், குழந்தையைத் தண்ணீர் தொட்டியில் அமிழ்த்திக் கொன்றுவிட்டு, தானும் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள செவந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி மனோபிரியா. வயது 28. இவர்களுக்கு மொகிதா என்ற 11 மாத பெண் குழந்தை உள்ளது. மனோபிரியாவின் கணவர் மகேஷ், பெங்களூரில் உள்ள ஹோண்டா கம்பெனியில் என்ஜினீயராக உள்ளார்.
இவர்களுக்குத் திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது. குழந்தை பிறந்து 11 மாதங்கள் ஆகியும், மனோபிரியாவை மகேஷ் பெங்களூருக்கு அழைத்துச் செல்லவில்லை எனத் தெரிகிறது.
இதனால், கணவர் மகேஷிடம், தன்னை ஊருக்கு அழைத்துச்செல்லுமாறு பலமுறை வற்புறுத்தியும், அவர் அழைத்து செல்லவில்லை.
இதனால், விரக்தி அடைந்த மனோபிரியா, கரூர் மாவட்டம் வாங்கல் காவல் சரகத்திற்கு உட்பட்ட சங்கரன்பாளையத்தில் உள்ள அவரது தந்தை காளியப்பன் வீட்டுக்கு இன்று காலை வந்துள்ளார். மகள் சாதாரணமாகத்தான் வீட்டுக்கு வந்திருக்கிறார் என்று காளியப்பன் நினைத்துள்ளார்.
இதனால், மகள் மனோபிரியாவை வீட்டில் விட்டுவிட்டு, சொந்த வேலையாக வெளியே சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார் காளியப்பன்.
திறந்திருந்த கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனவர், அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்.
வீட்டில் தனது மகள் மனோபிரியா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதையும், குழந்தை தண்ணீர் தொட்டியில் அமிழ்த்தி கொலை செய்யப்பட்டதையும் கண்டு, அதிர்ச்சில் ஆடிபோயிருக்கிறார்.
அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், காளியப்பன் வீட்டின் முன் திரண்டனர். நடந்த சம்பவத்தை அறிந்ததும், வாங்கல் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூர்அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், தன்னையும் தன் 11 மாத குழந்தையையும் பெங்களூருக்கு அழைத்துப்போகாமல் மகேஷ் ஏமாற்றி வந்ததாகவும், இவர் கேட்கும்போதெல்லாம் அவர் தட்டிக்கழித்ததாகவும் தெரிகிறது.
இதனால், கணவர் மீதான கோபத்தில், கைக்குழந்தையைத் தண்ணீர் தொட்டியில் அமிழ்த்திக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.