”பொலிஸ் சுடுமளவுக்கு எமது தந்தை எந்தவொரு பிழையையும் செய்திருக்கமாட்டார். அவர் இங்கு இருக்கும்போது எந்தவொரு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதுமில்லை” என சுவிஸ் நாட்டில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பஸ்தரின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த குடும்பஸ்தரான சுப்ரமணியம் கரனின் குடும்பம் கதறியழும் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
2015ஆம் ஆண்டு தஞ்சம் கோரி சுவிஸிற்கு சென்ற கரன் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக டிசினோ மாகாணத்திலுள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் சக அகதிகளுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் நிலை முற்றவும் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் கரனை சரமாரியாகச் சுட்டுக்கொன்றனர்.
தமது கட்டளைக்கு கீழ்ப்படியாததன் காரணமாகவே அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுவிஸ் நாட்டு பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட பொலிஸார் எந்தவொரு காரணத்துக்காகவும் பணியிலிருந்து இடைநிறுத்தப்படமாட்டார் என்று பொலிஸ் தலைமை அதிகாரி ஒருவர் கூறியுள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.